Politics

”கேரளாவில் பாஜவுடனான கூட்டணி கிடையாது” - பகிரங்கமாக அறிவித்த கேரள ஜே.டி.எஸ் பிரிவு !

கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் ஆளும் பாஜக அரசை தோற்கடித்து பெரும்பான்மைக்கும் அதிகமான இடங்களை கைப்பற்றி காங்கிரஸ் மாபெரும் வெற்றி பெற்றது.இந்த தேர்தலில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியும் இந்த தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

அதனைத் தொடர்ந்து வரும் நாடாளுமன்றத் தேர்தலில், மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியோடு கூட்டணி என பாஜக தலைவர்கள் தன்னிச்சையாக அறிவித்தனர். முதலில் இதனை மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவரும் தேவகவுடாவின் மகனுமான குமாரசாமி மறுத்தாலும் பின்னர் அதனை ஒப்புக்கொண்டார்.

இதன் காரணமாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியின் மாநில துணைதலைவர் சையத் சபிவுல்லா, மாநில பொதுச்செயலாளர் அப்துல் காதர் ஷாஹீத் ஆகியோர் அக்கட்சியில் இருந்து விளங்குவதாக அறிவித்தனர். இப்படி முக்கிய நிர்வாகிகள் அந்த கட்சியில் இருந்து விலகியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து மக்களவை தேர்தலில் பாஜகவை ஆதரிக்க மாட்டோம். 'INDIA' கூட்டணிக்குதான் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி ஆதரவு தெரிவிக்கும். எங்களுடையது தான் உண்மையான மதச்சார்பற்ற ஜனதா தளம் என அக்கட்சியின் கர்நாடக மாநில தலைவர் இப்ராஹிம் அறிவித்தது பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த நிலையில், கேரளாவில் பாஜவுடனான கூட்டணி கிடையாது என கேரள மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி தலைவர் மேத்யூ டி. தாமஸ் அறிவித்துள்ளார். இது குறித்து மேத்யூ டி. தாமஸ் மற்றும் அக்கட்சியை சேர்ந்த மாநில அமைச்சர் கிருஷ்ணன்குட்டி ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.

அப்போது பேசிய அவர்கள், ”கட்சி தலைமையிடம் பாஜவுடனான கூட்டணி ஏற்கத்தக்கதல்ல என்ற எங்களது கருத்தை தெரிவித்துள்ளோம். வரும் நாடாளுமன்றத் தேர்தலில் கேரளாவில் மதச்சார்பற்ற ஜனதா தளம் தனித்துப் போட்டியிடும். இதற்க்கு கட்சியில் அனைவரும் அதற்கு ஒப்புதல் அளித்துவிட்டனர்” என்று தெரிவித்துள்ளனர்.

Also Read: புள்ளிப்பட்டியலில் முதலிடம் : அசத்தும் இந்தியா அணி.. தொடரில் தோற்காத ஒரே அணியாக ஆதிக்கம் !