Politics

₹25 லட்சம் ரொக்கம்; முக்கிய ஆவணங்களின் பின்புலம் என்ன? 8 மணிநேரமாக விஜயபாஸ்கரிடம் கிடுக்கிப்பிடி விசாரணை!

கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாரால் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் தரவுகள் தொடர்பாக முன்னாள் அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கரிடம் சரமாரி கேள்விகள் எழுப்பப்பட்டன.

முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர், அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோர் வருமானத்திற்கு அதிகமாக சொத்துகள் சேர்த்து இருப்பதாக கரூர் ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலிஸாரிடம் புகார் அளிக்கப்பட்டு இருந்தது. அந்தப் புகாரின் பேரில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் கடந்த ஜூலை 21ம் தேதி வழக்கு பதிவு செய்தனர்.

அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது மனைவி விஜயலட்சுமி, அவரது தம்பி சேகர் ஆகியோருக்கு சொந்தமான 26 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை கடந்த ஜூலை மாதம் 22 தேதி அன்று அதிரடியாக சோதனை மேற்கொண்டது. இந்த சோதனையில் கணக்கில் வராத 25 லட்சத்து 56 ஆயிரம் ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

அதேபோல் சொத்துகள் தொடர்புடைய முக்கிய ஆவணங்கள் மற்றும் காப்பீட்டு நிறுவனங்களில் செய்த முதலீடுகள் அடங்கிய ஆவணங்கள் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டது. அதுமட்டுமின்றி பல நிறுவனங்களில் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை தொடர்பாகவும் பல முக்கிய ஆவணங்களும் கைப்பற்றப்பட்டது.

கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் மற்றும் ரொக்கம் தொடர்பாக லஞ்ச ஒழிப்பு துறை தலைமை அலுவலகத்தில் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறு எம்ஆர் விஜயபாஸ்கர் அவரது மனைவி விஜயலட்சுமி அவரது தம்பி சேகர் ஆகியோருக்கு கடந்த அக்டோபர் மாதம் 19ஆம் தேதி சம்மன் அனுப்பப்பட்டது.

லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் சம்மன் அனுப்பிய நிலையில் இன்று காலை 11 மணியளவில் ஆதம்பாக்கம் பகுதியில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை தலைமை அலுவலகத்தில் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் நேரில் ஆஜரானார்கள்.

ஆஜரான அவர்களிடம் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் காப்பீட்டு நிறுவனங்களில் செய்யப்பட்ட முதலீடு தொடர்பாக கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் அடிப்படையில் கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி தலைமையில் விசாரணையை தொடங்கினர். மேலும் முதலீடுகள் முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கருக்கு நெருக்கமான வேறு நபர்களின் பெயர்களில் உள்ளதா என்ற கோணத்திலும் விசாரணை மேற்கொண்டனர்.

அதேபோல் பல்வேறு நிறுவனங்களில் மேற்கொண்ட பணப்பரிவர்த்தனை குறித்த ஆவணங்கள் தொடர்பாகவும் லஞ்ச ஒழிப்பு துறை போலிஸார் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம் கிடுக்கிப்பிடியாக விசாரணை மேற்கொண்டனர். மேலும் கைப்பற்றப்பட்ட ரொக்கம் குறித்தும் அவை எங்கிருந்து பெறப்பட்டது யார் கொடுத்தார்கள் இதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது மேலும் ஆவணங்களின் அடிப்படையிலும் இதில் தொடர்புடைய நபர்கள் குறித்து கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் 8 மணி நேரத்திற்கும் மேலாக தீவிர விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணை நிறைவு பெறாத நிலையில் முன்னாள் அதிமுக அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் ஆகியோர் நாளை மீண்டும் விசாரணைக்கு ஆஜராகும்படி கரூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: கரூரில் தேர்தல் அதிகாரிக்கு கொலை மிரட்டல்: விரைவில் கைதாகிறார் எம்.ஆர்.விஜயபாஸ்கர்?