Politics
தமிழ்நாட்டுக்கு வரும் பிரதமர் மோடி இந்த உறுதிமொழியை வழங்கவேண்டும் - முதலமைச்சரின் முழு உரை !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீலகிரி மாவட்டம், உதகமண்டலம், அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் உரையின் விவரம் :
இந்த நீலகிரியின், மலை அழகை ரசிக்கவா? அருவியில் நனையவா? ஆறுகளில் குளிக்கவா? அணைகளைப் பார்க்கவா? பழங்குடி மக்களின் பண்பாட்டை போற்றவா? முதுமலைக்குச் செல்லவா? தேநீரை ருசிக்கவா? தாவரவியல் பூங்காவை பார்க்கவா? இல்லை படகு சவாரி செய்யவா? என்று இப்படி உதகைக்கு வருகின்ற எல்லோருக்குமே ஆர்வமும், ஆசையும் மனதிற்குள்ளே உற்சாகமும் கரைபுரண்டு ஓடும்! அந்தளவுக்கு திரும்பிய பக்கமெல்லாம் இயற்கை எழில் கொஞ்சும் ஊர்தான் மலைகளின் அரசியான ஊட்டிக்கு வந்திருப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன்!
உங்கள் ஊருக்கு விருந்தினராக வந்திருக்கின்ற எனக்கு, உங்களை பார்த்தால் கொஞ்சம் பொறாமையாகதான் இருக்கிறது! கொளுத்தும் கோடை வெப்பத்திற்கு ஒரு இளைப்பாறலாக, நீலகிரி மாவட்டத்தில், இந்த மாபெரும் அரசு விழாவில் கலந்து கொண்டிருக்கிறேன். இந்த விழாவை மிகுந்த எழுச்சியோடு மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய மாவட்ட பொறுப்பு அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அவர்களுக்கும், அரசு கொறடா ராமச்சந்திரன் அவர்களுக்கும், தலைவர் கலைஞர் அவர்களால் தகத்தகாய சூரியன் என்று அடையாளம் காணப்பட்டு, இன்றைக்கு இந்தியாவே திரும்பிப் பார்க்கும் அறிவிற் சிறந்த நாடாளுமன்றவாதியாக திகழும் உங்கள் எம்.பி.,
ஆ.ராசா அவர்களுக்கும், மாவட்ட ஆட்சியர் லட்சுமி பவ்யா அவர்களுக்கும், இவர்களுக்கெல்லாம் துணையாக இருந்து கடமையை நிறைவேற்றி இருக்கக்கூடிய அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்கள், வாழ்த்துகள்!
“நீலகிரியின் வளர்ச்சிக்கு அடித்தளம், தி.மு.க. ஆட்சி” என்று சொல்கின்ற அளவுக்கு இந்த மாவட்டத்திற்கு ஏராளமான திட்டங்களை ஆட்சியில் இருந்த போதெல்லாம் செய்து கொடுத்திருக்கிறோம்! அந்தச் சாதனைப் பட்டியலில் சிலவற்றை மட்டும் நான் சொல்லவேண்டும் என்றால்,
• உதகை ஏரி புதுப்பிப்பு!
• சுற்றுலா வளர்ச்சிக் கழகம் சார்பில் மாளிகை!
• இலவச இளம் படுகர் நலச்சங்கக் கட்டடம்!
• முதுமலை சரணாலயம் விரிவாக்கம்!
• இலங்கையில் இருந்து திரும்பிய தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களை கூடலூர், பந்தலூர், கோத்தகிரி வட்டங்களில் குடியமர்த்தி, அவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஏற்படுத்த தமிழ்நாடு தேயிலைத் தோட்டக் கழகம் உருவாக்கியது.
• தேயிலை தோட்டக் கழகத்தை உருவாக்கியது மட்டுமல்ல, தேயிலை விவசாயிகளுக்கு மானியம்!
• தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு 1996-ஆம் ஆண்டு முதல்
20 விழுக்காடு தீபாவளி போனஸ்!
• பழங்குடி மக்கள் வாழும் அனைத்துப் பகுதிகளுக்கும் “மின் இணைப்பு” மற்றும் கலர் டி.வி!
• கூடலூர் பகுதியில் சுமார் 10 ஆயிரம் வீடுகளுக்கு “மின் இணைப்பு”.
