Politics

"கல்வித்துறையில் பெருமளவில் லஞ்சம், ஊழல் நடக்கிறது"- கர்நாடக பா.ஜ.க அரசு மீது தனியார் பள்ளிகள் புகார் !

கர்நாடக மாநிலத்தில் பா.ஜ.க தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. இம்மாநில முதல்வராக பசவராஜ் பொம்மை உள்ளார். கடந்த சில மாதங்களாகவே கர்நாடகாவில் மதமோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இதனால் இஸ்லாமியர்கள் பல்வேறு பிரச்சனைகளை எதிர்க்கொண்டு வருகின்றனர்.

மேலும் அம்மாநில அமைச்சர்கள் மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. இதை பா.ஜ.க சட்டமன்ற உறுப்பினர்களே இந்த புகார்களை எழுப்பி வருகின்றனர். அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் பா.ஜ.க அமைச்சர் மாதுசுவாமி அண்மையில் சமூக ஆர்வலர் பாஸ்கர் என்பவரிடம் பேசிக் கொண்டிருந்த ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியானது.

அதில், ”கர்நாடகாவில் நாங்கள் ஆட்சி செய்யவில்லை. வெறும் மேலாண்மை செய்து கொண்டிருக்கிறோம். கர்நாடகாவில் நடப்பது அரசு அல்ல. வெறும் மேலாண்மை மட்டுமே. இன்னும் எட்டு மாதங்கள் என நாங்கள் காலத்தைத் தள்ளிக் கொண்டிருக்கிறோம்" என்று கூறினார்.

இந்த நிலையில், கர்நாடகாவில் இரண்டு சங்கங்கள் சார்பாக 13,000 தனியார் பள்ளிகள் ஒன்றிணைந்து பிரதமர் மோடிக்குப் புகார்க் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளன. அதில், ``கர்நாடகாவிலுள்ள தனியார் கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில், முறையான விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படுவதில்லை. புதிய கல்வி நிறுவனங்களுக்கு அனுமதி வழங்குவதில் பெருமளவில் லஞ்சம், ஊழல் நடக்கிறது. இது தொடர்பாக கல்வியமைச்சர் பி.சி.நாகேஷ் மற்றும் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் பலமுறை புகாரளித்தும், இதுவரை நடவடிக்கை எதுவும் எடுக்கப்பட‌வில்லை. எனவே, இந்த குற்றச்சாட்டுகளைப் பரிசீலனை செய்து, உரிய‌ விசாரணை மேற்கொண்டு, தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அந்த கடிதத்தில் கூறப்பட்டிருக்கிறது. இந்த புகார் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: K. V பள்ளிகளில் 12,044 ஆசிரியர் பற்றாக்குறை, 40% பள்ளிகளில் H.M இல்லை.. வெளிவந்த அதிர்ச்சி தகவல் !