Politics

போதும் உங்க முட்டு : மதுவந்தி, S.V.சேகர், K.T.ராகவனை பிரசாரத்திற்கு அனுப்பவேண்டாம் என மன்றாடிய அ.தி.மு.க!

மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசின் மிரட்டல் காரணமாக பா.ஜ.க-வுடன் கூட்டணி வைத்து 20 தொகுதிகளை ஒதுக்கினாலும், தமிழகத்தில் நிலவும் கடுமையான பா.ஜ.க எதிர்ப்பலை காரணமாக பா.ஜ.க தலைவர்கள் பெயரைச் சொல்லி வாக்கு கேட்பதற்கு அச்சாடைந்துள்ளனர் அ.தி.மு.கவினர்.

இதில் உச்சமாக, எல்.முருகன், வானதி சீனிவாசன், குஷ்பூ உள்ளிட்ட பா.ஜ.க வேட்பாளர்களே தங்களது தொகுதிப் பிரச்சாரங்களின்போதும், நோட்டீஸ்களிலும் மோடியை இருட்டடிப்பு செய்து வருகின்றனர்.

பா.ஜ.க தலைவர்களை முன்னிலைப்படுத்தினால் தமிழக மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என உறுதியாகத் தெரிந்ததால் மோடி உள்ளிட்ட பா.ஜ.க தலைவர்களின் படங்களை பயன்படுத்தவே அ.தி.மு.க கூட்டணியினர் தயங்கி வருகின்றனர்.

தமிழகத்தையும் தமிழக மக்களையும் விரோதிகளாகப் பார்த்துவரும் பிரதமர் மோடியின் எந்தச் சாதனையைச் சொல்லி இங்கு வாக்குக் கேட்பது என்பதே அ.தி.மு.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சியினரின் இத்தகைய திணறலுக்குக் காரணம்.

பா.ஜ.க-வுக்கு ஆதரவாகப் பேசும் எஸ்.வி.சேகர், கே.டி.ராகவன், மதுவந்தி ஆகியோரை சென்னை உட்பட பல பகுதிகளும் அ.தி.மு.க கூட்டணிக்கு ஆதரவாகப் பிரசாரம் மேற்கொள்ள வைக்க திட்டமிட்டிருந்தது பா.ஜ.க. ஆனால், நீங்கள் எங்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யாமல் இருப்பதே எங்களுக்குச் செய்கிற உதவி என அலறித் துடிக்கின்றனராம் அ.தி.மு.க வேட்பாளர்கள்.

ஆட்சிக்காலம் முழுவதும் பா.ஜ.க-வுக்கு அடிமையாக இருந்து தமிழக மக்களிடம் அசிங்கப்பட்டது போதாதென்று, பா.ஜ.க கூட்டணியில் இருப்பதாலேயே கிடைக்கின்ற வாக்குகளும் பறிபோகும் நிலை ஏற்பட்டிருப்பதாக கண்ணீர் வடிக்கின்றனர் அ.தி.மு.க மற்றும் பா.ம.க வேட்பாளர்கள்.

Also Read: “கண்ணியக்குறைவை கழகம் ஒருபோதும் ஏற்காது” - உறுதிபடத் தெரிவித்த தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின்!