இப்படி நீண்ட பட்டியலே போடலாம். இது மட்டுமல்ல,
• நான் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது, உதகைக்கு மூன்றாவது குடிநீர்த் திட்டத்தைக் கொண்டு வந்தேன்.
• அதேபோல, உள்ளாட்சி கடை வியாபாரிகளுக்கு 'கடை உரிமை' நீட்டித்து, பெயர் மாற்றம் செய்து கொள்ள அனுமதி கொடுத்தேன்!
உங்கள் நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா இருக்கிறாரே, முதலமைச்சரான தலைவர் கலைஞரும் - துணை முதலமைச்சராக நானும், ஏன் இப்போது முதலமைச்சராக இருக்கும்போதும் அடிக்கடி சந்திக்கின்றபோதெல்லாம் நீலகிரி தொகுதிக்குத் தேவையான பல திட்டங்களைக் கேட்டு வாங்கிவிடுவார். ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர். அந்த வகையிலேயும் இந்த தொகுதிக்கு ஏராளமான பணிகளை அவர் செய்து கொடுத்திருக்கிறார். அதனால்தான், எப்போதும் உங்களுடைய நெஞ்சுக்கு நெருக்கமானவராக அவர் இருக்கிறார். இப்போது முதலமைச்சரானவுடன் மாநிலத்தின் சிறந்த திட்டங்களில் ஒன்றான எடை குறைவான குழந்தைகளுக்கு “ஊட்டச்சத்தை உறுதி செய்” திட்டத்தை இந்த ஊட்டியில் தான் இரண்டு வருடத்திற்கு முன்பு வந்தபோது நான் தொடங்கி வைத்தேன்.
உங்களுக்கு நன்மை செய்வதற்கு முதல் ஆளாக இருப்பவர்களும் நாங்கள்தான்! உங்களுக்கு ஒரு துன்பம் என்றால் ஓடோடி வந்து, துணை நிற்கக்கூடிய, துயர் துடைக்கின்ற முதல் ஆளாக இருப்பவர்களும் நாங்கள்தான்!
2009-ல் வெள்ளம் ஏற்பட்டபோது, துணை முதலமைச்சராக இருந்த நான், போர்க்கால அடிப்படையில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை முடுக்கி விடுவதற்கு நானே நேரடியாக வந்தேன். 2019-ல் நிலச்சரிவு ஏற்பட்டபோது, இரண்டு நாட்கள் இங்கேயே பாதிக்கப்பட்ட மக்களுக்கு துணையாக இருந்தேன். நம்முடைய ஆ.ராசா, திராவிட மணி, ஆர்.கணேசன், க.ராமச்சந்திரன், முபாரக் ஆகியோர் என் கூடவே இருந்தார்கள்.
நிலச்சரிவு ஏற்பட்ட இடங்களை எல்லாம் பார்த்து, வீடுகளை இழந்தவர்களை சந்தித்து, உதவிகளை செய்தோம், ஆறுதலை சொன்னோம். அன்றைய ஆட்சியாளர்கள் - தூக்கத்தில் இருந்த ஆட்சியாளர்களை எழுப்பி நீலகிரிக்கு வரவழைத்ததும் தி.மு.க.தான்! நாம் கேள்வி எழுப்பிய பிறகுதான், சில மணி நேரங்களாவது ஹெலிகாப்டரில் வந்து பார்வையிட்டுட்டு போனார் அன்றைய முதலமைச்சர்.
இதுதான் மக்களுடன் இருக்கக்கூடிய தி.மு.க.வுக்கும் - மக்களை ஏமாற்ற நினைக்கும் மற்றவர்களுக்கு இருக்கக்கூடிய வேறுபாடு! அதனால்தான், உங்களுடைய ஆதரவுடன் வளர்ச்சியை நோக்கி திராவிட மாடல் ஆட்சியை நாம் கம்பீரமாக இன்றைக்கு நடத்திக் கொண்டிருக்கிறோம்!
உயர்கல்வி சேர்க்கை விகிதத்தில் முதலிடம்! இந்தியாவிலேயே வறுமை நிலை குறைவான, பட்டினிச்சாவே இல்லாத மாநிலம் என்று சாதித்திருக்கிறோம்!
நேற்று காலையில், இந்து நாளிதழில் ஒரு செய்தி வந்திருக்கிறது. அதாவது, ஒன்றிய அரசு வெளியிட்ட தகவலில், 9.69 விழுக்காடு வளர்ச்சியுடன் இந்தியாவிலேயே அதிக வளர்ச்சி கண்ட மாநிலம் தமிழ்நாடுதான் என்று சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவிலேயே முதலிடம் மட்டுமல்ல, கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்நாட்டின் பெஸ்ட் இதுதான்! அதுவும் மற்ற அனைத்து மாநிலத்திலேயும் வளர்ச்சி குறைந்து கொண்டு வருகின்ற இந்த சூழலில், தமிழ்நாடு மட்டும் 'டாப்' கியரில் போவதாக அந்த செய்தியில் சுட்டிக்காட்டி இருக்கிறார்கள்! இந்த தனித்துவமும், தலைமைத்துவமும்தான் நம்முடைய திராவிட மாடல்!
இப்படிப்பட்ட வளர்ச்சியை நோக்கிய காலகட்டத்தில், இந்த நீலகிரி மாவட்டத்துக்கு நம்முடைய திராவிட மாடல் அரசு, கடந்த 4 ஆண்டுகளில் செய்து தந்திருக்கிற, இனியும் நிறைவேற்றப் போகின்ற திட்டங்களை நேற்று மாவட்ட ஆட்சியர் மற்றும் அதிகாரிகளுடன் ஒரு ஆய்வு நடத்தினேன். 60 அறிவிப்புகள் செய்து அதில் பெரும்பாலான திட்டங்களை நிறைவேற்றி, மீதியிருக்கக்கூடிய திட்டங்களையும் நிறைவேற்றுவதற்கு விரைவுபடுத்த சொல்லியிருக்கிறேன். அந்த பட்டியலை மட்டும் சொல்லட்டுமா?
• நீலகிரியில் வாழக்கூடிய பழங்குடியின மக்களுக்கு ஆயிரம் கான்கிரீட் வீடுகள்!
• மருத்துவத் துறையில் முழுமை பெற்ற மாவட்டமாக நீலகிரி மாவட்டம் திகழ இன்று இந்த நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன்பு, உதகையில், மருத்துவகல்லூரி மருத்துவமனையை திறந்து வைத்துவிட்டு வந்திருக்கிறேன்.
கடந்த ஆட்சியில் இதை அறிவித்தவுடன், வேறு எந்தப் பணியும் நடைபெறவில்லை. நாம் ஆட்சிக்கு வந்து, பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு அவர்கள் அடிக்கடி இந்த மாவட்டத்திற்கு வந்து இந்த மருத்துவமனை பணிகளை எல்லாம் ஆய்வு செய்தார். ஏனென்றால், மலைப்பகுதியில் இப்படி ஒரு மருத்துவமனையை அமைப்பது லேசுப்பட்ட காரியம் இல்லை. சாதாரண காரியமல்ல. பல சவால்கள் நிறைந்தது. அதையெல்லாம் வெற்றிகரமாக கடந்து திறந்து வைத்திருக்கின்ற இந்த மருத்துவமனையின் சிறப்பான செயல்பாட்டை நம்முடைய மருத்துவத் துறை அமைச்சர் திரு.மா.சுப்பிரமணியன் அவர்கள் உறுதி செய்வார் என்ற நம்பிக்கையோடு நாங்கள் திறந்து வைத்திருக்கிறோம். ஏனென்றால், நம்முடைய அரசின் முத்திரைத் திட்டமான மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில், மலைப் பிரதேசமான இந்த நீலகிரி மாவட்டத்தில் மிகச் சிறப்பாக செயல்படுத்திக் கொண்டு வருகிறது நம்முடைய மருத்துவத் துறை. வாகனங்கள் செல்ல முடியாத பழங்குடியினர் இடத்திற்கு கூட நம்முடைய அரசின் இந்த மக்களைத் தேடி மருத்துவத் திட்டம் இன்றைக்கு சென்று கொண்டிருக்கிறது. இதுவரை இந்தத் திட்டம் தொடங்கியதில் இருந்து 5 இலட்சத்து 96 ஆயிரம் பேருக்கு வீடுகளுக்குச் சென்ற மருத்துவத்தை செய்திருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, கூடலூரில் அரசு தலைமை மருத்துவமனை அதிநவீன வசதிகளுடன் தொடங்கப்பட்டிருக்கிறது.
