Politics
“ஒன்றிய அரசு கையாளும் சூழ்ச்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது” - அனைத்துக் கட்சி கூட்டத்தில் திருமாவளவன்!
தொகுதி சீரமைப்பு என்ற பெயரில் தென் மாநிலங்களின் நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை குறைத்து, தென் மாநிலங்களை ஓரங்கட்ட நினைக்கிறது ஒன்றிய பாஜக அரசு. தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட மாநிலங்கள் இதில் பெருமளவு பாதிக்கப்படும். எனவே இதற்கு பல்வேறு மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், இன்று (மார்ச் 05) தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து கட்சிக் கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் பாஜக, நாம் தமிழர், தமிழ் மாநில காங்கிரஸ் உள்ளிட்ட 5 கட்சிகள் பங்கேற்காமல் புறக்கணித்த நிலையில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகள், ஆதரவு கட்சிகள், அதிமுக, தேமுதிக, தவெக உள்ளிட்ட 56 கட்சிகள் பங்கேற்றன. இந்த கூட்டத்தின் தொடக்க உரையாக முதலமைச்சர் பேசினார். இதைத்தொடர்ந்து மற்ற கட்சித் தலைவர் தங்கள் கருத்துகளை தெரிவிக்க வாய்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது விசிக தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி. கலந்துகொண்டு ஆற்றிய உரை வருமாறு :
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் உறுப்பு 82 மற்றும் 170 ஆகியவை மக்களவையிலும் மாநிலங்களின் சட்டப்பேரவைகளிலும் உள்ள தொகுதிகளின் எண்ணிக்கையையும் எல்லைகளையும் வரையறை செய்வதற்கான அதிகாரத்தை வழங்குகின்றன. மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடைபெற்ற பிறகு ஒவ்வொரு 10 ஆண்டுக்கு ஒரு முறை ஒன்றிய அரசால் நியமிக்கப்படும் தொகுதி மறுசீரமைப்பு ஆணையம் இந்தப் பணியை மேற்கொள்ளும். 1951,1961,1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்புகளின் அடிப்படையில் முன்பு தொகுதி மறுசீரமைப்புகள் நடந்தேறின.
முதல் மறு சீரமைப்புக்குப் பிறகு மக்களவைக்கு 494 தொகுதிகள் நிர்ணயிக்கப்பட்டன. 1961 க்கு பிறகு நடைபெற்ற இரண்டாவது மறு சீரமைப்பின் பிறகு மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை 522 என உயர்த்தப்பட்டது. அது 1971 மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்குப் பின் 543 என உயர்த்தப்பட்டது.
இந்தியாவின் மக்கள் தொகை 1951 ஆம் ஆண்டில் 36.1 கோடியாகவும்; 1961 ஆம் ஆண்டு 43.9 கோடியாகவும்; 1971 ஆம் ஆண்டு 54.8 கோடியாகவும் இருந்தது. கடைசியாக 2011 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கெடுப்பு இந்தியாவின் மக்கள் தொகை 121.1 கோடி எனத் தெரிவிக்கிறது.
இந்திய மக்கள் தொகையைக் கட்டுப்படுத்த வேண்டும் என ஒன்றிய அரசு குடும்பக் கட்டுப்பாடு திட்டத்தை அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தியதன் காரணமாக மக்கள் தொகைக் கட்டுப்படுத்தப்படும் மாநிலங்கள் தொகுதி மறுசீரமைப்பின்போது பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதால் 1976 ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட 42 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் தொகுதிகளின் எண்ணிக்கை 1971 ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே வைத்துக்கொள்வதென முடிவு செய்யப்பட்டது. அதே எண்ணிக்கையே அடுத்த இருபத்தைந்து ஆண்டுகளுக்குத் தொடரும் எனவும் முடிவு செய்யப்பட்டது. மீண்டும் 2002 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 84 ஆவது அரசமைப்புச் சட்டத் திருத்தத்தின் அடிப்படையில் 2026 வரை தொகுதிகளின் எண்ணிக்கை மாற்றப்படாது என அறிவிக்கப்பட்டது.
