Politics

தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பா.ஜ.க.வினரின் அடுத்த பொய்! : தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் பதிலடி!

இந்திய அளவில் கல்வி, பொருளாதாரம் என பல துறைகளில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வரும் நிலையில், தமிழ்நாட்டினைக் கைப்பற்ற இயலாமல் தவிக்கும் பா.ஜ.க.வினர் ஒன்றிய நிதியை நிலுவை வைப்பதும், தமிழ்நாடு அரசின் மீது பொய் குற்றச்சாட்டுகளை முன்வைப்பதும் வழக்கமாகியுள்ளது.

அவ்வகையில் தமிழ்நாடு பா.ஜ.க.வின் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர், “பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாடு அரசு இணைந்து நிதியை வாங்கிவிட்டது” என்ற பொய்யை சற்றும் தயக்கமின்றி முன்வைத்துள்ளார்.

இதற்கு பதிலடி தரும் வகையில், தமிழ்நாடு அரசு தகவல் சரிபார்ப்பகம் விளக்கமான அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், “‘பிரதமரின் ஸ்ரீ பள்ளிகள் திட்டத்தில் நிதி வாங்கிவிட்டு, அந்த நிதியை அதற்காக உபயோகப்படுத்தாமல், சர்வ சிக்ஷா அபியானில் வேலைக்குச் சேர்ந்த ஆசிரியர்களை வைத்து கணக்கு காண்பிப்பதாக’ பாஜகவைச் சேர்ந்தவர்கள் மீண்டும் பொய்யான தகவலைப் பரப்பியுள்ளனர்.

ஒன்றிய அரசின் பி.எம் ஸ்ரீ இணையதளத்தில், தமிழ்நாட்டில் 34 கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் மட்டுமே பி.எம் ஸ்ரீ பள்ளிகள் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடாத நிலையில், மாநில அரசின் எந்தப் பள்ளிகளும் பி.எம் ஸ்ரீ பள்ளிகளாகச் செயல்படுத்தப்படாத நிலையில், ஒன்றிய அரசு எப்படி நிதி ஒதுக்கியிருக்கும். ஒதுக்கப்படாத நிதிக்குத் தமிழ்நாடு அரசு எப்படி போலியாகக் கணக்கு காண்பித்திருக்க முடியும்.

ஏற்கெனவே, செயல்படுத்தப்படும் 'சமக்ர சிக்ஷா' திட்டத்திற்கான ரூ.2,152 கோடி நிதியையே ஒன்றிய அரசு தற்போதுவரை ஒதுக்கவில்லை. இந்த திட்டத்திற்கான நிதியை ஒதுக்க வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பிரதமர் நரேந்திர மோடிக்கு இன்று (பிப்.20) கடிதம் எழுதியுள்ளார்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: ”பட்டா எனும் கனவை நனவாக்கி வரும் திராவிட மாடல் அரசு” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உரை!