Politics

மணிப்பூரின் சிறுபான்மை சமூக மக்கள் மீது திட்டமிட்ட தாக்குதலா ? -பாஜக முதல்வரின் பேச்சால் அதிர்ச்சி !

வடகிழக்கு மாநிலமான மணிப்பூரில் ஏராளமான பழங்குடி சமூக மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு நாகா, குக்கி, மைத்தேயி சமூக மக்கள் எண்ணிக்கையில் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இதில் மைத்தேயி சமூக மக்கள் தங்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

ஆனால், அவர்களின் இந்த கோரிக்கையை மற்றொரு முக்கிய சமூகமான குக்கி சமூக மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதனால் இந்த இருதரப்புக்கும் இடையே மோதல் போக்கு எழுந்துவந்து. இந்த நிலையில், சராசந்தூர் மாவட்டத்தில் மணிப்பூர் பழங்குடி இன மாணவர் சங்கம் சார்பாக பழங்குடியின மக்கள் ஒற்றுமை பேரணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

இந்த பேரணியில் பல ஆயிரம் பேர் கலந்துகொண்ட நிலையில், அங்கு குறிப்பிட்ட இரு சமூக மக்களுக்கு இடையே வன்முறை வெடித்தது.இந்த வன்முறை மாநிலம் முழுக்க பரவிய நிலையில், இம்பால், சராசந்தூர், கங்போக்பி மாவட்டங்களில் வீடுகள், தேவாலயங்கள் உள்ளிட்டவை தீக்கிரையாக்கப்பட்டன.

மோரே நகரில் குக்கி குழுவினரை இலக்கு வைத்து மைத்தேயி இனத்தவர் தாக்கிய நிலையில் தாக்குதலுக்கு அஞ்சி குக்கி பழங்குடி மக்கள் தங்கள் இடத்தில் இருந்து இடம் பெயர்ந்து வருகின்றனர். இந்த வன்முறையியில் 60 பேருக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் வன்முறை குறித்த பேசிய அந்த மாநில பாஜக முதல்வர் பிரேன் சிங், " வன்முறைக்கு எதிராக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பாதுகாப்புப்படையினர் மேற்கொண்ட நடவடிக்கையில், 40-க்கும் மேற்பட்ட ஆயுதமேந்திய பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். சிலர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் குக்கி போராளிக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள்" என்று கூறியுள்ளார்.

ஏற்கனவே பெரும்பான்மை சமூகமான மைத்தேயி சமூக மக்கள் சிறுபான்மை சமூகமான குக்கி பழங்குடி மக்கள் மீது அரசின் ஆதரவோடு தாக்குதல் நடத்தி வருகிறார்கள் என்ற குற்றச்சாட்டு எழுந்த நிலையில், தற்போது முதல்வரே கொல்லப்பட்ட, கைது செய்யப்பட்டவர்களின் பலர் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த குக்கி பழங்குடி மக்கள் என கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: ”முடிசூட்டு விழா முடிந்ததும் மன்னர் தெருக்களில் பொதுமக்களின் குரலை நசுக்குகிறார்”- ராகுல் காந்தி கண்டனம்!