Politics

மதத்தையடுத்து, இனத்தை குறிவைக்கும் மோடி! : எதிர்க்கட்சிகள் கண்டனம்!

இஸ்லாமியர்களையும், சிறுபான்மையினர்களையும் ஒடுக்கி, பிளவுவாதத்தை உண்டாக்கி, அதன் வழி பெரும்பான்மை சமூகத்தினரின் வாக்குகளை கைப்பற்றுவதே ஆர்.எஸ்.எஸ் கருத்தியலில் உள்ள பா.ஜ.க.வின் நோக்கம்.

அவ்வகையில், சாதிய பாகுபாடுகள், மதத்தின் அடிப்படையிலான பாகுபாடுகள் குறித்து பேசுவது என்பது பா.ஜ.க.வின் அடிப்படை கட்டமைப்பாகவே இருக்கிறது.

எனினும், அது போன்ற செயல்பாடுகள் இதுவரை மறைமுகமாகவே நடந்து வந்தன. ஆனால், 10 ஆண்டுகால ஆட்சியில் பல சருக்கல்களே கண்ட மோடி அரசு, இம்முறை கண்டிப்பாக கவிழ்க்கப்படும் என்பதை உணர்ந்து,

தொடர்ச்சியான வெறுப்பு பிரச்சாரங்களை முன்மொழிந்து வருகிறது. அவ்வரிசையில், கடந்த ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு, தற்போது வெளிப்படையாகவே இஸ்லாமியர்களை விமர்சித்து வருகிறார் மோடி.

பா.ஜ.க நிர்வாகிகள், இஸ்லாமியர்கள் என்றாலே எதிரிகள் என்ற மனப்பான்மையை விதைத்து வருகின்றனர்.

இதனால், இஸ்லாமியர்களின் பிறப்பிடமே பறிபோகும் நிலையும் உருவாகியுள்ளது. இந்நிலையில், இஸ்லாமியர்கள் மீதான வெறுப்பு போதாது, இன வெறுப்பை விதைத்தால் தான், வாக்குகள் மேலும் கூடும் என நினைத்துக்கொண்டு, கடும் கண்டனத்திற்கு ஆட்பட்டுள்ளார் மோடி.

அண்மையில், தெலங்கானாவில் பிரச்சாரம் மேற்கொண்ட மோடி, “நிறத்தின் காரணத்திற்காகவே, குடியரசுத் தலைவர் போட்டியில் திரெளபதி முர்முவிற்கு காங்கிரஸ் வாக்களிக்கவில்லை” என ஒரு புதிய பொய்யை அள்ளிவிட்டுள்ளார்.

அதற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம், “பா.ஜ.க ஒரு குடியரசுத்தலைவர் வேட்பாளரை முன்னிறுத்தியது போல, காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் ஒரு வேட்பாளரை நிறுத்தி, அவருக்கு ஆதரவு தெரிவித்ததே தவிர, அதற்கும் நிறத்திற்கும் எவ்வித தொடர்பும் இல்லை” என தெரிவித்தார்.

இந்நிலையில், நாடாளுமன்ற கட்டடம் திறப்பிற்கு, குடியரசுத் தலைவர் அழைக்கப்படாதது ஏன்? அவர் நிறத்தின் காரணமாகவா என்றும், மோடியை நோக்கி கேள்விகள் பாய்ந்த வண்ணம் உள்ளன.

இவ்வாறான நடைமுறைகள் நடந்து வரும் நிலையிலும், தேர்தல் ஆணையம் இது குறித்து எவ்வகையான விமர்சனங்களையும் முன்வைக்காதது விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது.

Also Read: ஏழைகளின் உயிர் காத்த முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத் திட்டம்!