Politics
"முதலமைச்சர் உங்களுக்காக இன்னும் கூடுதலாக உழைக்க தயாராக இருக்கிறார்" - துணை முதலமைச்சர் பேச்சு !
தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கோயம்புத்தூர் மாவட்டத்தில் 9.67 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச தரத்திலான செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் அமைக்கும் பணி உள்பட பல புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, திட்டப்பணிகளை திறந்து வைத்து விழாவில் ஆற்றிய உரை
இன்றைக்கு கோயம்புத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த 25 ஆயிரம் பயனாளிகளுக்கு 240 கோடி ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்குவது, சுமார் 113 கோடி அளவில் பணி நிறைவுற்ற திட்டங்களை தொடங்கி வைப்பது அதே போல மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் 9 கோடி ரூபாய் மதிப்பில் செயற்கை புல்வெளி ஹாக்கி மைதானம் மற்றும் 8 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாணவர்கள் தங்கி பயிற்சி பெற ஹாஸ்டல் வசதி மற்றும் 2 மினி ஸ்டேடியம் அறிவிக்கப்பட்டு அந்த பணிகள் எல்லாம் துவங்கப்பட்டுள்ளன. புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுவது என்று இங்கு நடைபெறுகின்ற இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று உங்களையெல்லாம் சந்திப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன், பெருமையடைகின்றேன்.
குறிப்பாக, சுமார் 2 ஆயிரத்து 250 மகளிர் சுய உதவிக் குழு சகோதரிகளுக்கு 15 கோடி ரூபாய் அளவில் வங்கிக் கடன் இணைப்புகளும் இங்கே வழங்கப்பட இருக்கின்றது. அதே போல, 220 குடும்பங்களுக்கு வீட்டுமனை பட்டாவையும் இந்த மேடையிலே வழங்க இருக்கின்றோம்.
கோவைக்கு எப்போது வந்தாலும் ஒரு தனி புத்துணர்ச்சி கிடைக்கும். அந்த புத்துணர்ச்சியும், உத்வேகமும், உற்சாகமும் இன்றைக்கு உங்களை எல்லாம் பார்க்கும் போது எனக்கு மீண்டும் வந்திருக்கின்றது. நம்முடைய முதலமைச்சர் தலைமையிலான திராவிட மாடல் அரசு என்றாலே எல்லாருக்கும் எல்லாம் என்றுதான் அர்த்தம். அதற்கு ஒரு சிறந்த உதாரணமாக இன்றைக்கு இந்த நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இங்கே மாணவர்கள், இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள், விவசாயிகள் , தொழில் முனைவோர்கள், விளையாட்டு வீரர்கள் வந்திருக்கிறீர்கள். எல்லாவற்றுக்கும் மேலாக இந்த அரசிற்கு என்றைக்குமே பக்கபலமாக இருக்கக்கூடிய தாய்மார்கள் மகளிர் ஆயிரக்கணக்கில் இங்கு வந்திருக்கிறீர்கள்.
இப்படி சமூகத்தில் உள்ள அனைத்து தரப்புக்கும், அவர்களுடைய தேவை அறிந்து ஒவ்வொரு திட்டத்தையும் நிறைவேற்றுவதுதான், செயல்படுத்துவது தான் நம்முடைய நம்முடைய முதலமைச்சர் அவர்கள், நம்முடைய திராவிட மாடல் அரசு. அதனால் தான் நம்முடைய அரசின் திட்டங்கள் உங்கள் மத்தியில் மிகப்பெரிய வெற்றி பெற்று இருக்கிறது.
குறிப்பாக சொல்ல வேண்டுமானால், மகளிருக்கான திட்டங்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கிறது. நம்முடைய ஆட்சி அமைந்த பிறகு மகளிருக்கான விடியல் பயணம் திட்டத்திற்கான அந்த கையெழுத்து தான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் கையெழுத்து.
இதன் கீழ், இன்றைக்கு வரைக்கும் சுமார் 700 கோடி பயணங்களை மகளிர் கட்டணமில்லாமல் மேற்கொண்டு இருக்கிறார்கள். அதே மாதிரி புதுமைப்பெண் திட்டம் மூலம், உயர்கல்வி படிக்கின்ற சுமார் மூன்றரை லட்சம் மாணவிகளுக்கு, மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றது.
அதேபோல், தமிழ்ப்புதல்வன் திட்டம் மூலம், 3 லட்சத்து 50 ஆயிரம் மாணவர்களுக்கு மாதம் 1000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுகின்றது. இதுமட்டுமல்ல, மகளிர் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்துக் கொடுக்க சிரமப்படக் கூடாது என்று, முதலமைச்சருடைய காலை உணவுத் திட்டத்தை நம்முடைய முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இதன் மூலமாக ஒவ்வொரு நாளும் கிட்டத்தட்ட 21 லட்சம் மாணவர்கள் பயனடைஞ்சுட்டு வர்றாங்க.
