Politics

ஈரோடு (கி) இடைத்தேர்தல்: “உதயசூரியனுக்கு வாக்களியுங்கள்” -முக்குலத்தோர் புலிப்படைக் கட்சி தலைவர் கருணாஸ்!

கடந்த 2021-ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா, கடந்த 2023-ம் ஆண்டு மாரடைப்பால் உயிரிழந்தார்.

அதனைத் தொடர்ந்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்ட நிலையில், அந்த தொகுதியை மீண்டும் தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த சூழலில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு கடந்த 2024, டிச.14 அன்று உயிரிழந்தார்.

இதனையடுத்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, வரும் பிப்.5-ம் தேதி வாக்குப்பதிவு நடைபெறு என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் களமிறங்கியுள்ளார். தொடர்ந்து தேர்தல் பிரசாரம் இன்று (பிப்.03) மாலை 6 மணியோடு நிறைவடைகிறது.

இந்த நிலையில், உதய சூரியனுக்கு வாக்களிக்குமாரு ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் தலைவரும், நடிகருமான கருணாஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு :

"அன்பிற்கினிய முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் ஈரோடு மாவட்ட மற்றும் ஈரோடு கிழக்கு தொகுதி உறவுகள் அனைவர்க்கும் வணக்கம்!

ஈரோடு கிழக்கு தொகுதிக்கு (பிப்ரவரி 5-ஆம் தேதி) இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு நடக்க இருக்கிறது. இதில் தி.மு.க. சார்பில் சந்திரகுமார் அவர்கள் வேட்பாளராக போட்டியிடுகிறார்.

திராவிட மாடல் அரசின் மக்கள் வரவேற்பை யாவரும் அறிவர். திமுக ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை ஈரோடு கிழக்கு தொகுதி மக்களுக்கு தேர்தல் பிரச்சாரத்தின் வழியாக எடுத்துச் சென்றுள்ளோம். ஆகவே 5 ஆம் தேதி நடைபெறவுள்ள இடைத்தேர்தலுக்குரிய வாக்குப் பதிவில் நாம் கூட்டணி கட்சியாக அங்கம் வகிக்கும் திமுக வேட்பாளர் திரு சந்திரகுமார் அவர்களுக்கு உதய சூரியன் சின்னத்தில் வாக்களித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறச் செய்து,

மக்கள் முதல்வர், மு.க.ஸ்டாலின் அவர்களது கரத்தை வலுப்படுத்த..

மறவாது வாக்களித்து வெற்றி பெறச் செய்ய வேண்டுமாய் முக்குலத்தோர் புலிப்படைக் கட்சியின் சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதி மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்!

Also Read: ”வாரண்ட் பிறப்பிக்கப்படும்” : பாபா ராம்தேவுக்கு நீதிமன்றம் எச்சரிக்கை!