Politics

செவி சாய்க்காத உத்தரப் பிரதேச பாஜக அரசு: நாடாளுமன்றத்தை நோக்கி பேரணி அறிவித்த விவசாயிகள்!

அனைத்து இந்திய கிசான் சபை (AIKS) தலைமையில், விவசாயிகளின் உரிமைக்காக கடந்த 3 மாதங்களாக நொய்டாவில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

கிரேட்டர் நொய்டா தொழில்துறை மேம்பாட்டு ஆணையம், நகரின் மேம்பாட்டு நடவடிக்கைகளுக்காக, வேளாண் நிலங்களை கையகப்படுத்தியுள்ளது. ஆனால், இழப்பீடாக, சுமார் ரூ. 70,000 முதல் ரூ. 80,000 மதிப்புள்ள இடத்திற்கு ரூ. 2,500 மட்டுமே தந்துள்ளது.

இதனால், வருவாயின்மையால் தவிக்கும் விவசாயிகள் அதிகப்படியான இழப்பீடு கோரியும், வேலைவாய்ப்பு கோரி நொய்டா மேம்பாட்டு ஆணையம்m மற்றும் உத்தரப் பிரதேச அரசுக்கு கோரிக்கை விடுத்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

ஆனால், பாஜக தலைவர்களும், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களும், விவசாயிகளுக்கு ஆதரவான நடவடிக்கை எடுக்காமல் தாமதித்து வருகின்றனர். எனவே, அவர்கள் யாரையும் ஊருக்குள் அனுமதிக்க மாட்டோம் என கடந்த கிழமை விவசாயிகள் தடுப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்நிலையில், 3 மாதங்கள் ஆகியும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததையடுத்து, நொய்டாவில் தொடங்கி நாடாளுமன்றம் வரையிலான பேரணியை AIKS விவசாய சங்கம் அறிவித்துள்ளது .

இடஒதுக்கீடு, வேலைவாய்ப்பு என எதற்கும் செவி சாய்க்காத மாநில பா.ஜ.க அரசு, தற்போது பேரணி அறிவிக்கப்பட்டதை அடுத்து உடனடியாக அந்த பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்துள்ள நடவடிக்கை சர்ச்சையாகியுள்ளது.

Also Read: அதானியிடமிருந்து மும்மடங்கு தொகை கொடுத்து மின்சாரம் வாங்கும் குஜராத் அரசு: காங்கிரஸ் குற்றச்சாட்டு!