Politics

‘செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து’ : பாடல் பாடி ADMK-BJP குறித்து கண்ணீர்விட்ட கே.சி.வீரமணி!

தமிழ்நாட்டில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்த காரணத்தாலேயே அ.தி.மு.க படுதோல்வியை சந்தித்தது என அக்கட்சியைச் சேர்ந்தவர்களே அடுத்தடுத்து பேசி வருகின்றனர்.

அண்மையில் விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற அ.தி.மு.க கூட்டத்தில் முன்னாள் சட்டத்துறை அமைச்சரும் அ.தி.மு.கவின் முக்கிய நிர்வாகிகளில் ஒருவருமான சி.வி.சண்முகம் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்ததால்தான் தோல்வியைத் தழுவியதாக பகிரங்கமாக பேசியிருந்தார்.

இது உண்மையாகவே இருந்தாலும் கடுப்பான பா.ஜ.கவினர் மறுப்பு தெரிவிக்கச் சொல்லி அ.தி.மு.க தலைமைக்கு நெருக்கடி கொடுத்தனர். இதையடுத்து அ.தி.மு.கவின் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீர்செல்வம் பதறியடித்துக்கொண்டு "தேச நலன் கருதியும், தமிழ்நாட்டின் நலன் கருதியும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் - பாரதிய ஜனதா கட்சி கூட்டணி தொடரும். இதில் எவ்வித மாற்றுக் கருத்திற்கும் இடமில்லை" என்ற நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார்.

இப்படி இருக்கையில் அதே கட்சியைச் சேர்ந்த முன்னாள் வணிகவரித்துறை அமைச்சரும் திருப்பத்தூர் மாவட்ட அ.தி.மு.க செயலாளருமான கே.சி.வீரமணியும் சி.வி.சண்முகத்தை போன்று தன் சொந்த மாவட்டத்திலேயே தோற்றுப் போனதற்கு அ.தி.மு.கவுடன் பா.ஜ.க கூட்டணி வைத்ததும் தேர்தல் செலவுக்காக கொடுத்ததை முறையாக கட்சியினர் கொண்டு சேர்க்காததுமே காரணம் என தனது மனக்குமுறலை வெளிப்படுத்தியிருக்கிறார்.

அதோடு நின்றிடாமல் “செஞ்சோற்றுக் கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா கர்ணா” என்ற பாடலைப் பாடி அ.தி.மு.க பா.ஜ.க கூட்டணியின் தோல்விக்கான காரணத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறு தொடர்ச்சியாக அ.தி.மு.கவின் மூத்த நிர்வாகிகளே பா.ஜ.கவுடனான கூட்டணி குறித்து விமர்சித்து வரும் வேளையில் கட்சியின் இரட்டை தலைமையாக உள்ள ஓ.பி.எஸ்மற்றும் இ.பி.எஸ் தத்தம் சொந்த தேவைகளை நிவர்த்தி செய்வதற்காக தனது டெல்லி எஜமானர்களுக்கு நித்தமும் முதுகை வளைத்தபடியே இருக்கின்றனர் என அரசியல் நோக்கர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

Also Read: சி.வி.சண்முகம் சொன்ன அந்த ஒரு வார்த்தை : ‘ஐயோ.. அவங்க கோவப்படுவாங்க’- பதறியடித்து அறிக்கை விட்ட ஓ.பி.எஸ்!