Politics

“இந்துக்கள் மனதை புண்படுத்திய கே.டி.ராகவன், மதன் மீது நடவடிக்கை எடுங்க” : கமிஷனரிடம் பியூஷ் மனுஷ் புகார்!

சேலம் மாவட்டத்தை சேர்ந்தவரும், சமூக ஆர்வலருமான பியூஷ் மனுஷ் பா.ஜ.கவின் முன்னாள் நிர்வாகியான கே.டி.ராகவன் ஆபாச வீடியோ தொடர்பாக நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய பியூஷ் மனுஷ், கடந்த சில நாட்களுக்கு முன்பு யூடியூபர் மதன் ரவிசந்திரன் என்பவர் தனது சேனலில் பா.ஜ.க நிர்வாகியான கே.டி.ராகவனின் ஆபாச வீடியோ ஒன்றை வெளியிட்டதாகவும், அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதாகவும் கூறினார்.

இந்த வீடியோ இந்துக்களின் மனதை புண்படுத்தும் வகையில் அமைந்திருப்பதாகவும், மதன் ரவிச்சந்திரன் இதேபோல் 15 தலைவர்களின் 60க்கும் மேற்பட்ட ஆபாச வீடியோக்கள் தன்னிடம் உள்ளதாக தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்துக்களை புண்படுத்தும் விதமாக வீடியோ வெளியிட்டதாக கறுப்பர் கூட்டத்தை சேர்ந்த சுரேந்திரனை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்த போலிஸார் கே.டி ராகவன் மீது ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கேள்வி எழுப்பினார்.

இதனால் ஆபாச வீடியோ வெளியிட்ட யூடியூபர் மதன் மற்றும் இந்துக்களை அவமதிக்கும் வகையில் செயல்பட்ட கே.டி ராகவன் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக பியூஷ் மனுஷ் கூறினார்.

Also Read: “ராகவன் மட்டுமல்ல புகாரை வெளிகொண்டு வந்த மதனின் லட்சணமும் இதுதான்” : பாஜக-வை பார்த்து சிரிக்கும் மக்கள்!