Politics

சட்டப்பேரவையில் மோதிக்கொண்ட EPS - OPS அணியினர்.. வேட்டியை மடித்தபடி அடிக்கப்போன மனோஜ் பாண்டியன்!

தமிழ்நாடு அரசின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதி நிலை அறிக்கைக் கூட்டத் தொடர் மார்ச் 20ம் தேதி தொடங்கியது. அன்றைய தினமே தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். பின்னர் அடுத்த நாள் வேளாண் நிதிநிலை அறிக்கையை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்து வாசித்தார்.

இதையடுத்து இன்று மீண்டும் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. இன்று தொடங்கிய சட்டப்பேரவை கூட்டத் தொடரில் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவை மீண்டும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தாக்கல் செய்தார்.

இதையடுத்து காங்கிரஸ், பா.ம.க, சிபிஎம், சிபிஐ, விசிகி, பா.ஜ.க, அ.தி.மு.க உறுப்பினர்கள் ஆன்லைன் சூதாட்ட தடை மசோதாவுக்கு ஆதரவு தெரிவித்துப் பேசினர். இவர்களைத் தொடர்ந்து முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் பேசினார். அப்போது அவரை பேச அணிமதிக்கக் கூடாது என எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது அணியினர் எழுந்து நின்று கூச்சலிட்டனர். இதனால் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது குறிக்கிட்ட சபாநாயகர் அப்பாவு, அ.தி.மு.கவினரை அமைதி காக்கும்படியும், முன்னாள் முதலமைச்சர் என்ற முறையிலேயே ஓ.பன்னீர்செலவம் தனது கருத்து என கூறுகிறார். ஆனால் இதை கேட்காத எடப்பாடி பழனிசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது மனோஜ் பாண்டியன் வேட்டியை மடித்துக் கட்டிக் கொண்டு உறுப்பினர் கோவிந்தசாமியை அடிக்க சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது. அவரது அருகே இருந்த உறுப்பினர்கள் அவரை தடுத்து நிறுத்தினர். அ.தி.மு.கவின் உட்கட்சி சண்டை தற்போது சட்டமன்றம் வரை வெடித்துள்ளது. முக்கியமான ஆன்லைன் தடை மசோதா குறித்து விவாதம் நடந்த போது தங்கள் உட்கட்சி பிரச்சனையை பெரிதாக்கி சட்டப்பேரவை நேரத்தை அ.தி.மு.கவினர் தேவையில்லாமல் வீணடித்தனர்.

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா இறந்த பிறகு அ.தி.மு.கவில் ஒன்றைத் தலைமை பிரச்சனை எழுந்ததால் இ.பி.எஸ் மற்றும் ஓ.பி.எஸ் அணிகளுக்கு இடையே மோதல் போக்கு ஏற்பட்டு வருகிறது. இருவரும் தாங்கள் தான் அ.தி.மு.க என கூறிவருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: திமுக ஆட்சியில் மண்ணும் மகிழ்கிறது.. ‘பசிப்பிணி போக்கும் முதல்வர்’ ஆக உயர்ந்து நிற்கிறார் மு.க.ஸ்டாலின்!