Politics

’எங்க கூட்டத்துக்கு வரலனா வேலை கிடையாது’ ; மிரட்டல் விடுத்த அதிமுகவினர்; திமுக எம்.எல்.ஏ அதிரடி நடவடிக்கை

சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள மாவட்ட ஊராட்சி குழு 10-வது வார்டு உறுப்பினர் பதவிக்கான ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த தேர்தலில் அதிமுக சார்பில் முத்துநாயக்கன்பட்டி கிராமத்தை சேர்ந்த அதிமுக பிரமுகர் முருகன் போட்டியிடுகிறார்.

இவருக்கு ஆதரவாக ஓமலூர் சட்டமன்ற தொகுதி அதிமுக உறுப்பினர் மணி, அதிமுகவை சேர்ந்த ஒன்றிய சேர்மன் ராஜேந்திரன் மற்றும் கட்சி நிர்வாகிகள் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில், பெரியேரிப்பட்டி ஊராட்சியில் பணியாற்றும் நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரத்திற்கு அழைத்து செல்வதாக பணியாளர்கள் புகார் தெரிவித்துள்ளனர். நேற்று காலையில் அனைவரையும் நூறுநாள் வேலைக்கு வருமாறு அழைப்பு விடுத்துள்ளனர். பின்னர் அதிமுகவிற்கு ஆதரவாக பிரச்சாரத்திற்கு வர வேண்டும். இல்லை என்றால் உங்களுக்கு வேலை கிடையாது என்று மிரட்டியதாக பெண்கள் புகார் கூறினர். அதனால், பலரும் பிரசாரத்திற்கு சென்றிருக்கிறார்கள்.

Also Read: “ராம்குமார் மின்சாரம் தாக்கி இறக்கவில்லை”: உடற்கூராய்வு செய்த மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்-என்ன நடந்தது?

ஆனால், நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் அதிமுகவின் பிரசாரத்திற்கு வரமாட்டோம் என்று கூறிவிட்டு வந்துள்ளனர். அதனால், அவர்களுக்கு வேலை வழங்காமல் விரட்டி அனுப்பியதாக வேலை இல்லாமல் வந்த பெண்கள் புகார் கூறினர்.

இந்த நிலையில், அங்கு வந்த சேலம் மத்திய மாவட்ட திமுக செயலாளர் ராஜேந்திரன் எம்.எல்.ஏ-விடம், நூறுநாள் வேலை திட்ட பெண்கள் புகார் தெரிவித்தனர். அப்போது அதிமுகவிற்கு ஆதரவாக பிரசாரம் செய்ய வேண்டும், அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று கூறுகின்றனர். இல்லாவிட்டால் வேலை கிடையாது என்று கூறி அனுப்பி வைத்துவிட்டனர் என்று கூறியிருக்கிறார்கள்.

இதையடுத்து, ராஜேந்திரன் எம்.எல்.ஏ அதிகாரிகளிடம் நடந்தது குறித்து தெரிவித்தார். மேலும், நூறுநாள் வேலை திட்ட பணியாளர்களை பிரசாரத்திற்கு பயன்படுத்துவதையும், அவர்களை கட்டாயப்படுத்தி அதிமுகவிற்கு வாக்களிக்க வேண்டும் என்று மிரட்டுவதையும் தடுக்க வேண்டும் என்று கூறினார். இதன் மீது நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Also Read: அதிமுக ஆட்சியின் முறைகேடு: அரசு பணத்தில் வாங்கிய 10 கார்களை தனது பெயருக்கு மாற்றிய தனியார் நிறுவனம்!