Politics
”45 நாட்களாக பற்றி எரியும் மணிப்பூர் மாநிலத்தை எட்டிக்கூடப் பார்க்காத மோடி”: ப.சிதம்பரம் கடும் விமர்சனம்!
வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து.
இதையடுத்து கடந்த மாதம் சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாகப் பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் வன்முறை வெடித்தது. பின்னர் இந்த வன்முறை மாநில முழுவதும் பரவியுள்ளது.
கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக வன்முறை வெடித்து வருகிறது. இந்த வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதையடுத்து மணிப்பூர் மாநிலத்தில் அமைதியை ஏற்படுத்தாமல் அமைதி காத்து வரும் ஒன்றிய அரசைக் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் விமர்சித்து வருகின்றனர்.
இந்நிலையில் 45 நாட்களாகப் பற்றி எரியும் மணிப்பூர் பற்றி ஒருவார்த்தை கூட பிரதமர் மோடி பேசாமல் இருந்து வருகிறார் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் விமர்சித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கர்நாடகாவில் இரட்டை எஞ்சின் அரசு தோல்வியடைந்தது. அதைக் கர்நாடக மக்கள் காட்டிக் கொடுத்தனர். இரட்டை எஞ்சின் அரசாங்கம் மணிப்பூர் மக்களைத் தோல்வியடையச் செய்கிறது.
மாநில அரசாக இருக்கும் ஒரு இஞ்சினிடம் எரிபொருள் இல்லை, ஒன்றிய அரசாக இருக்கும் மற்றொரு இஞ்சின் தன்னைத் தானே துண்டித்துக்கொண்டு லோகோ ஷெட்டில் ஒளிந்து கொண்டிருக்கிறது.
மணிப்பூர் மக்களின் அனைத்து தரப்பு மக்களின் நம்பிக்கையை பிரேன் சிங் இழந்துவிட்டார் என்பது வெளிப்படையானது. பிரதமர் மோடி மணிப்பூர் மக்களுடன் பேசவோ, அமைதிக்கான வேண்டுகோள் விடுக்கவோ தயாராக இல்லை. 45 நாட்களாக மணிப்பூர் பற்றி ஒரு வார்த்தை கூட பிரதமர் மோடி பேசவில்லை. எரியும் மாநிலத்தையும் பார்வையிடவில்லை" என தெரிவித்துள்ளார்.
Also Read
-
கோமாவில் இருந்து திடீரென விழித்தது போல பேசும் பழனிசாமி - அமைச்சர் டி.ஆர்.பி ராஜா விமர்சனம் !
-
சிரியா,ஈரானைத் தொடர்ந்து கத்தார் மீதும் இஸ்ரேல் தாக்குதல்... காரணம் என்ன ? உலக நாடுகள் கண்டனம் !
-
நாட்டின் 15-வது குடியரசுத் துணைத் தலைவர்... எம்.பிக்கள் வாக்களித்த தேர்தலில் சி.பி. ராதாகிருஷ்ணன் வெற்றி!
-
கரூரில் களைகட்டும் முப்பெரும் விழா ஏற்பாடு : “1 லட்சம் இருக்கைகள்...” - செந்தில் பாலாஜி தகவல்!
-
மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வத்துக்கு 'முரசொலி செல்வம் விருது' ... விவரம் உள்ளே !