Politics

"தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது" - தி இந்து நாளிதழ் விமர்சனம் !

தேர்தல் ஆணையத்தின் அண்மைக்கால அறிக்கைகளும், நடவடிக்கைகளும், பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கு பதிலாக, கூடுதல் சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளதாக தி இந்து நாளிதழ் தலையங்கம் தெரிவித்துள்ளது.

'A crisis of trust' என்ற தலைப்பில் தி இந்து ஆங்கில நாளிதழின் தலையங்கம் வெளிவந்துள்ளது. அதில், "தேர்தலில் தோல்வியுற்றவர்கள் கூட நியாயமான தோல்வி என ஏற்றுக் கொள்ளும் வகையில் தேர்தல் முறையின் நம்பகத்தன்மை இருக்க வேண்டும். இதுதான் பொதுவான ஜனநாயகம்.

ஆனால் தேர்தல் முறைகளில் உள்ள மோசடிகளால் தாங்கள் தோல்வியுற்றதாக வாய்ப்பை இழந்தவர்கள் நினைத்தால், அது தேர்தல் அமைப்பின் மீதான நம்பகத்தன்மை கேள்விக்குறியாகும். இந்திய தேர்தல் ஆணையத்திற்கு எதிராக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி எழுப்பும் கடுமையான குற்றச்சாட்டுகளை ஆய்வு செய்யவேண்டும்.

தேர்தல் ஆணையத்தின் அண்மைக்கால அறிக்கைகளும், நடவடிக்கைகளும், பொதுமக்களின் நம்பிக்கையை வலுப்படுத்துவதற்கும், வெளிப்படைத்தன்மையை அதிகரிப்பதற்கும் பதிலாக, கூடுதல் சந்தேகங்களை எழுப்புவதாக உள்ளது. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மோசடிக்கு அப்பாற்பட்டவை எனக் கூறுவதைத் தவிர பல கேள்விகளுக்கு தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை. விபாட் இயந்திரத்தின் பயன்பாடுகள் குறித்து வெளிப்படைத்தன்மை இல்லை.

தேர்தல் என்பது அரசியல் கட்சிகளுக்கும் தேர்தல் ஆணையத்திற்கும் இடையிலான பிரச்சனை மட்டுமல்ல, அது பொதுமக்களின் நம்பிக்கையை உறுதி செய்வதாக இருக்க வேண்டும், இதனை உறுதி செய்யும் வகையில் தேர்தல் ஆணையம் தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ள வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

Also Read: "சனாதன தர்மம் இந்தியாவை நாசமாக்கிவிட்டது, அதனால்தான் அம்பேத்கர் அதை எதிர்த்தார்"- மஹாராஷ்டிர MLA காட்டம்!