Politics

அரசியலமைப்பை மாற்ற திட்டம் : இந்துத்துவ கும்பலின் திட்டத்தை அம்பலப்படுத்திய பாஜக MP... விவரம் என்ன ?

நாடாளுமன்ற மக்களவையின் பதவிக்காலம் விரைவில் முடியவில்ல நிலையில், மக்களவைக்கு விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. இதனால் நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்ள பல்வேறு அரசியல் கட்சிகளும் பல்வேறு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.நாடாளுமன்ற தேர்தல் குறித்து பேசிய பிரதமர் மோடி, இந்த முறை பாஜக 400-க்கும் அதிகமான இடங்களில் வெல்லவேண்டும் என பேசினார்.

இதனைத் தொடர்ந்து கடந்த 9-ம் தேதி கர்நாடகாவில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசிய முன்னாள் அமைச்சரும் பா.ஜ.க எம்.பி-யுமான அனந்த் குமார், "வரவிருக்கும் மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க 400 இடங்களுக்கு மேல் வெற்றி பெறவேண்டும். மக்களவையில் பெரும்பான்மையாக நாம்தான் இருக்கிறோம். ஆனால், மாநிலங்களவையில் போதுமான பிரதிநிதித்துவம் இல்லை.

மாநில அரசுகளிலும் நமக்குத் தேவையான பெரும்பான்மை இல்லை.அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைச் செயல்படுத்துவதற்கு நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும், மாநில அரசுகளிலும் கணிசமான பெரும்பான்மையைப் பெறுவது அவசியம். இதனை குறிப்பிட்டே பிரதமர் மோடி, இந்த முறை 400-க்கும் மேற்பட்ட இடங்களை பெற வேண்டும் எனக் கூறினார்" என்று பேசினார்.

அம்பேத்கர் வகுத்த அரசியலமைப்பு சட்டத்தை மாற்ற முயலும் பாஜகவின் இந்த செயலை பல்வேறு தரப்பினரும் கடுமையாக விமசித்தனர். இது குறித்துப் பேசிய ராகுல் காந்தி, அம்பேத்கரின் அரசியலமைப்பை அழிப்பதே மோடி மற்றும் பா.ஜ.க-வின் இறுதி இலக்கு. சுதந்திர இந்தியாவின் மாவீரர்களுடன் இணைந்து, இந்த சதிகளை முறியடிப்போம். எங்கள் கடைசி மூச்சு வரை அரசியலமைப்பால் உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளுக்காக தொடர்ந்து போராடுவோம்" என்று கூறினார்.

கர்நாடக காங்கிரஸ் கட்சி தனது எக்ஸ் பக்கத்தில், "அனந்த் குமார் 2017-ம் ஒன்றிய அமைச்சராக இருந்தபோது. நான் அரசியலமைப்பை மதிக்கிறேன். ஆனால் காலத்திற்கு ஏற்ப அரசியலமைப்பு மாறியுள்ளது, எதிர்காலத்தில் அது மாறும் எனப் பேசினார். தற்போதும் அதே கருத்தைகூறியுள்ளார்" என்று விமர்சித்திருந்தது.

பாஜக தலைவரின் இந்த கருத்துக்கு கடும் எதிர்ப்புகள் எழுந்த நிலையில், "அனந்த் குமார் ஹெக்டேவின் அரசியலமைப்புச் சட்டம் குறித்த கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்துகள். அது பா.ஜ.க-வின் நிலைப்பாட்டை பிரதிபலிக்கவில்லை" என்று கர்நாடக பாஜக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளது.

Also Read: மோடியின் பரிந்துரைபடி தேர்வாகப்போகும் தேர்தல் ஆணையர்: ”இது ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தல்”- காங். விமர்சனம்!