இது எல்லாத்துக்கும் மேலாக ஒரு திட்டம். இந்தியாவே திரும்பி பார்க்கக்கூடிய ஒரு திட்டம், அது தான் கலைஞர் மகளிர் உரிமைத்தொகைத் திட்டம். இந்த திட்டம் மூலமாக ஒவ்வொரு மாதமும் கிட்டத்தட்ட ஒரு கோடியே 15 லட்சம் மகளிருக்கு மாதம் 1000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை கொடுக்கப்பட்டு வருகின்றது.
நேற்று முன் தினம் கூட நம்முடைய முதலமைச்சர் அவர்கள் சட்டப்பேரவையில் ஒரு அறிவிப்பை வெளியிட்டார்கள். கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்தின் கீழ், இதுவரை விண்ணப்பிக்காத மகளிர், வரும் ஜூலை மாதம் முதல் புதிதாக விண்ணப்பிக்கலாம் என்று அந்த அறிவிப்பில் சொல்லியிருக்கிறார்கள்.
ஆகவே, விரைவில் இன்னும் அதிகமான மகளிருக்கு உரிமைத்தொகை கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கே நான் உங்களோடு பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.
அதுமட்டுமல்ல, மகளிர் சுய உதவிக்குழு சகோதரிகளின் நலனை கருத்தில் கொண்டு, இந்தாண்டு 37 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு வங்கிக்கடன் இணைப்புகளை வழங்க நம்முடைய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.
குறிப்பாக, நம்முடைய கோவை மாவட்டத்தில் உள்ள குழுக்களுக்கு, இந்த 4 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 3 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அளவுக்கு முதலமைச்சர் அவர்கள் வங்கிக்கடன் இணைப்பை வழங்கி இருக்கிறார்கள்.
இதை எல்லாம் நம்முடைய முதலமைச்சர் அவர்களும், நம்முடைய திராவிட மாடல் அரசும் உங்களுக்கு கொடுக்கப்பட்டிருக்க கூடிய கடன் தொகையாக பார்க்கவில்லை. உங்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்கக் கூடிய நம்பிக்கை தொகையாக தான் நாங்கள் பார்க்கின்றோம்.
அந்த நம்பிக்கையை காப்பாற்றுகின்ற வகையில், நம்முடைய சுய உதவிக்குழுவினர் சிறப்பாக செயல்பட்டு வருகிறீர்கள். குறிப்பாக, இந்த கோவை மாவட்ட சுய உதவிக்குழு சகோதரிகளை பொறுத்தவரை ஏற்கனவே பல்வேறு சாதனைகளை செய்து காட்டியுள்ளீர்கள். அதில் சிலவற்றை மட்டும் நான் இங்கு குறிப்பிட்டு காட்ட விரும்புகின்றேன்.
கோவை மாவட்டம், காரமடை ஒன்றியத்தில் செயல்பட்டு வருகின்ற ஒரு சுய உதவிக்குழுவினுடைய பெயர் பூந்தென்றல் மகளிர் சுய உதவிக்குழு. இந்த குழுவில் உறுப்பினராக இருப்பவர் தங்கை பட்டுச்செல்வி. இவருடைய கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு மறைந்து விட்டார். தன்னுடைய குடும்பத்தை காப்பாற்ற போட்டோ ஸ்டுடியோ ஒன்றில் தங்கை பட்டுச்செல்வி அவர்கள் பணியாற்றி வந்தார். அங்கு அவர்கள் கொடுக்கக்கூடிய சம்பளம் வெறும் 9 ஆயிரம் ரூபாய். இந்த சம்பளம் குடும்பத்தை நடத்துவதற்கு போதுமானதாக இல்லை.
இதையடுத்து, தன்னுடைய குழுவின் மூலம், வங்கிக்கடன் இணைப்புக்கு அவர் விண்ணப்பித்தார். வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தின் மூலம் கடனாகவும், மானியமாகவும் 6 லட்சத்து 50 ஆயிரம் ரூபாயை அவர் பெற்றார். இதைக்கொண்டு, அவருடைய பகுதியில் சொந்தமாக போட்டோ ஸ்டூடியோ ஒன்றை தங்கை பட்டுச்செல்வி அவர்கள் தொடங்கி இருக்கின்றார். இதன் மூலம், இன்றைக்கு பட்டுச்செல்வி அவர்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் அளவிற்கு வருமானம் ஈட்டி வருகின்றார்.
போட்டோ ஸ்டூடியோ வேலைக்கு சென்ற தங்கை பட்டுச்செல்வி, இன்றைக்கு சொந்தமாக போட்டோ ஸ்டுடியோவை நடத்தி அவர் 4 பேருக்கு அவர் வேலை கொடுக்கிறார் நம்முடைய மகளிர் சுய உதவிக்குழுக்களுடைய வெற்றி, இது தான் நம்முடைய திராவிட மாடல் அரசினுடைய வெற்றி.
