Politics

CAA : “அகதிகளுக்கு தஞ்சமளிப்பது என்ற பெயரில் வஞ்சகமாக கொண்டுவரப்பட்டது” - CPI(M) கண்டனம் !

கடந்த 2019-ம் ஆண்டு ஒன்றிய அரசு குடியுரிமை சட்டங்களில் (CAA) மாற்றத்தை கொண்டு வருவதாக அறிவித்தது. மேலும், தேசிய குடிமக்கள் பதிவேட்டையும் (NRC) அறிமுகப்படுத்தியது. குடியுரிமை சட்டத்தில் மத ரீதியான பாகுபாடு கட்டப்படுவதாகவும், தேசிய குடிமக்கள் பதிவேட்டில் சிறுபான்மையினருக்கு எதிரான சரத்துக்கள் இருப்பதாகவும் அதற்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டம் எழுந்தது. இந்த சூழலில் கொரோனா பேரிடர் வந்ததால் அந்த போராட்டம் முடிவுக்கு வந்தது. மேலும் இந்த சட்டங்களை ஒன்றிய பாஜக அரசு சற்று நிறுத்தி வைத்தது. இந்த நிலையில், தற்போது மீண்டும் CAA சட்டம் குறித்து பாஜக தலைவர்கள் பேசிவரும் நிலையில், அண்மையில் ஒன்றிய அமைச்சர் வரும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக CAA சட்டம் நடைமுறைபடுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

ஒன்றிய அரசின் முடிவிற்கு பல்வேறு மாநிலங்களின் எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், CPI(M) கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து CPI(M) கட்சி மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையில், “நாடாளுமன்ற தேர்தல் நெருங்கிவரும் சூழலில், எத்தை தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலைமைக்கு ஆளாகியுள்ள பாஜக மதவெறித் திசையில் வேகம் காட்டுகிறது. அதில் ஒன்றுதான் சி.ஏ.ஏ சட்டத்தை அமலாக்குவோம் என்ற கொக்கரிப்பாகும்.

நாட்டை நாசக்காடாக்கும் இந்த முயற்சிகளை சிபிஐ(எம்) வன்மையாக கண்டிக்கிறது. சி.ஏ.ஏ எனப்படும் குடியுரிமை திருத்தச் சட்டம், அகதிகளுக்கு தஞ்சமளிப்பது என்ற பெயரில் வஞ்சகமாக கொண்டுவரப்பட்டது. உண்மையில் அது இஸ்லாமியர்களையும், இலங்கை தமிழர்களையும் ஒதுக்குவதன் மூலம் தனது நோக்கத்தை அப்பட்டமாக்கிவிட்டது.

அசாம் மாநிலத்தில் நடந்தது போல சொந்த நாட்டுக்குள்ளேயே அகதிகளை உருவாக்குவதுதான் இந்த திட்டத்தின் விளைவாகும். அரசமைப்பு சட்டத்திற்கு நேர் விரோதமாக, குடியுரிமையில் மதத்தை புகுத்தி அதன் மூலம் நாட்டின் பல பகுதிகளில் பிரிவினைக்கு தூபமிடலாம், வெறியை கிளப்பி மோதவிட்டு அரசியல் லாபம் பார்க்கலாம் என்றுதான், ரத்தம் குடிக்கும்‌ இந்த திட்டத்தை பாஜக திணிக்க முயற்சிக்கிறது.

நாடு முழுவதும் எழுந்த கடுமையான மக்கள் போராட்டங்களும், மாநிலங்களின் எதிர்ப்பும் கண்டு பதுங்கியிருந்த பாஜக, இப்போது மீண்டும் அதே ஆயுதத்தை தூக்கிக் கொண்டு கொக்கரிப்பது நாடாளுமன்ற தேர்தலில் வாக்குகளை பறிப்பதற்காகவே. சி.பி.ஐ(எம்) இந்த திட்டத்தை ஒருபோதும் அனுமதிக்காது, அரசியல் களத்திலும், மக்கள் போராட்டக் களத்திலும் முன்னின்று இந்த சவாலை முறியடித்து வீழ்த்துவோம்,‌ தேச நலன் காக்க அனைவரும் கைகோர்ப்போம்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Also Read: “CAA-வால் தமிழ்நாட்டுக்குள் நுழைய முடியாது...” - அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டம் !