Politics

“2024ல் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர்” : திண்டுக்கல் ஐ.லியோனி பேச்சு!

சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினரும் தி.மு.க மாநில இளைஞரணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் நெல்லை டவுன் வாகையடி முனையில் நடைபெற்றது . இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தமிழ்நாடு பாடநூல் கழக தலைவரும், தி.மு.க கொள்கை பரப்புச் செயலாளருமான திண்டுக்கல் ஐ.லியோனி கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், நல்லதை சொன்னால் நான் கேட்பேன். உன் கொள்கையை என்னிடம் திணித்தால் நான் ஏற்க மாட்டேன் என பதவியேற்பு விழாவிலேயே ஆளுநருக்கு சவுக்கடி கொடுத்தவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

திராவிடத்திற்கு சோதனையான காலம். தமிழை பாதுகாக்க தற்போது போராட வேண்டியுள்ளது. சென்னையிலிருந்து மதுரைக்கு வரும் ஒரு விமானத்தில் தமிழர் பலர் பயணம் செய்யும் நிலையிலும் அந்த விமானத்தில் தமிழில் அறிவிப்பு கொடுப்பதில்லை. தமிழ் மொழியில் அர்ச்சனை என தி.மு.க ஆட்சியில் தான் கொண்டுவரப்பட்டது.

அண்ணல் அம்பேத்கர் சட்டம் இயற்றி அப்போதைய பிரதமர் நேருவிடம் கொடுத்து பெண்களுக்கான சொத்துரிமைக்கு பாராளுமன்றத்தில் சட்டம் கொண்டுவர முயற்சித்த போது; அது நிராகரிக்கப்பட்டது. பெண்களைப் பெற்றால் கண்கலங்க வேண்டாம் என பெண்களுக்கு சொத்துரிமை கொடுக்க சட்டம் கொண்டு வந்தது தி.மு.க ஆட்சியில் தான்.

அரசியல் உரிமையை பெண்களுக்கு பெற்றுத்தந்து அவர்களுக்கான சம இட ஒதுக்கீட்டை கொடுத்து தமிழகத்தின் 22 மேயர்களில் 12 மேயர் பெண் என்பதை உருவாக்கியவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். நல்ல பொருளை நாம் தான் வீடு தேடி கொண்டு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து நல்ல மருத்துவத்தையும், நல்ல கல்வியையும், இல்லம் தேடி கல்வி இல்லம் தேடி மருத்துவம் என வீடு வீடாக கொண்டு சேர்த்தவர் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

பாரத பிரதமர் திருக்குறளை உச்சரிப்பது எங்களுக்கு பெருமை. ஆனால் திருக்குறள் தந்த தமிழை ஆட்சி மொழியாக கொண்டு வராமல் திருக்குறளை பேசுவது ஏமாற்றுத் தனம். பாஜகவின் ஏமாற்று வேலையை வடமாநிலத்தவர்கள் வேண்டுமானால் நம்பலாம். பெரியார் மண்ணின் தமிழர்கள் எப்போதும் நம்ப மாட்டார்கள்.

காசியில் நடத்தும் தமிழ் சங்கத்தில் கூட தமிழில் பாடல் பாட முடியாமல் சமஸ்கிருத பாடலை இளையராஜா மூலம் பாடவைத்து ரசித்து பார்க்கும் பிரதமரின் நாடகத்தை தமிழர்கள் நம்ப மாட்டார்கள். பா.ஜ.க இன்னொரு முறை ஆட்சிக்கு வந்தால் காந்தியின் படத்தை ரூபாய் நோட்டில் இருந்து எடுத்துவிட்டு, கோட்சேவின் படத்தை வைத்து விடுவார்கள் வரலாற்றை மாற்றி எழுத முடியாது.

டெல்லி செங்கோட்டை அருகே தி.மு.க கொடி பட்டொளி வீசி பறந்து வருகிறது. 2024ல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கை காட்டுபவரே அடுத்த பிரதமர். அதற்கு 40 தொகுதிகளும் வெற்றியை தேடி தர வேண்டும்” என பேசினார்.

Also Read: லட்சுமி யானை உயிரிழந்த இடத்தில் வைக்கப்பட்ட சிலையை அகற்றிய போலிஸ்: எதிர்ப்பு தெரிவித்த மக்கள் மீது தடியடி