Politics

ம.பியில் முதல்வர் பதவிக்கு இழுபறி... சிவராஜ் சிங் சௌகான் போட்ட ஒரே ட்வீட்... பரபரப்பான பாஜக !

கடந்த நவம்பர் மாதம் சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், தெலங்கானா, மிசோரம் ஆகிய 5 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற்றது. வெவ்வேறு கட்டமாக நடைபெற்ற இந்த மாநிலங்களின் வாக்குப்பதிவுகள், இறுதியாக தெலங்கானா மாநிலத்தோடு நிறைவடைந்தது. இதைத்தொடர்ந்து கடந்த 5-ம் தேதி மிசோரத்தை தவிர 4 மாநிலங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.

மொத்தம் 230 தொகுதிகளை கொண்ட மத்தியப் பிரதேசத்தில் 163 இடங்களை கைப்பெற்றி பாஜக ஆட்சியை பிடித்துள்ளது. எனினும் பாஜக வெற்றி பெற்று 5 நாட்கள் ஆகும் நிலையில், அம்மாநிலத்தில் முதலமைச்சராக யார் பொறுப்பேற்பார் என்று கடும் போட்டி நிலவுகிறது. இதில் முக்கியமாக அம்மாநில தற்போதைய முதலமைச்சர் சிவராஜ் சிங் சௌகான் தனது பதவியை தக்க வைத்து கொள்வதற்காக கடுமையாக போராடி வருகிறது.

மேலும் ஒன்றிய அமைச்சராக இருந்த நரேந்திர சிங் தோமர், திமானி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றதையடுத்து, தனது ஒன்றிய அமைச்சர் பதவியை விட்டு விலகினார். இதனால் இந்த முதலமைச்சர் பதவிக்கு அவரும் போட்டியிடுகிறார். குவாலியர், சம்பல் பிராந்தியத்தில் மொத்தம் உள்ள 34 தொகுதிகளில் 18-ல் வெற்றி பெற காரணமாக இருந்த ஜோதிராதித்திய சிந்தியாவும் தனக்கு ஆதரவாக செய்லபடும் ஒருவரை முதலமைச்சராக தேர்வு செய்வதற்காக முனைப்பு காட்டி வருகிறார்.

சிவ்ராஜ் சிங் சௌகான், சிந்தியா, நரேந்திர சிங் தோமர்

இந்த சூழலில் தான் பாஜக யாரை முதலமைச்சராக தேர்ந்தெடுப்பது என்று பெரும் குழப்பத்தில் உள்ளது. இதனால் முதலமைச்சரை தேர்வு செய்வதற்கான மேலிடப் பொறுப்பாளர்களாக ஏற்கனவே ஹரியானா முதல்வர் மனோகர் லால் கட்டார், பாஜக தேசிய ஓபிசி அணி தலைவர் கே.லக்‌ஷமண், தேசிய செயலாளர் ஆஷா லக்ரா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ள ஆலோசனை மேற்கொள்ளப்பட்டும் வருகிறது.

இதன் காரணமாக முதலமைச்சரை தேர்ந்தெடுப்பதற்கான பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நாளை நடைபெறவுள்ளது. தொடர்ந்து கடும் போட்டி, கோஷ்டி மோதல் நிலவி வரும் நிலையில், நாளை நிச்சயம் முதலமைச்சர் யார் என்று தேர்ந்தெடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் அம்மாநில முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சௌகான் தனது, X வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில் "ராம் ராம்.." என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இதனால் தற்போது அம்மாநில அரசியலில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அண்மையில் நடைபெற்ற ராஜஸ்தான், சத்தீஸ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வென்ற நிலையில், அங்கும் முதலமைச்சர் தேர்தெடுப்பதில் இழுபறி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: இவர் சபாநாயகரானால் பதவியேற்க மாட்டோம்.. புறக்கணித்த பாஜக MLAக்கள்: 8 முறை வென்ற MLA-க்கு எதிர்ப்பு !