• இதேபோல, குன்னூர், கோத்தகிரி உட்பட எல்லா வட்டங்களிலும், அதிநவீன வசதிகளுடன் மருத்துவமனைகள் துவங்கப்பட்டிருக்கிறது.
• வனவிலங்கு தாக்கி உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு கடந்த காலங்களில் 3 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதை உயர்த்தி,
10 லட்சம் ரூபாயாக நிவாரணத் தொகை வழங்கப்படுகிறது.
• அழிவின் விளிம்பில் இருந்த மாநில விலங்கான வரையாடுகளின் எண்ணிக்கைய அதிகரிக்க 25 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி அவற்றின் வாழ்விடங்களை பாதுகாக்கும் பணி நடைபெற்று வருகிறது.
• கேரளா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் கூடலூரில் புதிய பேருந்து நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.
• நீலகிரி மாவட்டத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க மினி டைடல் பார்க் வரப் போகிறது.
• தெப்பக்காடு யானைகள் முகாம் நவீனமயம் ஆகப் போகிறது.
• கூடலூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்துகின்ற பணிகள்
31 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பணிகள் நடைபெற்று வருகிறது.
• குந்தா மின் திட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
• 61 மருத்துவ உள்கட்டமைப்பு பணிகளும்,
• பள்ளிக்கல்வித் துறை மூலமாக 197 பணிகளும்,
• அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின்கீழ் 404 பணிகளும்
• 15 கோவில்களுக்கு குடமுழுக்கும் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
இப்படி ஏராளமான பணிகளை செய்து கொண்டு வருகிறோம். இது மட்டுமா? இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டில்,
• குன்னூரில் தோட்டத் தொழிலாளர்கள், பழங்குடியின மாணவர்கள் உட்பட எல்லா தரப்பு மக்களும் எளிதாக உயர்கல்வி பெற புதிய கலைக் கல்லூரியை அறிவித்திருக்கிறோம்.
• உதகையில், சூழலியல் பூங்கா அமைக்க 70 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியிருக்கிறோம்.
அதுமட்டுமல்ல, இன்றைக்கு 33 ஆண்டுகளாக வீட்டுமனை பட்டாக்கள் கிடைக்காமல் இருந்த பழங்குடியின மக்களுக்கு முதல் கட்டமாக 18 பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்கி அவர்கள் வாழ்வில் ஒளியேற்றி இருக்கிறோம்.
ஊட்டிக்கு யார் வந்தாலும், உடலும், மனமும் குளிர்ந்துதான் திரும்பிப் போவார்கள்! அப்படிப்பட்ட உங்கள் மாவட்டத்திற்கு வந்திருக்கின்ற நான் உங்களை குளிர்விக்கின்றது போல 6 புதிய அறிவிப்புகளை இப்போது வெளியிடப் போகிறேன். இல்லையென்றால், ராசா விடமாட்டார். நீங்களும் விடமாட்டீர்கள்.
முதல் அறிவிப்பு
நீலகிரி மாவட்டத்தில், சொந்தமாக வீடு இல்லாத ஏழை, எளிய மக்களுக்காக கூடலூரில் 26 கோடியே 6 லட்சம் ரூபாய் செலவில் 300 வீடுகள் கொண்ட புதிய கலைஞர் நகர் அமைக்கப்படும்!
இரண்டாவது அறிவிப்பு
பழங்குடி மக்கள் நிறைந்து வாழுகின்ற உங்கள் மாவட்டத்தில், அவர்கள் வாழ்வியலை எல்லோரும் தெரிந்து கொள்கின்ற வகையில் காட்சிப்படுத்தவும், அதுபற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளவும், 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில் “பழங்குடியினர் அருங்காட்சியகம் மற்றும் ஆராய்ச்சி மையம்” அமைக்கப்படும்!
மூன்றாவது அறிவிப்பு
நீலகிரி மாவட்டம் முழுக்க இருக்கின்ற இயற்கை அழகை சுற்றுலாப் பயணிகள் கண்டு களிக்கின்ற வகையில், “எங்கும் ஏறலாம் – எங்கும் இறங்கலாம்” எனும் ‘ஹாப் ஆன் – ஹாப் ஹாஃப்’ சுற்றுலா முறை, 5 கோடி ரூபாய் செலவில், 10 புதிய பேருந்துகளுடன் தொடங்கப்படும்!
மிக முக்கியமான நான்காவது அறிவிப்பு
ஊட்டியில் சுற்றுலா காலங்களில் ஏற்படக்கூடிய போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கு, 20 கோடி ரூபாய் செலவில் ‘மல்ட்டி லெவல் கார் பார்க்கிங்’ வசதி அமைக்கப்படும்!
ஐந்தாவது அறிவிப்பு
நடுகாணி “மரபணுத் தொகுதி சூழலியல் இயற்கைச் சுற்றுலா மையம்”
3 கோடி ரூபாய் செலவில் மேம்படுத்தப்படும்!
ஆறாவது அறிவிப்பு
பழங்குடியின மக்கள் வாழும் பகுதிகளில், 5 கோடியே 75 லட்சம் ரூபாய் செலவில், 23 சமுதாயக் கூடங்களும், நகர்ப்புறப் பகுதிகளில் வாழுகின்ற பழங்குடியினருக்கு, 10 கோடி ரூபாய் செலவில் 200 வீடுகளும் கட்டித் தரப்படும்!
இப்படி எல்லோருடைய தேவையையும் நிறைவு செய்கின்ற அரசு இது! இந்தியா முழுவதும் எல்லோரும் பாராட்டுகின்ற, பிற மாநிலங்களும் பின்தொடருகின்ற நம்முடைய திராவிட மாடலின் முத்திரைத் திட்டங்களில் நீலகிரி மாவட்டத்தில் 3 தொகுதிகளில் எத்தனை பேர் பயனடைந்திருக்கிறார்கள் கேட்டீர்கள் என்றால், இப்போது சொல்கிறேன்.
• நம்முடைய அரசின் மூலமாக, மாதந்தோறும் ஆயிரம் ரூபாய். ஒரு லட்சத்து 16 ஆயிரம் சகோதரிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்குகிறோம்!
• ஆயிரத்து 771 புதுமைப் பெண்களுக்கும்!
• ஆயிரத்து 735 தமிழ்ப் புதல்வன்களுக்கும் ஆயிரம் ரூபாய் வழங்குகிறோம்!
• நான்கு ஆண்டுகளில் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கும் மேல் கடனுதவி,
• 23 ஆயிரம் கர்ப்பிணித் தாய்மார்களுக்கு நிதி உதவி
• மூவாயிரத்து 62 பேருக்கு மனைப்பட்டாக்கள்
• மூவாயிரத்து 545 பேருக்கு வீடுகள்
இப்படி ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டமாக இருந்தாலும், ஒவ்வொரு வீட்டிற்குமான திட்டமாக இருந்தாலும், எல்லாவற்றையும் பார்த்துப் பார்த்து செய்து தருகின்ற அரசாக நம்முடைய திராவிட மாடல் அரசு செயல்பட்டு வருவதற்கு இவ்வளவு நேரம் நான் சொன்ன பட்டியல் ஒரு சிறிய சாம்பிள்தான் இவையெல்லம்!
நாங்கள் உழைப்பது இந்தியா முழுமைக்குமான சமூகநீதி - மாநில சுயாட்சி – கூட்டாட்சி - மதநல்லிணக்கம் ஆகிய உயர்ந்த கருத்தியல்களை வென்றெடுப்பதற்காக தான். அதனால் தான் நம்முடைய கழகத்தின் எம்.பி.க்கள் எல்லோரும் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் எடுத்து வைக்கும் வாதங்கள் இந்தியாவையே காப்பாற்றுவதாக அமைந்திருக்கிறது. இதைப்பார்த்து இப்போது என்ன செய்கிறார்கள் - தமிழ்நாட்டின் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை குறைக்க சதி செய்கிறார்கள். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் மிகப்பெரிய சதி நடக்க இருப்பதை முதன்முதலில் உணர்ந்து அரசுக்கு எதிராக குரல் கொடுத்த மாநிலம் தமிழ்நாடுதான். வரவிருக்கின்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு அடிப்படையில், மேற்கொள்ளப்போகின்ற தொகுதி மறுசீரமைப்பு, நம்மைப் போன்ற மாநிலங்களை வெகுவாக பாதிக்கப் போகிறது.
