Politics

“420-கள் 400 இடங்களை கேட்கிறது...” - பிரதமர் மோடியை மறைமுகமாக விமர்சித்த நடிகர் பிரகாஷ் ராஜ் !

கடந்த மாதம் நாடாளுமன்றத்தின் இடைக்கால பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது குடியரசுத் தலைவர் பேச்சுக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின்போது, “தேசிய ஜனநாயக கூட்டணி வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெரும்” என்றார். இதைத்தொடர்ந்து தற்போது நாடு முழுவதும் மக்களவைத் தேர்தலுக்கான பிரசாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தேர்தல் தேதி அறிவிக்கப்படும் முன்பே பிரசாரத்தில் ஈடுபட்ட பாஜகவினர், மோடி என பலரும் பாஜக கூட்டணி 400 இடங்களுக்கு மேல் கைப்பற்றும் என்று பேசி வருகின்றனர். மேலும் பிரதமர் மோடி தமிழ்நாடு உள்ளிட்ட பிற மாநிலங்களில் பிரசாரத்தில் ஈடுபட்டபோதும் கூட பாஜக 370 இடங்களிலும், கூட்டணியோடு 400 இடங்களிலும் வெற்றி பெரும் என்று பேசி வருகிறார்.

இவரது பேச்சுக்கு பலரும் விமர்சித்து கருத்து தெரிவித்து வரும் நிலையில், தற்போது 420-கள் 400 இடங்களை கேட்கிறது என்று நடிகர் பிரகாஷ் ராஜ் கடுமையாக விமர்சித்துள்ளார்.

கர்நாடக மாநிலம் சிக்கமங்களூரில் நேற்று பத்திரிகையாளர் மன்றத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பேசினார். அப்போது பேசிய அவர், “420 (கிரிமினல்கள்), வரும் தேர்தலில் 400 இடங்களில் வெற்றி பெறுவோம் என்கிறார்கள். எந்த கட்சியாக இருந்தாலும் சரி, இந்த பேச்சு ஆணவமிக்கது. ஜனநாயக நாட்டில் எந்த ஒரு கட்சியாலும் 400 இடங்களையோ அல்லது அதற்கும் மேலோ வெல்ல முடியாது” என்றார்.

இவரது பேச்சு தற்போது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே இவர் பாஜக சித்தாந்தத்துக்கு எதிராக பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகிறார். மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின்போதும், கர்நாடகாவில் பாஜக செய்த அவலங்களுக்கு பகிரங்க கண்டனங்களை தெரிவித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ஆண்டு நடைபெறும் நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடைபெறவுள்ள நிலையில், முதற்கட்டமாக தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏப்ரல் 1-ம் தேதி தொடங்குகிறது. 7-ம் கட்ட தேர்தல் ஜூன் 1-ம் தேதியோடு நிறைவடைகிறது. ஜூன் 4-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: குஷ்பூவை தொடர்ந்து நிர்மலா சீதாராமன்... நிவாரணத் தொகையை ‘பிச்சை’ என்றதால் சர்ச்சை - குவியும் கண்டனங்கள் !