Politics

இஸ்லாமியர்களை விமர்சித்த மோடி : உண்மை தகவலை வெளியிட்ட தேஜஷ்வி!

10 ஆண்டுகால பா.ஜ.க ஆட்சியால், இந்திய ஜனநாயகம் சர்வாதிகாரத்தில் சிக்கித் தவித்து வருகிறது. வறுமை, வேலைவாய்ப்பின்மை, கலவரம், பெண்களுக்கு எதிரான குற்றங்கள், மதத்திணிப்பு, இந்துத்துவ கருத்தியல் திணிப்பு ஆகியவை வரலாறு காணாத உச்சம் தொட்டுள்ளது.

ஆகையால், குடியரசை மீட்டெடுக்க, எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து இந்தியா கூட்டணி என்ற மாபெரும் ஆற்றலாக உருவெடுத்து, நாடாளுமன்ற மக்களவை தேர்தலை எதிர்கொண்டு வருகின்றனர்.

இக்கூட்டணிக்கு மக்கள் தரும் ஆதரவால், என்ன செய்வதென்று தெரியாமல், ஒன்றிய விசாரணை அமைப்புகளை ஏவவிட்டு, எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து, ஒடுக்கி, அடக்கி வருகிறது பா.ஜ.க.

இந்நிலையில், சமூகநீதி, நாட்டின் வளர்ச்சி என எவற்றை காட்டியும் வாக்குகளை தம் வசம் இழுக்க முடியாது என உணர்ந்த பா.ஜ.க, இதுவரை ஓரளவு மறைமுகமாக செய்து வந்த பாசிச வேலைகளை, தற்போது வெளிப்படையாகவே செய்யத் துணிந்திருக்கிறது.

அதன் வெளிப்பாடகவே, 7 கட்டமாக நடைபெறும் மக்களவை தேர்தலுக்கான பிரச்சாரக் கூட்டத்தில், “காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி, ஒன்றியத்தில் ஆட்சிக்கு வந்தால், குழந்தைகள் அதிகம் இருக்கிற இஸ்லாமியர்களுக்கு, மக்களின் சொத்துகளை தாரைவார்த்து விடுவார்கள்” என தெரிவித்தார்.

அதற்கு மதச்சார்பற்ற, உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் என அழைக்கப்படுகிற இந்திய நாட்டின் பிரதமர், அரசியல் இலாபத்திற்காக, எவ்வாறு இரு மதத்தினருக்கிடையே பிரிவினையை வலுக்கும் விதத்தில் பேசலாம் என கண்டனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில், மோடி பேசிய செய்தி, எந்த விதத்திலும் பொருளற்றதாக இருப்பதை தகுந்த தகவலுடன் வெளிக்காட்டியுள்ளார் முன்னாள் பீகார் துணை முதல்வர் தேஜஷ்வி.

அவர் தெரிவித்த தகவலின் படி, இஸ்லாமியர்களை அதிக குழந்தைகளை உடையவர்கள் என விமர்சித்த மோடியின் உடன்பிறந்தவர்கள் 5 பேர், அவர் தந்தை உடன்பிறந்தவர்கள் 6 பேர், பா.ஜ.க.வின் முன்னாள் தலைவர் வாஜ்பாயி உடன்பிறந்தவர்கள் 6 பேர், முன்னாள் பா.ஜ.க தேசிய தலைவர் அமித் ஷா உடன் பிறந்தவர்கள் 6 பேர் என, மோடியும் அவரது பின்பற்றாளர்களும் தலைகுணியும் வகையிலான தரவை வெளியிட்டுள்ளார்.

இதனால், சிந்திக்காமல் மதப்பிரிவினையை விளைத்து வரும் மோடி மற்றும் அவரது கட்சியில் இருக்கும் பலரின் மூக்குகள் உடைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிர்க்கட்சிகள் மட்டுமல்லாது, பொது மக்களால் சுமார் 20,000 புகார் மனுக்கள் தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, திரிணாமுல் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் சாகேத் கோகலே, “மோடியின் வெறுப்பு பேச்சுக்கு எதிராக ஆயிரக்கணக்கான கடிதங்களை தேர்தல் ஆணையத்திற்கு அரசியல் கட்சிகளோ, அரசியல்வாதிகளோ எழுதவில்லை. ஜனநாயகத்தை பாதுகாக்க நினைக்கும் இந்திய மக்கள் எழுதியிருக்கிறார்கள். தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கை வேண்டி குடிமக்கள் இப்படி கடிதம் எழுதுவது முன்னெப்போதும் நிகழாத ஒன்று. இது தான் இந்திய நாட்டின் ஜனநாயகம் என்பதை உணர்ந்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.

இதனால், மோடியின் பேச்சு தேர்தல் விதிமுறைக்கு எதிரானது என ஒப்புக்கொள்ளாத தேர்தல் ஆனையம், உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது.

இதற்கிடையில், காலம் செல்ல செல்ல, மோடி அலையின் (Modi Wave) சீற்றம் வெகுவாக குறைந்து, தேசிய அளவில் மோடிக்கு எதிரான அலையின் (Anti-Modi Wave) சீற்றம் அதிகரித்து வருவது, பா.ஜ.க.விற்கு பெரும் அடியாக மாறியுள்ளது.

Also Read: விதிமீறலில் அதானி குழுமம்! : தேர்தல் நேரத்தில் வெளியான மற்றொரு உண்மை!