தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று (13.7.2025), திருவண்ணாமலை தென்மாத்தூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் மகளிர் மற்றும் மருத்துவமனை செல்லும் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தென்மாத்தூரிலிருந்து அருணை கல்லூரி, சரோன் புறவழிச்சாலை, திருவள்ளுவர் சிலை, காந்தி நகர், பெரியார் சிலை, மத்திய பேருந்து நிலையம், மின்வாரிய அலுவலகம், வேங்கிகால், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், மருத்துவ கல்லூரி வழியாக தீபம் நகர் வரை தினசரி 28 நடைகள் இயக்கப்படும் வகையில் 2 மகளிர் விடியல் பயண புதிய நகரப் பேருந்துகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
மேலும் இந்நிகழ்ச்சியில் திருவண்ணாமலை – கிளாம்பாக்கம் இடையே இயக்கப்பட்டு வரும் 122 ACA. 122 ACD, 122 KH ஆகிய வழித்தடங்கள், திருவண்ணாமலை - கோயம்புத்தூர் இடையே இயக்கப்பட்டு வரும் 434 B ஆகிய வழித்தடங்களில் 4 புதிய குளிர்சாதன புறநகரப் பேருந்துகளை தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் சிறப்புத் திட்டமான மகளிர் விடியல் பயணத் திட்டத்தின் கீழ் 128 நகர பேருந்துகள் தற்போது இயக்கப்பட்டு, நாள் ஒன்றிற்கு சராசரியாக 77 ஆயிரம் மகளிர் பயணம் மேற்கொண்டு வருகின்றார்கள். திருவண்ணாமலை மாவட்டத்தில் இதுநாள் வரை விடியல் பயணத்திட்டத்தின் மூலம் 11 கோடியே 29 லட்சம் மகளிர் கட்டணமில்லாமல் பயணம் மேற்கொண்டுள்ளார்கள்.
மகளிர் விடியல் பயணம் திட்டம் தொடங்கப்பட்டபோது திருவண்ணாமலை மாவட்டத்தில் நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் மகளிர் எண்ணிக்கை 61 சதவிகிதமாக இருந்தது, தற்போது 80 சதவிகிதமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்வில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத் தலைவர் கு.பிச்சாண்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் க.தர்ப்பகராஜ், இ.ஆ.ப., மாவட்ட வருவாய் அலுவலர் இராம்பிரதீபன், உதவி ஆட்சியர் (பயிற்சி) அம்ருதா எஸ்.குமார், இ,ஆ.ப., தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (விழுப்புரம்) மேலாண் இயக்குநர் கே.குணசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.