Politics

சட்டப்பேரவையில் ஆபாசப்படம் பார்த்த பாஜக MLA.. கர்நாடகத்தை தொடர்ந்து திரிபுராவிலும் அதிர்ச்சி !

திரிபுராவில் தற்போது மாணிக் சஹா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. இங்கு தற்போது சட்டப்பேரவை கூட்டத்தொடர் நடைபெற்று வருகிறது. எனவே அனைத்து கட்சி எம்.எல்.ஏ-க்களும் இதில் பங்கேற்று அம்மாநில தொகுதிகளில் உள்ள மக்கள் பிரச்னைகளை எடுத்து வைத்து வருகின்றனர்.

இந்த சூழலில் கடந்த 27-ம் தேதி இரண்டாவது நாள் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் கோரிக்கைகளை முன்வைத்து கொண்டிருந்தனர். அந்த வேளையில் பாஜக எம்.எல்.ஏ-வான ஜதப் லால் நாத் என்பவர் தனது இருக்கையில் அமர்ந்தவாறே தன்னுடைய மொபைல் போனில் ஆபாச படம் பார்த்துக்கொண்டிருந்தார்

அதோடு ஆபாச படம் பார்த்துக் கொண்டிருந்தபோதும், யாருக்கும் சந்தேகம் வரக்கூடாது என்பதால் அவ்வப்போது கூட்டத்தொடரையும் கவனித்து வந்தார். இந்த நிலையில் இதுதொடர்பான காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி பாஜக எம்.எல்.ஏவுக்கு வலுத்த கண்டனங்கள் குவிந்து வருகிறது. மேலும் ஒரு எம்.எல்.ஏ- அதுவும் சட்டமன்ற கூட்டத்தொடரில் வைத்து இவ்வாறு நடந்துகொள்வது வெட்கக்கேடானது என்றும் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், திரிபுரா பாஜக தலைவர் ராஜிப் பட்டாச்சாரியா, ’சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தப்படும் என்றும், முதல் கட்டமாக ஜதப் லால் நாத்துக்கு நோட்டீஸ் விடுக்கப்படும்’ என்றும் உறுதி அளித்துள்ளார். இது தற்போது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஜதப் லால் நாத் வடக்கு திரிபுராவை சேர்ந்தவர். ஆரம்பத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த இவர், கடந்த 2018 ஆம் ஆண்டில் பாஜகவில் இணைந்தார். அப்போது அங்கு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில், சிபிஎம் வேட்பாளரும், முன்னாள் சபாநாயகருமான ராமேந்திர சந்திர தேப்நாத்துக்கு எதிராக பாஜக சார்பில் போட்டியிட்டார். ஆனால் அவர் தோல்வியை தழுவினார்.

தொடர்ந்து இந்த முறை நடைபெற்ற தேர்தலில் மீண்டும் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக எம்.எல்.ஏ-வாக பதவியேற்றுள்ளார். இந்த சூழலில் முதல்முறை MLA -பதவி வகிக்கும் ஒருவர் இப்படி ஒரு காரியத்தை செய்துள்ளது அம்மாநில மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக கர்நாடகத்திலும், மற்ற மாநிலங்களிலும் இதே போல் சில பாஜக எம்.எல்.ஏ-கள் ஆபாச படம் பார்த்ததாக சர்ச்சையில் சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: தூய்மை காவலர்களின் ஊதியம் ரூ.5000 உயர்வு : அமைச்சர் இ.பெரியசாமி வெளியிட்டுள்ள 15 புதிய அறிவிப்புகள் இதோ!