தற்போது நடைமுறையில் உள்ள மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தொகுதிகளின் எண்ணிக்கை 1971 ஆம் ஆண்டு சென்சஸ் அடிப்படையிலும், தொகுதிகளுடைய எல்லை 2001 ஆம் ஆண்டு சென்சஸ் அடிப்படையிலும் இறுதிசெய்யப்பட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள தொகுதி மறுசீரமைப்பு 2026 ஆம் ஆண்டுடன் முடிவடைவதால் 2026க்கு பிறகு எடுக்கப்படும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் அடிப்படையில் புதிய தொகுதிகளின் எண்ணிக்கை முடிவு செய்யப்பட வேண்டும். 2021 மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்படாததால் 2031 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்படும் சென்சஸ் அடிப்படையிலேயே புதிய தொகுதி மறு சீரமைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும். அவ்வாறு தொகுதி மறு சீரமைப்பு செய்யப்படும் போது தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் பாதிக்கப்படும் ஆபத்து இருப்பதைத் தமிழ்நாடு அரசு சரியாக சுட்டிக்காட்டி அதை எதிர்கொள்வதற்கான வழிமுறைகளை ஆராய்வதற்கு இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி உள்ளது.
இந்தியாவிலுள்ள எந்தவொரு மாநிலமும் இதைப் பற்றி சிந்திக்காத நிலையில் தமிழ்நாடு அரசு இத்தகைய கூட்டத்தை ஏற்பாடு செய்திருப்பது முதலமைச்சர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையையும், கூட்டாட்சி மற்றும் மக்களாட்சி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள பற்றுறுதியையும் வெளிப்படுத்துகிறது. இதற்காக விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் முதலமைச்சர் அவர்களை நெஞ்சாரப் பாராட்டுகிறோம்.
=> எமது கட்சியின் சார்பில் பின்வரும் ஆலோசனைகளை இந்த அவையின் மேலான பரிசீலனைக்கு முன் வைக்கிறோம்:
1. அமெரிக்காவில் நமது மக்களவைக்கு இணையான பிரதிநிதிகளின் அவை ( House of Representatives) உறுப்பினர்களின் எண்ணிக்கை நூறு ஆண்டுகளுக்கும் மேலாக 435 என மாறாமல் அப்படியே வைத்துக் கொள்ளப்பட்டிருக்கிறது. அதனால் அங்கு எந்த சிக்கலும் ஏற்பட்டுவிடவில்லை. எனவே இந்தியாவிலும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மாற்றாமல் அப்படியே தொடரச் செய்யலாம். எண்ணிக்கையை உயர்த்தித்தான் ஆக வேண்டும் என்று மற்ற மாநிலங்கள் அழுத்தம் கொடுத்தால் அனைத்து மாநிலங்களிலும் இப்போதுள்ள தொகுதிகளின் எண்ணிக்கையில் சராசரியாக 20% தொகுதிகளை உயர்த்தலாம். அவ்வாறு செய்தால் தற்போதுள்ள சமநிலை குலையாமல் பாதுகாக்க முடியும்.
மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை அந்தந்த மாநிலங்கள் விரும்பினால் உயர்த்திக் கொள்ளலாம் என முடிவு செய்யலாம். அவ்வாறு மாநில சட்டமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை உயரும்போது அதற்கேற்ப மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை உயர்த்தாமல் மக்களவைத் தொகுதிகளுக்கு கடைபிடித்த 20% உயர்வு என்கிற முறையையே மாநிலங்களவை தொகுதி எண்ணிக்கைக்கும் கடைபிடிக்க வேண்டும்.