மக்கள் தொகையை பல்வேறு சமூகநலத் திட்டங்கள் மூலமாக கட்டுப்படுத்திய நம்மைப் போன்ற மாநிலங்கள் - நாடாளுமன்றத் தொகுதிகள் எண்ணிக்கையை பெரிய அளவில் இழக்க நேரிடும். இதைப்போல, பிற தென் மாநிலங்களும் தங்களுடைய தொகுதிகள் எண்ணிக்கையை இழப்பார்கள். உடனடியாக இது தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்டினேன். அந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, இதுபோல பாதிக்கப்படுகின்ற மாநிலங்கள் எல்லாவற்றையும் இணைத்து சென்னையில் ஒரு கூட்டம் கூட்டப்பட்டது.
ஏழு மாநிலங்களைச் சேர்ந்த 22 கட்சிகள் அந்த கூட்டத்தில் கலந்து கொண்டார்கள். அந்தக் கூட்டத்தின் முடிவின்படி, அகில இந்தியா முழுமைக்குமான கூட்டு நடவடிக்கைக் குழுவை அமைத்திருக்கிறோம். அந்த குழுவின் சார்பில், பிரதமர் திரு. மோடி அவர்களை சந்திக்க தேதி கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறோம். பிரதமர் அவர்களும் விரைவில் நேரம் ஒதுக்குவார் என்ற நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கிறோம். இன்னும் சில மணி நேரத்தில், இராமேஸ்வரத்திற்கு பிரதமர் வர இருக்கிறார். நீலகிரி விழாவில் கலந்து கொள்வதால், இராமேஸ்வரம் விழாவில் என்னால் பங்கேற்க முடியாத நிலைமை. இந்த சூழ்நிலையை நான் அவருக்கு ஏற்கனவே தெரிவித்துவிட்டேன். அந்த நிகழ்ச்சியில், நம்முடைய அமைச்சர் பெருமக்கள் மாண்புமிகு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு அவர்களும், பால்வளத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் அவர்களும் பங்கேற்கிறார்கள்.
இந்தக் கூட்டத்தின் மூலமாக, இந்த நிகழ்ச்சியின் மூலமாக, உங்கள் மூலமாக தமிழ்நாட்டுக்கு வரக்கூடிய மாண்புமிகு பிரதமர் திரு. மோடி அவர்களை நான் கேட்க விரும்புவது, தமிழ்நாட்டு மக்களுக்கு ஏற்பட்டுள்ள நியாயமான அச்சத்தைப் நீங்கள் போக்கவேண்டும்.
“தென் மாநிலங்கள் உள்ளிட்ட மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுடைய தொகுதி விழுக்காடு குறையாது” என்கிற உறுதிமொழியை தமிழ்நாட்டு மண்ணில் நின்று நீங்கள் வழங்கவேண்டும். அதற்கான அரசியலமைப்புச் சட்டத் திருத்தத்தை நாடாளுமன்றத்திலும் நிறைவேற்ற வேண்டும். இது ஏதோ வெறும் தொகுதியின் எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல - இது நம்முடைய அதிகாரம், உரிமைகள் மற்றும் எதிர்கால நலன்கள் பற்றிய கவலை!
புதுச்சேரியுடன் சேர்த்து 40 எம்.பி.கள் இருக்கும்போதே தமிழ்நாட்டின் குரலை நாடாளுமன்றத்தில் நசுக்குகிறார்கள். இந்த எண்ணிக்கையும் குறைந்தால், தமிழ்நாட்டையே ஒழித்துவிடுவார்கள்; நசுக்கிடுவார்கள். இந்தித் திணிப்பு, நிதி ஒதுக்கீடு மற்றும் சிறப்புத் திட்டங்களில் தமிழ்நாடு புறக்கணிப்பு என்று நம்முடைய எம்.பி.க்கள் நாடாளுமன்றத்தில் நம்முடைய மாநிலத்துக்காக மட்டுமில்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவுக்காகவும் பேசுகிறார்கள். அதனால்தான், நம்முடைய வலிமையை குறைப்பதற்கு பா.ஜ.க. துடியாக துடிக்கிறது.
