Politics
“நிதிஷ் குமார் ஒரு பாம்பு...” - 8 ஆண்டுகளுக்கு முன் RJD தலைவர் லாலு பிரசாத் வெளியிட்ட பதிவு வைரல் !
பீகாரில் கடந்த 2020-ம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் பாஜக-வுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றது நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் கட்சி (JDU). அப்போது நடைபெற்ற தேர்தலில் நிதிஷின் கட்சி வெறும் 43 இடங்களை மட்டுமே பெற்ற நிலையில், பாஜக 78 இடங்களில் வெற்றி பெற்றது. எனினும் நிதிஷ்குமாரை முதல்வராக்க பாஜக ஒப்புக்கொண்டது.
தொடர்ந்து சில ஆண்டுகள் கழியவே, கடந்த 2022-ம் ஆண்டு பாஜகவுடனான கூட்டணியை முறித்து, லாலு பிரசாத்தின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் (RJD), காங்கிரஸ், இடதுசாரிகளுடன் இணைந்து புதிய ஆட்சியை அமைத்தார் நிதிஷ் குமார். அப்போது மீண்டும் நிதிஷ் குமாரே முதல்வராக பதவியேற்ற நிலையில், துணை முதல்வராக லாலு பிரசாத்தின் மகன் தேஜஸ்வி பொறுப்பேற்றார்.
இந்த சூழலில் RJD மற்றும் JDU கட்சிக்குள் சிறு சிறு முரண்பாடுகள் இருந்து வந்த நிலையில், இன்று மீண்டும் பாஜகவுடன் இணைந்துள்ளார் நிதிஷ் குமார். இதன் மூலம் RJD, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளுடன் தனது கூட்டணியை முறித்துக்கொண்ட நிதிஷ், தற்போது மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைத்து முதல்வராக பதவியேற்றுக்கொண்டார்.
இவருடன் சேர்ந்து பாஜகவை சேர்ந்த 2 பேர் துணை முதலமைச்சராக உட்பட 8 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுக்கொண்டுள்ளனர். நிதிஷ் குமாரின் இந்த கட்சி தாவல் குறித்து நாடு முழுவதும் உள்ள இந்தியா கூட்டணி கட்சிகள் விமர்சித்து வருகிறது. அந்த வகையில் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சி தலைவர் லாலு பிரசாத்தின் மகள், தற்போது விமர்சித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதாவது 2017-ம் ஆண்டு லாலு பிரசாத் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருந்தார். அதில், “நிதிஷ் ஒரு பாம்பு போன்றவர். பாம்பு எப்படி தனது அழுக்கை வெளியேற்றுகிறதோ, அதே போல நிதிஷும் தனது அழுக்கை வெளியேற்றுகிறார். 2 வருடங்களுக்கு ஒருமுறை பாம்பு போல் புதிய தோலை அணிந்து வருகிறார். இதில் யாருக்காவது சந்தேகம் இருக்கிறதா ?” என்று குறிப்பிட்டுள்ளார்.
இந்த பதிவை லாலுவின் மகள் ரோகினி ஆச்சார்யா பதிவிட்டு கருத்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து ரோகினி ஆச்சார்யா வெளியிட்டுள்ள பதிவில், “குப்பை மீண்டும் குப்பை தொட்டிக்குள் செல்கிறது... குப்பை - துர்நாற்றம் வீசும் குப்பை குழுவிற்கு மகிழ்ச்சி” என்றும், “இதுவும் ஒரு சில நாட்கள் தான்... பச்சோந்தி குமார் வரலாறு..” என்றும் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
தமிழ்நாட்டில் மீண்டும் தி.மு.க கூட்டணியே ஆட்சி அமைக்கும்: உறுதி செய்த Exit Polls முடிவுகள்!
-
இஸ்லாமியச் சிறுமிக்கு இந்து பெற்றோர் : உயர்நீதிமன்ற மதுரை கிளையின் வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பு!
-
பா.ஜ.க ஆளும் மாநிலத்தின் அவலம் - உயிருக்குப் போராடிய கணவர்: மனைவிக்கு நேர்ந்த கொடூரம்!
-
”தேர்தல் ஆணையமா ஆளுநர் ஆர்.என்.ரவி.. அமைதியாக நடக்கிறதா மேற்கு வங்க தேர்தல்?” : முரசொலி கேள்வி!
-
கோடை வெப்பத்தைத் தணிக்கச் சட்டைப் பையில் வெங்காயம் : ஒன்றிய அமைச்சரின் மூடநம்பிக்கை!