Politics

தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை! : ஒன்றிய இணை அமைச்சருக்கு தி.மு.க எம்.பி, பி.வில்சன் பதிலடி!

தமிழ்நாடு அரசின் துரித நடவடிக்கைகளால் மெட்ரோ பணிகள் தீவிரமாக்கப்பட்டு அடுத்த 2 - 3 ஆண்டுகளில் சென்னையில் விரிவான மெட்ரோ சேவையை தொடங்க செயலாற்றப்பட்டு வருகிறது.

ஆனால், இதற்கு தொடக்கத்திலிருந்து நிதி பங்கீடு வழங்க வேண்டிய ஒன்றிய பா.ஜ.க அரசு, திட்டத்திற்கு ஒப்புதல் அளித்ததே தவிர, நிதியில் நிலுவை நடவடிக்கைகளையே முடுக்கிவிட்டது.

எனினும், மக்கள் சேவையை உறுதிபடுத்தும் நோக்கில் மெட்ரோ பணிகளை தொடர்ந்து வருகிறது தமிழ்நாடு அரசு, இந்நிலையில் நேற்றைய நாள் மெட்ரோ நிதி குறித்த கருத்தை ஒன்றிய இணை அமைச்சர் டோகன் சாஹூ தெரிவித்தார்.

அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் தி.மு.க மாநிலங்களவை உறுப்பினர் பி.வில்சன், “சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் கட்டம்-1, கட்டம்-1 விரிவாக்கம் மற்றும் கட்டம்-2 என மொத்தம் 173 கிலோமீட்டர் நீளமுள்ள மெட்ரோ இரயில் திட்டங்களுக்கு ரூ.85,395 கோடியை வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்திருக்கிறது. இதில் சென்னை மெட்ரோ கட்டம் -1 விரிவாக்கம் உட்பட சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் முதல் கட்டத்திற்கு ரூ.15,355.78 கோடி முழுவதையும் விடுவித்துள்ளது என்று ஒன்றிய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரத்துறை இணை அமைச்சர் டோகன் சாஹூ பதில் அளித்துள்ளார்.

ஆனால், தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதி ரூ.986.78 கோடி என்று அவரது எழுத்துப்பூர்வ பதிலில் இருந்து தெரியவந்திருக்கிறது! இதில் எந்த எண்ணிக்கை சரியானது அமைச்சர் அவர்களே?

மேலும், சென்னை மெட்ரோ இரயில் திட்டங்களுக்காக தமிழ்நாட்டிற்கு மிகக் குறைந்த நிதியை ஒதுக்கீடு செய்தது குறித்தோ அல்லது பெரும் பற்றாக்குறைத் தொகை தமிழ்நாடு அரசுக்கு எப்போது ஈடு செய்யப்படும் என்பது குறித்தோ ஒன்றிய அமைச்சர்கள் மனோகர் லால் மற்றும் நிர்மலா சீதாராமன் ஆகியோரிடம் இருந்து எந்த பதிலும் இல்லை.

ஒன்று மட்டும் நிச்சயம்: தமிழ்நாட்டிற்கு நியாயமான நிதி கிடைக்கவில்லை!” என தெரிவித்துள்ளார்.

Also Read: மாற்றுத்திறனாளிகள் நலனுக்கென தொண்டாற்றும் திராவிட மாடல்! : முரசொலி தலையங்கம்!