தொலைக்காட்சியை ஆன் செய்தால், யூடியூப், சோஷியல் மீடியாவுக்குள்ள போனால், நம்முடைய உறுப்பினர்கள் பேச்சுதான் அனைத்து இடங்களிலும் ஒலிக்கிறது. வக்ஃபு வாரிய திருத்தச் சட்டத்தை எப்படி நள்ளிரவு 2 மணிக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு அனைத்து எதிர்க்கட்சிகளுடன் கடும் எதிர்ப்பையும் மீறி நிறைவேற்றி இருக்கிறார்கள் என்று பார்த்திருப்பீர்கள். தொடக்கம் முதலே தமிழ்நாடு அரசும், தி.மு.க.வும் அதைக் கடுமையாக எதிர்த்தோம். நாடாளுமன்றக் கூட்டுக் குழுவில் இடம்பெற்றிருந்த நம்முடைய திரு. ஆ.ராசா அவர்களும், திரு. அப்துல்லா போன்றவர்கள் எல்லாம் அந்தப் பரிந்துரைகளை படித்துப் பார்த்துவிட்டு எதிர்ப்பை தெரிவித்திருக்கிறார்கள். ஆனால், எதையும் காதில் வாங்காமல், ‘வக்ஃபு திருத்த சட்டம்’ ஜனநாயகத்திற்கு விரோதமான முறையில் நிறைவேற்றப்பட்டிருக்கிறது. அப்போதும், அனைத்து எதிர்க்கட்சிகளும் விவாதத்தில் கலந்து கொண்டு ஆவேசமாக, அறிவுப்பூர்வமாக, விளக்கமாக தங்களுடைய நிலைப்பாட்டை முன் வைத்தார்கள்.
மக்களவையில் நம்முடைய அருமை சகோதரர் ஆ.ராசா அரைமணி நேரத்துக்கு மேலாக நெருப்பு பறக்க பேசியது தலைப்புச் செய்தி ஆனது. மாநிலங்களவையில் நம்முடைய திருச்சி சிவா அவர்கள் 20 நிமிடத்துக்கு மேல் பேசி உணர்ச்சிபூர்வமாக அங்கே முழங்கியிருக்கிறார்.
இது ஒருபுறம்! இன்னொரு பக்கம், அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் தம்பிதுரை - எவ்வளவு நேரம் பேசினார் தெரியுமா? ஒரே ஒரு நிமிடம்தான்! கிரிக்கெட்டில் முதல் பந்திலேயே ‘டக்-அவுட்’ ஆகின்ற பேட்ஸ்மன் கூட இதை விட அதிக நேரம் களத்தில் இருப்பார். அப்படி அவர் பேசிய ஒரு நிமிடத்திலேயும் அ.தி.மு.க. இதை எதிர்க்கிறதா? ஆதரிக்கிறதா? என்று சொல்லவில்லை. ஆனால், நாங்கள் இந்த மசோதாவை நிறைவேற்றப்பட்ட அன்று காலையிலேயே சட்டமன்றத்துக்கு கருப்பு பட்டை அணிந்து கொண்டு வந்து எதிர்ப்பைப் பதிவு செய்தோம்! அதுமட்டுமல்ல, தி.மு.க. சார்பிலும், உச்சநீதிமன்றத்தில் வக்ஃபு திருத்தச் சட்டத்தை எதிர்த்து வழக்கு தொடர்வோம் என்று சட்டமன்றத்தில் அறிவித்திருக்கிறேன். நாளை நம்முடைய துணைப் பொதுச் செயலாளர் ஆ.ராசா பேரில் வழக்குத் தொடுக்கப்படும்.
மற்றொரு செய்தியையும் பாத்திருப்பீர்கள். தமிழ்நாடு அனுப்பிய நீட் விலக்கு சட்ட மசோதாவை நிராகரித்திருக்கிறது ஒன்றிய பா.ஜக. அரசு. அதையும் நேற்று முன்தினம் சட்டமன்றத்தில் நான் அறிவித்துவிட்டு. அடுத்தகட்ட சட்ட, அரசியல் நடவடிக்கைகளைத் தீர்மானிக்க வருகின்ற 9-ஆம் தேதி தமிழகத்தில் இருக்கக்கூடிய, சட்டமன்றத்தில் இடம் பெற்றிருக்கக்கூடிய அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டியிருக்கிறேன். ஆனால், எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி அவர்கள் என்ன செய்கிறார்? நேற்று முன்தினம் நீட்-ஆல் மாணவ, மாணவியர்கள் பலியானதற்கு திமுக மீது குற்றம் சொல்லி, அறிக்கை விடுகிறார். நான் கேட்கிறேன். தி.மு.க. ஆட்சியில் இருக்கும்போது தமிழ்நாட்டில் நீட் இருந்ததா? இல்லை! தலைவர் கலைஞர் முதலமைச்சராக இருந்த வரை நீட் இல்லை! இவ்வளவு ஏன்? அம்மையார் ஜெயலலிதா இருந்தவரை கூட நீட்டைத் தமிழ்நாட்டுக்குள்ளே அனுமதிக்கவில்லை. அவர் மறைவுக்கு பிறகுதான் ஓ.பன்னீர்செல்வமும், எடப்பாடி பழனிசாமியும் பா.ஜ.க.வுக்கு பாதம் தாங்கிகளாக இருந்து இதை அனுமதித்தார்கள். இதுதான் உண்மை.
