Politics
களமிறங்கும் பிரியங்கா காந்தி... ராஜினாமா செய்த ராகுல் காந்தி... வயநாடு தேர்தல் எப்போது ?
கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் உத்தர பிரதேசத்தின் அமேதி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் ராகுல்காந்தி போட்டியிட்டார். இதில் அமேதியில் தோல்வியை சந்தித்திருந்தாலும், வயநாடு தொகுதியில் 4.31 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் ராகுல் காந்தி அமோக வெற்றியை பெற்று, வயநாடு எம்.பியாக பதவி வகித்தார்.
அதனைத் தொடர்ந்து அண்மையில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலிலும் ராகுல் காந்தி உத்தர பிரதேசத்தின் ரேபரேலி மற்றும் கேரளாவின் வயநாடு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் இரண்டு தொகுதிகளிலும் லட்சக்கணக்கான வாக்குகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற ராகுல் காந்தி, வயநாடு தொகுதியில் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
ராகுல் காந்தியின் இந்த மாபெரும் வெற்றிக்கு பலரும் வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர். எனினும் ஒரு நபர் ஒரு தொகுதிக்கு மட்டுமே எம்.பி-யாக இருக்க முடியும் என்பதால், ரேபரேலி அல்லது வயநாடு இரண்டில் ஒரு தொகுதியை ராகுல் காந்தி ராஜினாமா செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் இருந்தார். இதனால் எந்த தொகுதியின் எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வார் என்ற கேள்வி எழுந்தது.
இந்த சூழலில் ராகுல்காந்தி வயநாடு தொகுதியை ராஜினாமா செய்வதாக நேற்று (ஜூன் 17) காங்கிரஸ் தலைமை அறிவித்தது. அதோடு அந்த தொகுதியில் ராகுல் காந்தியின் சகோதரியும், காங்கிரஸ் பொதுச் செயலாளருமான பிரியங்கா காந்தி போட்டியிடவுள்ளதாகவும் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்தார்.
தற்போது 52 வயதாகும் பிரியங்கா காந்தி முதல் முறையாக தேர்தலில் போட்டியிடவுள்ளார். இந்த நிலையில், இன்று வயநாடு தொகுதி எம்.பி பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை மக்களவை செயலகத்திற்கு ராகுல் காந்தி அனுப்பினார். இதைத்தொடர்ந்து வயநாடு தொகுதியில் விரைவில் இடைத்தேர்தல் அறிவிக்க வாய்ப்பு உள்ளது.
வரும் செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் ஹரியானா, மஹாராஷ்டிர மாநிலங்களின் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அந்த தேர்தலோடு சேர்த்து வயநாடு இடைத்தேர்தலும் நடைபெறலாம் என்று கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து தேர்தல் ஆணையம் அதிகாரபூர்வமாக அறிவித்த பிறகே தெரியவரும்.
Also Read
-
“பா.ஜ.க.வைத் தமிழ்நாடு வெறுக்க காரணம் இதுதான்!” : கோவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தேர்தல் பரப்புரை!
-
“தி.மு.க கூட்டணி மீண்டும் அரியணை ஏறும்” : Poll Tracker வெளியிட்டுள்ள கருத்துக்கணிப்பு முடிவு!
-
"அ.தி.மு.க ஆட்சியைக் காப்பாற்றிய எனக்கு அங்கீகாரம் இல்லை": முன்னாள் சபாநாயகர் தனபால் குமுறல்!
-
“மீண்டும் சேப்பாக்கம் - திருவல்லிக்கேணியில் களம் காண்கிறேன்!” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்!
-
“அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது” : சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு!