Politics

டெல்லி சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு : பெரும்பான்மையை நிரூபித்தார் அரவிந்த் கெஜ்ரிவால் !

டெல்லியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியை எப்படியாவது கவிழ்த்து விட வேண்டும் என ஒன்றியத்தில் ஆட்சி செய்து வரும் பா.ஜ.க பல சதி வேலைகளில் ஈடுபட்டு வருகிறது.

அதில் ஒன்றுதான் டெல்லி அரசின் மதுபான கொள்கை முறைகேடு வழக்கு. இந்த வழக்கில்தான் டெல்லி துணை முதலமைச்சராக இருந்த மணீஷ் சிசோடியா அமலாக்கத்துறை கைது செய்தது. இதே வழக்கில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலையும் சிக்க வைக்க ஒன்றிய அரசு முயற்சி செய்து வருகிறது. அமலாக்கத்துறையும் அரவிந்த கெஜ்ரிவாலுக்குச் சம்மன் அனுப்பியுள்ளது. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலை சிக்கவைத்து கைது செய்ய பா.ஜ.க அரசு தீவிரம் காட்டி வருகிறது.

மேலும் கடந்த ஜனவரி மாதம் தனது கட்சி எம்.எல்.ஏக்களிடம் ஆட்சியை கவிழ்க்க பாஜக பேரம் பேசியதாகவும் அரவிந்த் கெஜ்ரிவால் பகிரங்க புகார் தெரிவித்தார். அதனைத் தொடர்ந்து தனது எம்.எல்.ஏக்கள் யாரும் பாஜக பக்கம் செல்லமாட்டார்கள் என்று கூறிய அவர் இதனை நிரூபிக்க சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு கோரினார்.

இந்த நிலையில், டெல்லி சட்டமன்றத்தில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற்றது. இதில் டெல்லி ஆம் ஆத்மி அரசுக்கு ஆதரவாக 54 எம்எல்ஏக்கள் வாக்களித்தனர். இதன் மூலம் சட்டப்பேரவையில் தனது பெரும்பான்மையை அரவிந்த் கெஜ்ரிவால் நிரூபித்துள்ளார்.

முன்னதாக நேற்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கான தீர்மானத்தை சட்டப்பேரவையில் தாக்கல் செய்த அரவிந்த் கெஜ்ரிவால் , "எங்கள் கட்சியின் சட்டப்பேரவை உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் முயற்சியில் பாஜக ஈடுபட்டு வருகிறது. அவர்களுக்கு, ரூ.25 கோடி வரை தருவதாக பேரம் பேசியுள்ளனர்" என்று குற்றம் சாட்டினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: “தமிழ்நாட்டிற்கு 29 பைசா... ஆனால் உ.பி-க்கு வட்டியுடன் இரண்டு பைசா?”: மோடி அரசை விளாசி தள்ளிய கனிமொழி MP!