நான் இப்போது கேட்பது – அப்போது ஆதரித்தீர்கள் – அனுபவித்தீர்கள் – அதையெல்லாம் விட்டுவிடுவோம். இப்போது நான் கேட்பது - கூட்டணியில் இருந்தபோதும், கூட்டணியாக தேர்தலைச் சந்தித்தபோதும் நீட் விலக்கு வேண்டும் என்று ஏன் நீங்கள் பா.ஜ.க-விடம் நிபந்தனை விதிக்கவில்லை? ஆனால், நம்முடைய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் மூலமாக “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால், தெளிவாக சொன்னார் - நீட்டை விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்படும்” என்று தேர்தலில் உறுதிமொழி அளித்தார். நாங்கள் சொல்ல வைத்தோம். இப்போது கேட்கிறார் பழனிசாமி, நீட் ரகசியத்தை சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டிருக்கிறாரே! இந்தியா கூட்டணி ஆட்சி மட்டும் ஒன்றியத்தில் அமைந்திருந்தால், நிச்சயம் நீட் விலக்கு நிறைவேறி இருக்கும்.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி அவர்களே, “பா.ஜ.க. கூட கூட்டணி இருக்கிறது - இல்லை” என்று மாற்றி மாற்றி பேசுகின்ற உங்களுக்கு நான் இந்த மேடையில் இருந்து சவால் விடுறேன். தமிழ்நாட்டு மாணவச் செல்வங்கள் மேல் உங்களுக்கு துளியாவது அக்கறை இருந்தால், பா.ஜ.க. கூட கூட்டணிக்கு போவதற்கு முன்னால், “நீட் விலக்கு தந்தால்தான் கூட்டணி!” என்று வெளிப்படையாக அறிவிக்க தயாரா? உருப்படியாக ஒன்றும் செய்யாமல், வாய்ச்சவடால் விட்டுக்கொண்டு இருப்பதாலேதான், மக்களால் மீண்டும் மீண்டும் நீங்கள் புறக்கணிக்கப்பட்டு இருக்கிறீர்கள். எங்களைப் பொறுத்தவரையில், மக்களான உங்கள் மேல் இருக்கக்கூடிய நம்பிக்கையால் சொல்கிறேன் - சங்க காலத்து உரம் பெற்று, குடியாட்சி காலத்தில் கோலோச்சும் தமிழ்நாட்டை எத்தகைய அரசியல் சூழ்ச்சிகளும் வீழ்த்திட முடியாது. இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் வீழ்த்தவும் விட மாட்டான்! தமிழ்நாடு போராடும்! தமிழ்நாடு வெல்லும்! விடைபெறுகிறேன். நன்றி! வணக்கம்! என்று கூறினார்.
Also Read
-
”உயர்நீதிமன்றங்களிலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்பட வேண்டும்” : கி.வீரமணி வலியுறுத்தல்!
-
3 மாதத்தில் 767 விவசாயிகள் தற்கொலை : பா.ஜ.க கூட்டணி ஆட்சி நடக்கும் மகாராஷ்டிராவில் அதிர்ச்சி!
-
கால்நடை துறையில் கருணை அடிப்படையில் 208 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள்.. வழங்கினார் முதலமைச்சர்!
-
எளியோர் மீதான கருணையும் அக்கறையும்தான் கலைஞரின் எழுத்துகள்! : எழுத்தாளர் இமையமின் சிறப்பு கட்டுரை!
-
”ஜனநாயகத்தை அழிக்கும் தேர்தல் ஆணையம்”: வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் - எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு!