Politics

ஆதரவாளர்களை ரகளையில் ஈடுபட வைத்து தப்பிய அதிமுக ஒன்றிய செயலாளர்; சென்னையில் பதுங்கியவர் அதிரடியாக கைது!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள மதுக்கூர் கல்யாண ஓடை பகுதியை சேர்ந்த துரை செந்தில். இவர் மதுக்கூர் ஒன்றிய அதிமுக செயலாளராக உள்ளார். இவரது மனைவி அமுதா மதுக்கூர் ஒன்றிய குழுத் தலைவராக பதவி வகிக்கிறார்.

கடந்த ஆண்டு நடைபெற்ற கொலைமுயற்சி வழக்கு தொடர்பாக நேற்று மதியம் துரை செந்திலை கைது செய்து மதுக்கூர் காவல்நிலையம் அழைத்து வந்த நிலையில் , அங்கு திரண்ட துரை செந்திலின் ஆதரவாளர்கள் ரகளையில் ஈடுபட்டனர்.

இதனை பயன்படுத்தி அதிமுக ஒன்றிய செயலாளர் துரை செந்தில் அங்கிருந்து தப்பிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து ரகளையில் ஈடுபட்ட அதிமுகவினர் 15 பேர் கைது செய்யப்பட்டும், 31 பேர் மீது வழக்கு பதிவு செய்தனர்.

மேலும் போலீசார் தனிப்படை அமைத்து சென்னையில் மறைந்திருந்த துரை செந்திலை கைது செய்து தஞ்சைக்கு அழைத்து வந்து சிறையில் அடைத்தனர். சினிமா காட்சிகளை மிஞ்சிய களேபரங்களால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Also Read: ‘சினிமா சிரிப்பு போலிஸ் கூட இப்படி காமெடி செய்யமாட்டார்’ - ஆட்டுக்கார அண்ணாமலைக்கு பத்திரிகையாளர் பதிலடி!