Politics

10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்கள் திட்டம் நிறுத்தம் - கடும் எதிர்ப்பால் பின்வாங்கிய ஒன்றிய அரசு !

இந்தியாவிலேயே மருத்துவ கட்டமைப்பில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு திகழ்ந்து வருகின்றனர். இங்கு அதிகளவில் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகள் இருப்பதால் ஏராளமான மருத்துவர்கள் உருவாகிறார்கள். இதன் மூலம் அனைவர்க்கும் மருத்துவ சிகிச்சை என்பது தமிழ்நாட்டில் சாத்தியமாகியுள்ளது.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்துக்கும் ஒரு மருத்துவ கல்லூரி என்பதை இலக்காக கொண்டு தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இதன் காரணமாக புதியதாக மாவட்டங்கள் உருவாகும்போதும், அங்கும் தமிழ்நாடு அரசு சார்பில் மருத்துவக்கல்லூரி உருவாக்கப்பட்டு வருகிறது.

இப்படி தமிழ்நாடு ஐரோப்பிய நாடுகளுக்கே சவால் விடுக்கும் வகையில் திகழ்வதால் வெளிநாடுகளில் இருந்து கூட சிகிச்சைக்காக பலர் தமிழ்நாடு வருகின்றனர். எனினும், தமிழ்நாட்டின் இந்த சூழலை கெடுக்கும் வகையில், 10 லட்சம் பேருக்கு 100 மருத்துவ இடங்களுக்கு மேல் அனுமதிக்கக் கூடாது என்ற உத்தரவை ஒன்றிய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்தது.

தமிழ்நாடு ஏற்கனவே இந்த இலக்கை எட்டிவிட்ட நிலையில், புதிய மருத்துவ கல்லூரிகள் தொடங்க முடியாத நிலை ஏற்பட்டது. இதன் காரணமாக தமிழ்நாடு அரசு சார்பில் இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை நிறுத்துமாறு பிரதமர் நரேந்திர மோடி அவர்களுக்கு கடிதம் எழுதியிருந்தார். மேலும், அதிக மருத்துவ கல்லூரிகளை கொண்ட தென் மாநிலங்களிலும் இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது .

இந்த நிலையில், தென் மாநிலங்களின் கடுமையான எதிர்ப்பால் நிறுத்தி வைப்பதாக ஒன்றிய அரசின் தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. அடுத்த கல்வி ஆண்டு முதல் இந்கத திட்டத்தை செயல்படுத்தப்படவிருந்த நிலையில், விரிவான ஆலோசனைகளுக்குப் பிறகு அடுத்த கட்ட முடிவு எடுக்கப்படும் என்று மருத்துவ ஆணையம் தெரிவித்துள்ளது.

Also Read: பெண்ணினத்தை உயர்த்தும் முதலமைச்சரின் முக்கியமான ஐந்து திட்டங்கள் - பட்டியலிட்டு பாராட்டிய முரசொலி !