Politics
”ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வருகிறார் மு.க.ஸ்டாலின்”- உபி முன்னாள் முதல்வர் அகிலேஷ் புகழாரம்!
உத்திரப் பிரதேச மாநிலத்தை சேர்ந்த வி.பி.சிங், மக்கள் செல்வாக்கு காரணமாக, உத்திரப் பிரதேச மாநில முதலமைச்சராகவும், ஒன்றிய வர்த்தக அமைச்சராகவும், வெளியுறவுத் துறை அமைச்சர், நிதி அமைச்சர், பாதுகாப்புத் துறை அமைச்சர் ஆகிய உயர் பொறுப்புகளை வகித்தார்.
அதோடு தேசிய முன்னணி என்ற கூட்டணியை உருவாக்கி 1989 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமராக உயர்ந்தார். இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டபோது பட்டியலின, பழங்குடியினருக்கு ஒன்றிய அரசுப் பணியிடங்களில் தனி இடஒதுக்கீடு தரப்பட்டது.
ஆனால், பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு அவர்களது மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு தரப்படவில்லை. இதனை வழங்குவதற்காக B.P. மண்டல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் சமூக ரீதியாகவும், கல்வியிலும் பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று அழைக்கப்படும் சமூகத்திற்கு அரசுப் பணியிடங்களில் 27 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கலாம் என்ற பரிந்துரை செய்தது.
நீண்ட நாள் கிடப்பில் போடப்பட்டிருந்த அந்த பரிந்துரைகளை அமல்படுத்தி சமூக நீதிக் காவலராக உயர்ந்தார் வி.பி.சிங். இவருக்கு சென்னை மாநில கல்லூரி வளாகத்தில் முழு உருவ சிலை நிறுவப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூன் மாதம் அறிவிப்பு வெளியிட்டார்.
அதன் படி வி.பி.சிங்கின் முழு உருவச் சிலை அமைக்கப்பட்ட நிலையில், அதனை சிறப்பு விருந்தினரான உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ், வி.பி. சிங் அவர்களின் துணைவியார் திருமதி சீதா குமாரி, மகன் அஜயா சிங் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பின்னர் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட உத்தர பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் சிறப்புரையாற்றினார். அப்போது பேசிய அவர், ” நாட்டின் புகழ்பெற்ற கல்லூரி வளாகத்தில் முன்னாள் பிரதமர் வி. பி. சிங்கின் சிலையை திறந்துவைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி. கலைஞரைப் போல முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார். மக்கள் உரிமைக்கான போராட்டத்தை தொடர்ந்து முன்னெடுப்போம். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிற்படுத்தப்பட்டோர், பட்டியல் சமூகத்தினர், சிறுபான்மையினரின் வரலாற்று முக்கியத்துவத்தை முன்னெடுத்துச் செல்கிறார். இதன் மூலம் மக்களுக்கு அவரின் மீதும், அவரின் கட்சியினரின் மீதும் இருக்கும் நம்பிக்கை அதிகரிக்கும்.
இடஒதுக்கீட்டின் தேவை உள்ள மக்களுக்கு அதை வழங்குவது அவசியம். சில நேரங்களில் இடஒதுக்கீடு தேவையா என்ற விவாதம் எழுகிறது. ஆனால், பிற்படுத்தப்பட்ட, பட்டியல் சமூகத்தினருக்கு இடஒதுக்கீடு வழங்கப்படவேண்டும் என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம். சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தப்பட்டு இன்னும் அதிகமான மக்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும்” என்று கூறினார்.
Also Read
-
“உங்களுக்கு வெட்கமே இல்லையா?” - மம்தா குறித்த பாஜக வேட்பாளரின் பேச்சுக்கு குவியும் கண்டனம்!
-
ஒன்றிய அமைச்சர் பேரணியில் காங்கிரஸ் ஆதரவாளர்... பத்திரிகையாளரிடம் கூறிய ஷாக் காரணம்... வீடியோ வைரல்!
-
“பேருந்து சேவையால் மெட்ரோ சேவை பாதிப்பதை நிரூபிக்க முடியுமா?” - மோடிக்கு அமைச்சர் PTR சவால்!
-
மோடியும், யோகியும் : சர்வாதிகாரத்திற்கு வித்திடும் இரு பெரும் சர்வாதிகாரிகள்!
-
முதலீட்டாளர்களை விட அதிக வருமானம் ஈட்டும் ஒன்றிய பா.ஜ.க அரசு : கேள்விகளால் திக்குமுக்காடிய நிதியமைச்சர்!