Politics
கர்நாடகா: 'சாவர்க்கர் வாழ்க'- மாணவர்ளை கோஷமிடவைத்த பள்ளி.. கண்டனம் எழுந்ததும் மன்னிப்பு கேட்ட நிர்வாகம் !
பா.ஜ.க-வினரால் ‘வீர சாவர்க்கர்’ என அழைக்கப்படும் வி.டி.சாவர்க்கர் மன்னிப்புக் கடிதங்களுக்குப் பெயர்போனவர். விடுதலை போராட்டத்தின் போது, ஆங்கிலேய அரசை எதிர்க்காமல் மன்னிப்பு கடிதம் எழுதிக் கொண்டிருந்தவர்தான் சாவர்க்கர் என பலரும் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார்கள்.இப்படி ஆங்கிலேயர்களிடம் அடிபணிந்து சென்ற சாவர்க்கரைதான் பா.ஜ.க ஆட்சிக்கு வந்ததிலிருந்தே எப்படியாவது அவரின் வரலாற்றை மாற்றி விடுதலை போராட்டத்திற்காக அரும்பாடுபட்டவர் என சித்தரிக்க முயன்று வருகிறது.
கடந்த ஆண்டு 75ம் ஆண்டு சுதந்திர தினத்தையொட்டி கர்நாடக பாஜக அரசால் வெளியிடப்பட்ட சுதந்திர தின சிறப்பு மலரில் கூட சாவர்க்கர் படம் இடம் பெற்றது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் பொதுமக்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் உள்ள பள்ளி ஒன்றில் மாணவர்களை 'சாவர்க்கர் வாழ்க' என முழக்கமிட வைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் தக்ஷின கன்னடா மாவட்டம், பந்த்வால் தாலுகாவில் உள்ள மஞ்சி என்னும் இடத்தில் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் சுதந்திர தின விழா நடைபெற்றுள்ளது. இதில் மாணவர்களும், பெற்றோரும் கலந்துகொண்டுள்ளனர். அப்போது பள்ளி முதல்வர் மாணவர்களை 'சாவர்க்கர் வாழ்க' என முழக்கமிட வைத்துள்ளார். இதனை கண்ட அங்கிருந்த மாணவர்களின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்து இது குறித்து அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அடுத்த நாள் பள்ளியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றபோது மாணவர்களின் பெற்றோர் இது குறித்து கேள்வியெழுப்ப பள்ளி முதல்வர் சார்பில் நடந்த சம்பவத்துக்கு மன்னிப்பு கோரப்பட்டுள்ளது. இதனிடையே இது குறித்து வீடியோ சமூகவலைத்தளத்தில் வெளியாகி பலரும் கண்டனத்தை பெற்றது.
இதனைத் தொடர்ந்து வீடியோவை சமூக வலைதளத்தில் பரப்பிய நபர் மீது பள்ளி நிர்வாகம் சார்பில் காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. எனினும் காவல்துறை சார்பில் இந்த புகாரின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் கர்நாடகாவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Also Read
-
ரூ.50 ஆயிரம் மாமுதல் கேட்டு மிரட்டும் தவெக நிர்வாகி : புதிதாக வீடு கட்டி வரும் பெண் பரபரப்பு புகார்!
-
வாகனம் மோதியதால் ஏற்பட்ட தகராறு : இளைஞர் கத்தியால் குத்தி கொலை - சென்னையில் பரபரப்பு!
-
கரூர் துயரம் - விஜய் இதில் இருந்து தப்ப முடியாது ; இந்தப் பாவம் சும்மா விடாது : முரசொலி ஆவேசம்!
-
“It is grossly insensitive.. உங்களுக்கு தான் Class எடுக்கணும்...” - கீர்த்தனாவுக்கு உதயநிதி கண்டனம்!
-
‘திமுக திட்டங்களுக்கு ஸ்டிக்கர்..’ 50 நாள் தவெக ஆட்சியில் புது திட்டங்கள் இல்லை : தா.மோ.அன்பரசன் காட்டம்!