Politics

தொடர்ந்து விலகும் முக்கிய நிர்வாகிகள்.. தேர்தல் நெருங்குகையில் வேட்பாளர் இல்லாமல் திணறும் கர்நாடக பாஜக !

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதிலும் சில நாட்களில் அங்கு சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பல்வேறு கருத்துக்கணிப்புகளில் ஆளும் பாஜக தோல்வியடைந்து காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றும் என கூறப்பட்டுள்ளது.

இதனால் பாஜக மேலிடம் அதிர்ச்சியில் உறைந்துள்ள நிலையில், காங்கிரஸ் கட்சியினர் உற்சாகத்தோடு பிரச்சாரத்தில் தீவிரம் காட்டி வருகின்றனர். மேலும், பாஜகவின் முக்கிய தலைவர்கள் சர்ச்சையில் சிக்கிக்கொள்வதும் தொடர்ந்து நடைபெற்றுவருகிறது.

இதுமட்டுமின்றி தேர்தல் நெருங்கவுள்ள நிலையில் முக்கிய பாஜக தலைவர்கள் அங்கிருந்து விலகி பாஜகவில் இணைவதும் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகா மாநில பாஜக எம்.எல்.ஏ. கோபாலகிருஷ்ணா இரு தினங்களுக்கு முன்பு தமது பதவியை ராஜினாமா செய்த நிலையில் காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். இவரைத்தவிர பா.ஜ.கவின் இரண்டு மேலவை உறுப்பினர்கள், மதசார்பற்ற ஜனதாதள கட்சியின் ஒரு எம்.எல்.ஏ தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளனர்.

இந்த நிலையில் அங்கு முன்னாள் துணை முதல்வர் லட்சுமண் சவதி பாஜகவில் இருந்து விலகுவதாக அறிவித்த நிலையில், பெங்களூரு ஜெயநகர் தொகுதியில் என்.ஆர்.ரமேஷுக்கு சீட் தராததைக் கண்டித்து அவரின் ஆதரவாளர்கள் 1,200 பேர் பாஜகவில் இருந்து கூண்டோடு விலகுவதாக அறிவித்துள்ளனர். இது போன்ற காரணங்களால் பாஜகவுக்கு கர்நாடகாவில் பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது.

Also Read: “எங்க இருந்து டா வர்றீங்க..” ஆந்திர முதல்வர் ஸ்டிக்கரை கடித்ததால் ஆத்திரம்.. நாய் மீது பெண் பரபர புகார்!