Politics
அடுத்த பிரதமர் இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக்தான்.. அடித்துச் சொல்லும் இங்கிலாந்து ஊடகங்கள் !
இங்கிலாந்தின் பழமைவாத ( கன்சர்வேடிவ் ) கட்சியைச் சேர்ந்த போரிஸ் ஜான்சன் 2019ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே உலகளவில் பல விமர்சனங்களுக்கு உள்ளானார். அவரது அமைச்சரவை சகாக்களே அவர் மீது கடும் விமர்சனத்தை வைத்தனர்.
இதன் காரணமாக அவர் பதவி விலகினார். அதைத் தொடர்ந்து இங்கிலாந்தில் அடுத்த பிரதமராக வரப்போவது யார் என்ற கேள்வி எழுந்தது. இந்த பதவிக்கு பலர் போட்டியிட்ட நிலையில், நிதித்துறை அமைச்சராக இருந்த ரிஷி சுனக் மற்றும் வெளியுறவுத் துறை அமைச்சராக இருந்த லிஸ் ட்ரஸ் ஆகியோர் இறுதிசுற்றுக்கு தகுதி பெற்றனர்.
ஆரம்பத்தில் அதிக ஆதரவு பெற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த ரிஷி சுனக் அடுத்த சுற்று செல்ல செல்ல ஆதரவை இழந்து வந்ததாக தகவல் வெளியானது. அதன்பின்னர் பழமைவாத கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் வாக்களித்த இந்த தேர்தலில் இறுதிச்சுற்றில் வென்று லிஸ் ட்ரஸ் இங்கிலாந்தின் மூன்றாவது பெண் பிரதமராக தேர்வாகினார்.
இவர் பதவியேற்றதும் அவர் பல்வேறு பொருளாதார நடவடிக்கைகளை மேற்கொண்டார். குறிப்பாக லிஸ் ட்ரஸ்ஸால் அறிவிக்கப்பட்ட புதிய பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கு வரிச் சலுகை பெரும் புயலை கிளப்பியது. அரசு மக்களை விடுத்து பணக்காரர்களை வளர்த்து வருவதாக விமர்சனங்கள் எழுந்தன.
அதைத் தொடர்ந்து பதவியேற்ற 45 நாட்களில் இங்கிலாந்து பிரதமர் பதவியை லிஸ் டிரஸ் ராஜினாமா செய்தார். அதைத் தொடர்ந்து அடுத்த கன்சர்வேட்டிவ் கட்சி பதவிக்கான தேர்தல் நடைபெறவுள்ளது. கட்சி தலைவரே பிரதமராக தேர்ந்தெடுக்கப்படுவார் என்பதால் இந்த தேர்தல் முக்கியத்துவம் பெற்றுள்ளது.
இந்த முறை இந்த போட்டியில் முன்னாள் பிரதமர் போரிஸ் ஜான்சன், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக், ஹவுஸ் ஆஃப் காமன்ஸ் தலைவர் பென்னி மொரடான்ட், பிரிட்டன் பாதுகாப்புத் துறை செயலாளர் பென் வாலஸ் ஆகியோர் இருப்பதாக இங்கிலாந்து ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
அதேநேரம் கடந்த முறை இறுதி சுற்றுவரை முன்னேறிய இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் இந்த முறை வெற்றிபெற அதிக வாய்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. யூ-கோவ் என்ற மீடியா நிறுவனம் எடுத்த கருத்துக்கணிப்பில் அடுத்த பிரதமராக ரிஷி சுனக் வர வேண்டும் என்று 55% பேர் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதேபோல Sky Bet என்ற நிறுவனம் வெளியிட்ட கருத்து கணிப்பிலும் ரிஷி சுனக்கே முன்னிலையில் இருக்கிறார்.
நிதி அமைச்சராக பொறுப்பு வகித்து பொருளாதாரத்தில் முன் அனுபவம் அதிகமுள்ள ரிஷி சுனக் பிரதமராக பொறுப்பேற்றால் நாட்டின் பொருளாதார பிரச்சனைகளை சரி செய்வார் என கன்சர்வேடிவ் கட்சியை சேர்ந்தவர்களும் பொதுமக்களும் கருதுவதாக கருத்து கணிப்பை வெளியிட்ட நிறுவனங்கள் கூறியுள்ளன.
Also Read
-
கையை கட்டிக்கொண்டு இருக்க முடியுமா? : ஆளுநர் வழக்கில் உச்சநீதிமன்றம் சரமாரிக் கேள்வி!
-
”தமிழ்நாட்டில் இரு மடங்கு அதிகரித்த பட்டு உற்பத்தி” : பெருமையுடன் சொன்ன அமைச்சர் தா.மோ.அன்பரசன்!
-
கருப்பு சட்ட மசோதா : “எதிர்க்கட்சிகளை அழிக்க நினைக்கும் மட்ட ரகமான உத்தி இது” - ஜவாஹிருல்லா கண்டனம்!
-
குலசேகரப்பட்டினம் ஏவுதளத்துக்காக ரூ.985.96 கோடி நிதி ஒதுக்கீடு! : கனிமொழி எம்.பி.க்கு ஒன்றிய அரசு பதில்!
-
”அப்பட்டமான கருப்புச் சட்டம்” : அரசியல் சட்டத் திருத்த மசோதாவுக்கு கி.வீரமணி கண்டனம்!