Politics

மணிப்பூர் கலவரத்திற்கு உடந்தையாக செயல்பட்டதே பாஜக அரசுதான் - பகிரங்க குற்றம் சாட்டிய மணிப்பூர் பாஜக MLA !

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.இதையடுத்து சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது.

இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.கடந்த இரண்டரை மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 130-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். அங்கு கடந்த மே 3 ஆம் தேதி மணிப்பூரின் காங்கோக்பி மாவட்டத்தின் பி பைனோ கிராமத்தை சேர்ந்த குக்கி பழங்குடி சமூகத்தை சேர்ந்த 2 பெண்களை மைதேயி சமூகத்தை சேர்ந்த தாக்கி, அவர்களை நிர்வாணமாக்கி ஊர்வலமாக சாலையில் அழைத்து சென்றுள்ளனர்.

அதன் பின்னர் அவர்களை கூட்டு பாலியல் கொடுமைக்கு உள்ளாகியுள்ளனர். அதோடு இதனை தடுக்க முயன்ற பெண்ணின் சகோதரரையும் அடித்து கொலை செய்துள்ளனர்.மணிப்பூரில் இணையதளம் முடக்கப்பட்டு தற்போதுதான் அங்கு இணையம் வழங்கப்பட்ட நிலையில், இந்த சம்பவம் தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இந்த சம்பவத்தை தொடர்ந்து மணிப்பூரில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற சம்பவங்கள் ஒவ்வொன்றாக வெளிவந்தவண்ணம் உள்ளது. இந்த வீடியோ உலகளவில் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்தியா முழுவதும் எதிர்க்கட்சிகள், மகளிர் அமைப்புகள், வழக்கறிஞர்கள், மாணவர்கள் என பல்வேறு தரப்பினரும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த நிலையில், மணிப்பூர் கலவரத்திற்கு பைரன் சிங் தலைமையிலான மாநில பாஜக அரசு உடந்தையாக செயல்பட்டதாக அம்மாநில பாஜக எம்.எல்.ஏ குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மணிப்பூர் மாநிலத்தில் பாஜக சார்பில் எம்.எல்.ஏவாக இருப்பவர் பவுலின்லல் ஹவுகிப். இவர் மணிப்பூர் கலவரம் கலவரத்திற்கு பைரன் சிங் தலைமையிலான மாநில பாஜக அரசு உடந்தையாக செயல்பட்டதாகவும், தற்போது இதனை போதைப் பொருளுக்கு எதிரான போர் என்று திசை திருப்ப முயல்வதாகவும் கூறியுள்ளார்.

Paolienlal Haokip

மேலும், குக்கி-ஜோமி இனத்தை அழிக்க நினைக்கும் லீபுன் மற்றும் ஆரம்பை டெங்கோல் அமைப்புகளுடன் பைரன் சிங் மிக நெருக்கமாக செயல்பட்டு வருபவர் என்றும் விமர்சித்துள்ளார். ஏற்கனவே பெரும்பான்மை மெய்தி இனத்தை சேர்ந்த கலவரக்காரர்களுக்கு பாஜக அரசு ஆதரவாக இருப்பதாக விமர்சனம் எழுந்த நிலையில், தற்போது அதை உண்மையாகும் வகையில் பாஜக எம்.எல்.ஏவே குற்றம் சாட்டியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: கை பட்டதால் தலித் மீது மலம் பூசப்பட்ட கொடூரம்.. சிறுநீர் சம்பவத்தைத் தொடர்ந்து ம.பியில் அடுத்த அதிர்ச்சி!