Politics

“எடப்பாடி பழனிசாமி ஆட்சியை விமர்சித்ததற்கு காரணம் இதுதான்!” : இயக்குநர் அமீர் திட்டவட்டம்!

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கு நடவடிக்கை குறித்து, பலதரப்பட்ட கருத்துகள் ஊடகங்களாலும், இணையவாசிகளாலும் பரப்பப்படும் நிலையில், ஒரு ஆட்சியை எவ்வாறு திறனாய்வு செய்ய வேண்டும் என இயக்குநர் அமீர் விளக்கமளித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்ததாவது,

“ஆட்சியில் சிக்கல் என்றால் ஆதாரத்துடன் வெளிப்படுத்த வேண்டும். போகிற போக்கில் விமர்சனங்கள் வைப்பது தவறு. தமிழ்நாட்டில் நிம்மதியற்ற நிலை இருக்கிறது என்றெல்லாம் இல்லை. தமிழ்நாட்டில் எல்லாரும் நிம்மதியாகதான் வாழ்ந்து வருகிறோம்.

குற்றமே இல்லாத சமூகம், உலகத்திலேயே இல்லை. குற்றம் நடந்த நிலையில், அரசின் நடவடிக்கை என்ன என்றுதான் பார்க்க வேண்டும்.

சாத்தான்குளம் கொலை நடந்து, வழக்கு பதியப்படாமல் இருந்ததால் போராட்டம் நடந்தது. 7 நாட்கள் போராட்டத்திற்கு பிறகு, அன்றைய முதல்வர் எடப்பாடி பழனிசாமி “மூச்சுத் திணறலால் இறந்தார்கள்” என பதில் சொன்னார். நடந்த சம்பவத்தை மறைத்தார்.

தூத்துக்குடி துப்பாக்கி சம்பவத்தை டி.வி.யில் பார்த்து தெரிந்துகொண்டேன் என்றார் எடப்பாடி, அதனால்தான் அவர்கள் மீது விமர்சனம் வைத்தோம்.

ஆனால், இன்றைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளிப்படைத்தன்மையுடன் செய்தியாளர்கள் கேள்விக்கு பதிலளித்து, நடந்தது தவறு என்று ஒப்புகொண்டதோடு உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட வீட்டினரிடம் Sorry என மன்னிப்பு கேட்டு, துக்கத்தில் நானும் பங்கேற்கிறேன் என்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். அந்த பண்மை பாராட்ட வேண்டும். இப்படிதான், ஒரு ஆட்சியை பார்க்க வேண்டும். பொதுவாக பாதுகாப்பில்லை, குற்றங்கள் நடக்கிறது என விமர்சிக்கக் கூடாது.

நான் தி.மு.க.வை சேர்ந்தவன் அல்ல, தி.மு.க.காரர் ஆக இல்லாமல் இருப்பதை சொல்கிறேன். பொத்தாம் பொதுவான விமர்சனங்களை தவிர்த்து, அரசின் நடவடிக்கையை பொருத்து திறனாய்வுகள் அமைந்திட வேண்டும்.”

Also Read: பாபா ராம்தேவின் பதஞ்சலி விளம்பரத்திற்கு தடை : டெல்லி உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு!