Politics

கிரிக்கெட் பேட்டால் தாக்குதல் நடத்தி கைதான பாஜக MLA, கிரிக்கெட் வாரியத் தலைவராக தேர்வு - ம.பி-யில் ஷாக் !

மத்திய பிரதேச மாநிலத்தில் தற்போது மோகன் யாதவ் தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முதலமைச்சர் மோகன் அமைச்சரவையில் கைலாஷ் விஜய்வர்கியா நகர்ப்புற மேம்பாடு மற்றும் வீட்டுவசதித்துறை அமைச்சராக இருந்து வருகிறார். இவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா (Akash Vijayvargiya), இந்தூர்-1 தொகுதியின் எம்.எல்.ஏ-வாக இருந்து வருகிறார்.

இந்த சூழலில் ஆகாஷ் விஜய்வர்கியா தற்போது மத்திய பிரதேசத்தின் இந்தூர் டிவிஷன் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். ஏற்கனவே ம.பி அமைச்சர் கைலாஷ் விஜய்வர்கியா 2010-ம் ஆண்டு முதல் 2020-ம் ஆண்டு வரை கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக இருந்த நிலையில், தற்போது அவரது கைலாஷின் மகன் ஆகாஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கைலாஷ் விஜய்வர்கியா & அவரது மகன் ஆகாஷ் விஜய்வர்கியா

ஆகாஷ் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு பலரும் கண்டனங்கள் தெரிவித்து வருகின்றனர். ஏனெனில் ஆகாஷ் கடந்த 2019-ம் ஆண்டு அரசு அதிகாரிகளை கிரிக்கெட் மட்டையை கொண்டு தாக்கியதாக புகார் எழுந்தது. மேலும் இது தொடர்பான வீடியோ வைரலானதையடுத்து ஆகாஷ் விஜய்வர்கியா அவர் கைது செய்யப்பட்டார்.

கடந்த 2019-ம் ஆண்டு இந்தூரில் நகராட்சி அதிகாரிகள் ஆக்கிரமிப்புகளை அகற்றிக் கொண்டிருந்தபோது தனது ஆதரவாளர்களுடன் அங்கு வந்த பா.ஜ.க எம்.எல்.ஏ ஆகாஷ் விஜய்வர்கியா கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். வாக்குவாதம் முற்றிய நிலையில், அதிகாரிக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆகாஷ், கிரிக்கெட் மட்டையைக் கொண்டு கடுமையாகத் தாக்கியுள்ளார்.

இந்தத் தாக்குதல் சம்பவம் பொதுமக்கள் முன்னிலையிலேயே நடைபெற்றுள்ளது. செய்தியாளர்கள் வாக்குவாதத்தைப் படம் பிடித்துக்கொண்டிருந்த நிலையில், பா.ஜ.க எம்.எல்.ஏ கிரிக்கெட் மட்டையால் தாக்கிய காட்சியும் பதிவாகியுள்ளது.

இந்த சூழலில் தற்போது அவரையே கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக தேர்வு செய்ததற்கு அம்மாநில எதிர்க்கட்சிகள் விமர்சித்து கண்டனங்கள் தெரிவித்து வருகிறது. இந்த நிகழ்வு நாடு முழுவதும் பெரும் பேசு பொருளாக மாறியுள்ளது.

Also Read: “அயோத்தி இராமர் கோயில் திறப்பு : ஆன்மீக விழா அல்ல.. அரசியல் விழா” - டி.ஆர்.பாலு MP கண்டனம் !