Politics

கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும் - ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு !

பாஜக ஆட்சிக்கு வந்ததில் இருந்து பாஜக ஆளாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு பல்வேறு நெருக்கடிகளை கொடுத்து வருகிறது. அதிலும், தமிழ்நாடு, கேரளா, தெலுங்கானா, பஞ்சாப் போன்ற மாநில ஆளுநர்கள் பாஜகவை சேர்ந்தவர்கள் போலவே செயல்பட்டு வருகின்றனர்.

அந்த வகையில் கேரள மாநிலத்தில் ஆளும் கம்யூனிஸ்ட் அரசுக்கும், ஆளுநருக்கும் இடையேயான மோதல் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. அதுதவிர கேரளாவுக்கு ஒன்றிய அரசு போதிய அளவு நிதிவழங்கவில்லை என்றும் குற்றசாட்டை மாநில அரசு தெரிவித்து வருகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கேரள அரசு திட்டத்தின் பெயர் இந்தியில் வைக்க மறுத்ததால் ஒன்றிய அரசு நிதியை நிறுத்திவிட்டதாகக் கேரள அமைச்சர் வீணா ஜார்ஜ் குற்றம் சாட்டியிருந்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது.

ஒன்றிய அரசு உரிய நிதியை வழங்காமல் இருந்த காரணத்தால், வெளியில் இருந்து கடன் வாங்க கேரள அரசு முயன்றது. அனுமதிக்கப்பட்ட நிதிவரம்புக்குள் கடன் வாங்கும் கேரள அரசின் இந்த முடிவுக்கும் ஒன்றிய பாஜக அரசு அனுமதி வழங்காமல் இருந்தது. இதன் காரணமாக கேரளாவுக்கு உரிய நிதி வழங்க வேண்டும், பொது வெளியில் இருந்து கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் கேரள அரசு சார்பில் வழக்கு தொடரப்பட்டது.

கடந்த வாரம் இந்த வழக்கின் விசாரணையில், கேரளாவுக்கு கடன் வழங்க ஒன்றிய அரசு அனுமதிக்கவேண்டும் என நீதிபதிகள் அறிவுறுத்தினர். அதனைத் தொடர்ந்து கேரளா கோரிய 27,000 கோடியில் 8000 கோடி ரூபாய் கடன் வழங்க ஒன்றிய அரசு அனுமதி வழங்கியது. அதனைத் தொடர்ந்து இந்த வழக்கு இன்றும் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஒன்றிய அரசு மீதமுள்ள 19,000 கோடி ரூபாய் தங்களுக்கு கடன் வாங்க அனுமதிக்க வேண்டும் என கேரளா சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. ஆனால் ஒன்றிய அரசு இதற்கு மறுப்பு தெரிவித்தது. அதனைத் தொடர்ந்து கேரளாவுக்கு உடனடியாக சிறப்பு கடன் உதவி வழங்க வேண்டும்,எவ்வளவு தொகை வழங்க முடியும் என்பதை நாளை காலை தெரிவிக்கவேண்டும் என ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஒன்றிய அரசுக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: "ஆளே இல்லை, ஏன் என்னை அழைத்தீர்கள்" - கேரளாவில் பரிதாப நிலையில் பாஜக வேட்பாளர் சுரேஷ்கோபி !