2. நாடாளுமன்ற, சட்டமன்றத் தொகுதிகளின் மறு சீரமைப்பு அரசியல் நிர்ணய சபையில் விவாதித்து முடிவு செய்யப்பட்டபோது உள்ளாட்சி அமைப்புகளுக்கான சட்டம் இல்லை. தற்போது உள்ளாட்சி அமைப்புகள் வேர்க்கால் மட்டத்தில் மக்களின் ஜனநாயகத் தேவைகளை நிறைவேற்ற உதவுகின்றன. எனவே சட்டமன்றம் நாடாளுமன்றம் ஆகியவற்றின் முதன்மையான பணியான புதிய சட்டங்களை இயற்றுதல், சட்டங்களையும் திட்டங்களையும் வகுத்தல் ஆராய்தல் என்பவற்றுக்கு இனிமேலாவது முன்னுரிமை அளிக்கலாம். அவ்வாறு செய்தால் தொகுதிகளில் இடம்பெற்றிருக்கும் மக்களின் எண்ணிக்கை எவ்வளவு என்பதைப் பற்றிப் பெரிதாக கவலைப்படத் தேவை இருக்காது.
தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்படும் போது அதை மக்கள் தொகை அடிப்படையில் அல்லாமல் ஒரு மாநிலத்தில் உள்ள வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிடலாம். 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டு 2031 இல் எவ்வளவு மக்களவை இடங்கள் இருக்கும் எனக் கணக்கிட்டுப் பார்த்து 811 இடங்கள் வரும் என இந்தத் துறை சார்ந்த வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர். 18 வயது தாண்டிய வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் கணக்கிட்டால் 2031இல் 764 இடங்கள் வரும் என்று அவர்கள் கூறுகின்றனர் ( Parliamentary Delimitation: A Study on India’s Demographic Struggle for Political Representation - Pankaj kumar Patel, T.V.Sekher, IIPS, Mumbai) தொகுதி எண்ணிக்கை மற்றும் எல்லை என்பதை முடிவு செய்யும் போது வாக்காளர்களை அடிப்படையாக வைத்து கணக்கிடுவதே சரியாக இருக்கும். எனவே அடுத்த தொகுதி மறு சீரமைப்பில் வாக்காளர்களின் எண்ணிக்கை அடிப்படையில் அதை மேற்கொள்ள வேண்டும் என நாம் வலியுறுத்த வேண்டும்.
3. கடந்தமுறை தொகுதி மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்ட போது இஸ்லாமியர்களின் வாக்குகள் மதிப்பிழக்கும் வண்ணம் தொகுதிகள் மறு சீரமைக்கப்பட்டன என்ற புகார்கள் எழுந்தன. பட்டியல் சமூக மக்களிடமிருந்தும் அத்தகைய புகார்கள் எழுந்தன. எனவே எதிர்வரும் தொகுதி மறுசீரமைப்பின் போது இஸ்லாமியர்கள் உள்ளிட்ட மத சிறுபான்மையினரின் வாக்குகளுக்கு மதிப்பிருக்கும் விதமாக அந்த எல்லைகளை வரையறுப்பதற்கு நாம் கவனம் செலுத்த வேண்டும். பட்டியல் சமூக மக்களின் வாக்குகளுக்கும் இது பொருந்தும்.
4. தொகுதி மறுசீரமைப்பு குறித்த விவாதத்தில் இணைத்துப் பரிசீலிக்க வேண்டிய இரண்டு பிரச்சனைகள் உள்ளன: ஒன்று, மாநிலங்களவை பிரதிநிதித்துவம்; மற்றொன்று, நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு முறை.
பாசிச எண்ணம் கொண்டவர்களால் ஒன்றிய ஆட்சி கைப்பற்றப்படும் போது மாநிலங்களின் அதிகாரம் பறிக்கப்படுகிறது. தற்போதுள்ள நிலையில் ஆட்சியாளர்கள் தாம் கொண்டுவரும் மக்கள் விரோத சட்ட மசோதாக்களை மாநிலங்களவையில் நிறைவேற்றுவதற்குப் பல்வேறு தந்திரங்களைக் கையாளுகிறார்கள். அது மட்டுமின்றி பண மசோதா அல்லாதவற்றையும் பண மசோதா என்று வகைப்படுத்தி மாநிலங்களவையில் பெரும்பான்மை பெறாமலேயே நிறைவேற்றிக் கொள்கிறார்கள். மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களும் அவ்வாறு நிறைவேற்றப்படுகின்றன.