அவருக்கு அனைவரின் சார்பாகவும் நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
அவரைப் போலவே, ராஜா மகளிர் சுய உதவிக்குழுவைச் சேர்ந்த சகோதரி சித்ரா, மயில் மகளிர் குழுவைச் சேர்ந்த சசிகலா போன்றோரும், குழுவினுடைய உதவியின் மூலம் தொழில் முனைவோராக இன்றைக்கு உயர்ந்து இருக்கின்றார்கள். ஆண்டுக்கு 10 லட்சம் ரூபாய் வரை லாபம் ஈட்டுகின்றார்கள்.
அவர்களுக்கும் நம்முடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்வோம்.
மகளிர் சுய உதவிக்குழுவினைச் சேர்ந்த சகோதரிகள் இன்னும் பல்வேறு உயரங்களைத் தொட வேண்டும் என்றுதான் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் ஒவ்வொரு திட்டத்தினையும் செயல்படுத்தி வருகின்றார்கள்.
மகளிருக்காக நம்முடைய அரசு செயல்படுத்துகின்ற திட்டங்களால், இன்றை இந்திய நாட்டிலேயே வேலைக்கு செல்கின்ற மகளிரில் 43 சதவீதம் பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பது மிகப்பெரிய சாதனையாக தமிழ்நாட்டு மகளிர் படைத்து வருகின்றீர்கள்.
இன்றைய விழாவில், பட்டா வேண்டும் என்ற பல ஆண்டு கோரிக்கையை நிறைவேற்றும் வகையில், 220 பேருக்கு பட்டா வழங்கப்பட இருக்கின்றது. பட்டா என்பது வெறும் ஆவணம் கிடையாது. உங்களுடைய இடத்தின் மீது உங்களுக்கு இருக்கக்கூடிய சட்டப்பூர்வ உரிமை. உங்களுடைய உரிமையை
நம்முடைய அரசு இன்றைக்கு நிலைநாட்டி இருக்கிறது.
பட்டாக்களை பெற்றுள்ள அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, இங்கே நிறைய மாற்றுத்திறனாளிகள் வந்து இருக்கிறீர்கள். உங்களுக்கான திட்டங்களை நம்முடைய முதலமைச்சர் பார்த்து, பார்த்து செயல்படுத்தி வருகிறார்கள். உங்களுக்கு தெரியும் ஒரு வாரத்திற்கு முன்பு நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லாத வகையில் உள்ளாட்சி அமைப்புகளில் நியமன முறையில் மாற்றுத்திறனாளிகளை தேர்வு செய்வதற்கான சட்ட மசோதாவை சட்டப்பேரவையில் அறிமுகப்படுத்தினார்கள்.
இதன் மூலம் 13 ஆயிரம் மாற்றத்திறனாளி சகோதர, சகோதரிகளுக்கு உள்ளாட்சி அமைப்புகளில் பொறுப்புக்கு வர இருக்கிறார்கள். இப்படி அனைத்து தரப்பையும் கவனத்தில் கொண்டு நம்முடைய முதலமைச்சர் அவர்கள் திட்டங்களை செயல்படுத்துவதால் தான், இன்றைக்கு இந்தியாவிலே 9.69 சதவீதம் வளர்ச்சியோடு தமிழ்நாடு அனைத்து மாநிலங்களையும் விட முதல் இடத்தில் இருக்கின்றது.
இந்த வளர்ச்சி இன்னும் உயர வேண்டும் என்றால் அதற்கு இந்த அரசிற்கு உங்களுடைய ஆதரவு தேவை. இந்த அரசு என்றைக்கும், உங்களுக்கு, மக்களுக்கு பக்கபலமாக இருக்கும். மக்களாகிய நீங்களும் இந்த அரசுக்கு என்றைக்கு துணை நிற்க வேண்டும், பக்கபலமாக இருக்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கின்றேன்.
ஆகவே, இந்த அரசின் திட்டங்களை சாதனைகளை, பலன்களை, நலத்திட்டங்களை உங்களுடைய உறவினர்கள், நண்பர்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும். உங்களுக்காக இந்த அரசும், நம்முடைய முதலமைச்சர் அவர்களும் இன்னும் கூடுதலாக உழைக்க தயாராக இருக்கின்றார்கள்.
இந்த சிறப்புக்குரிய நிகழ்ச்சியில் நலத்திட்டங்களை பெற்ற அத்தனை பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்து இந்த சிறப்பான வாய்ப்பை ஏற்படுத்தி கொடுத்த வி. செந்தில் பாலாஜி அவர்களுக்கும், அமைச்சர் சகோதரி கயல்விழி செல்வராஜ் அவர்களுக்கும், மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்களுக்கும், வந்திருக்கக்கூடிய அனைத்து நலத்திட்டப் பயனாளிகளுக்கும் மீண்டும் என்னுடைய நன்றியை தெரிவித்து விடைபெறுகின்றேன்.
Also Read
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!
-
புதுப் பொலிவுடன் கடலூர் துறைமுகம்... முதலமைச்சர் முன்னிலையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் : விவரம்!
-
தகைசால் தமிழர் விருதை பெறும் காதர் மொகிதீன்... சுதந்திர தின விழாவில் வழங்கும் முதலமைச்சர்!