Politics

“கோட்டையா.. யார்கிட்ட?” : இரண்டாம் இடம் கூட இல்லை... அடித்து தள்ளப்பட்ட அ.தி.மு.க!

தமிழ்நாட்டின் இரண்டாவது பெரிய மாநகராட்சியான கோயம்புத்தூர் மாநகராட்சியில் இரண்டாவது இடத்தையும் இழக்கிறது அ.தி.மு.க.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன். அ.தி.மு.கவின் முக்கிய தலைவர்களின் கோட்டைகள் என கருத்தப்பட்டு வந்த பல பகுதிகளை தி.மு.க தகர்த்தெறிந்துள்ளது.

தமிழகத்தில் நடந்து முடிந்துள்ள நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.கவின் இணை ஒருங்கிணைப்பாளரான எடப்பாடி பழனிசாமி வசிக்கும் 23வது வார்டில் தி.மு.க வேட்பாளர் வெற்றி பெற்றுள்ளார்.

அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த தொகுதியான போடிநயக்கனூர் - குச்சனூர் பேரூராட்சியில் அ.தி.மு.க வேட்பாளர்கள் ஒரு வார்டில் கூட வெற்றி பெறவில்லை.

இதேபோல, அ.தி.மு.க முன்னாள் அமைச்சர்களின் சொந்த தொகுதிகளில் அ.தி.மு.க படுதோல்வி அடைந்துள்ளது. கோவை, திருச்சி மாநகராட்சிகளில் 3வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளதால் எதிர்க்கட்சி அந்தஸ்தை இழந்துள்ளது அ.தி.மு.க.

கோவை மாநகராட்சியில் மொத்தமுள்ள 100 வார்டுகளில் 92 வார்டுகளில் முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் தி.மு.க 68 வார்டுகளில் வென்றுள்ளது. கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் 9 இடங்களில் வென்றுள்ளது. கம்யூனிஸ்ட் கட்சிகள் இரண்டும் தலா 4 இடங்களைப் பெற்றுள்ளன.

கோவை மண்டலத்தில் வலிமை வாய்ந்தது அ.தி.மு.க என அக்கட்சியினர் கூறிவரும் நிலையில் 3 வார்டுகளில் மட்டுமே வென்று ஐந்தாவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது.

அதேபோல திருச்சி மாநகராட்சியில் மொத்தமுள்ள 65 இடங்களில் தி.மு.க 49 இடங்களில் வென்றுள்ளது. காங்கிரஸ் 5 இடங்களில் வென்றுள்ளது. அ.தி.மு.க 3 இடங்களில் மட்டுமே வென்றுள்ளது.