இந்நிலையில் மக்களவையைப் போலவே மாநிலங்களவைக்கும் நாம் முக்கியத்துவம் அளித்தாக வேண்டும். மாநிலங்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கை மாநிலங்களின் அளவைக் கருத்தில் கொள்ளாமல் அமெரிக்காவில் இருப்பது போல அனைத்து மாநிலங்களுக்கும் சம எண்ணிக்கையில் அளிக்கப்பட வேண்டும். அதற்கான சட்டத் திருத்தத்தை மேற்கொள்ளுமாறு ஒன்றிய அரசை நாம் வலியுறுத்த வேண்டும். அரசியல் நிர்ணய சபையில் லோக்நாத் மிஸ்ரா என்ற உறுப்பினர் இது தொடர்பான திருத்தத்தை முன்மொழிந்து விவாதித்திருக்கிறார். அன்றிருந்த சூழலில் அவரது திருத்தம் ஏற்கப்படவில்லை. ஆனால் இன்றைய சூழலில் அது கவனம் செலுத்தப்பட வேண்டிய ஒன்றாக இருக்கிறது.
நிதி ஆணையம் வரி வருவாயைப் பகிர்ந்து கொள்வதற்கு கடைபிடிக்கும் அம்சங்கள் தென் மாநிலங்களுக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் விதமாகவே உள்ளன. 16ஆவது நிதி ஆணையம் வரி வருவாய் பகிர்வின் அளவை 41% இலிருந்து 40% ஆகக் குறைப்பதற்குத் திட்டமிட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன. அதுமட்டுமின்றி, மாநிலங்களுக்குப் பகிர தேவையில்லை என்ற வகையினத்தின் கீழ்வரும் செஸ், சர்சார்ஜ் முதலான கூடுதல் வரிகளின் அளவை இப்போதுள்ள ஒன்றிய அரசு உயர்த்திக் கொண்டே போகிறது. மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய வரி வருவாய்ப் பகிர்வைக் குறைப்பதற்கு ஒன்றிய அரசு கையாளும் தந்திரமாக இது உள்ளது. இந்த சூழ்ச்சிகளை நாம் அனுமதிக்கக் கூடாது.
தொகுதி மறு சீரமைப்பு குறித்து விவாதிப்பதற்கு இப்போது கூட்டப்பட்டுள்ள இந்த அனைத்துக் கட்சிக் கூட்டத்தைப் போலவே மாநிலங்களவை பிரதிநிதித்துவம் மற்றும் 16 ஆவது நிதி ஆணையத்தின் வரி வருவாய்ப் பகிர்வு சதவீதம் ஆகிய சிக்கல்கள் குறித்தும் விவாதிப்பதற்கு அடுத்து ஒரு அனைத்துக் கட்சிக் கூட்டத்தை முதலமைச்சர் அவர்கள் கூட்ட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறோம்.
Also Read
-
“அணி அணியாய் பங்கெடுப்போம் - மக்கள் மனங்களை வெல்வோம்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
கோரிக்கை வைத்த கல்லூரி மாணவி : வீட்டிற்கே சென்று நிறைவேற்றிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
“ தமிழ்நாட்டில் நிச்சயமாக தி.மு.க கூட்டணிக்குதான் வெற்றி!” : தி.மு.க எம்.பி கனிமொழி திட்டவட்டம்!
-
3 நாள் மின்சார வாகன (EV) தொழில்நுட்பம் மற்றும் தொழில்முனைவோர் பயிற்சி! : எங்கு? எப்போது?
-
துப்பாக்கியை காட்டி 11 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை : பாஜக ஆட்சி செய்யும் உ.பி-யில் கொடூரம்!