Politics
சுயமரியாதையை சீண்டியதால் வெளியேறுகிறது தே.மு.தி.க? ‘அ.தி.மு.க கூட்டணிக்கு கல்தா’- சமிக்ஞை கொடுத்த சுதீஷ்!
தமிழக சட்டமன்றத் தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ஆம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள நிலையில் அரசியல் களம் சூடுபிடித்துள்ளது.
தி.மு.க கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சிக்கு 3 தொகுதிகளும், மனிதநேய மக்கள் கட்சிக்கு 2 தொகுதிகளும் இறுதி செய்யப்பட்டுள்ளன. இக்கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கையெழுத்தானது. மற்ற கட்சிகளுடனான பேச்சுவார்த்தை சுமுகமாக நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியில் பா.ம.க-வுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பா.ஜ.க, தே.மு.தி.க ஆகிய கட்சிகளிடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
அ.தி.மு.க, தே.மு.தி.க இடையே பல கட்டப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றுள்ளன. சமீபத்தில் அ.தி.மு.க அமைச்சர்கள், தே.மு.தி.க தலைவர் விஜயகாந்தின் வீட்டிற்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். அமைச்சர் தங்கமணி வீட்டில் தே.மு.தி.க நிர்வாகிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இப்படியாக அணி பிரிந்து பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டாலும், இருகட்சிகளுக்கிடையே கருத்தொற்றுமை ஏற்படவில்லை எனத் தெரிகிறது. தே.மு.தி.க எதிர்பார்ப்பது ஒன்றாகவும், அ.தி.மு.க-வினர் கொடுக்க நினைக்கும் சீட் எண்ணிக்கை மிகக்குறைவானதாகவும் இருப்பதால் தே.மு.தி.க தரப்பு அதிருப்தி அடைந்துள்ளது.
மேலும், தே.மு.தி.க-வின் வாக்கு சதவீதம் சரிந்து வருவது குறித்து அ.தி.மு.க தரப்பில் சுட்டிக்காட்டப்பட்டு, பழைய எதிர்பார்ப்புகள் வேண்டாம் என்கிற ரீதியில் தெரிவித்துள்ளதால் தே.மு.தி.கவினர் திகைத்துள்ளனர்.
போதாக்குறைக்கு, பிரேமலதா விஜயகாந்த் மற்றும் சுதீஷ் இடையேயும் கூட்டணி விவகாரத்தில் முரண்பட்ட கருத்துகள் நிலவுவதால் குழப்பம் அதிகரித்துள்ளது. “கூட்டணிக்காகவும், தொகுதிகள் கேட்டும் தே.மு.தி.க யாரிடமும் கெஞ்சவில்லை” என சமீபத்தில் தெரிவித்திருந்தார் தே.மு.தி.க துணை செயலாளர் சுதீஷ்.
இந்நிலையில் இன்று, தே.மு.தி.க துணைச் செயலாளர் எல்.கே.சுதீஷ் ’நமது முதல்வர் விஜயகாந்த், நமது சின்னம் முரசு’ என ஃபேஸ்புக்கில் பதிவிட்டுள்ளதால் கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.
அ.தி.மு.க இடையே கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வரும் நிலையில், முதல்வர் வேட்பாளராக விஜயகாந்த்தை குறிப்பிட்டிருப்பதன் மூலம் அ.தி.மு.க கூட்டணியில் இருந்து தே.மு.தி.க வெளியேறும் முடிவை எடுத்துள்ளதாகத் தெரிகிறது.
Also Read
-
“இனி நாம் என்ன பண்ணணும்?” : ‘உடன்பிறப்பின் குரல்’ இணையதளம் தொடங்கி கருத்து கேட்கும் கழக தலைவர்!
-
“குதிரை பேரம் குறித்து முதல்வர் விஜய் மறுப்பு தெரிவிக்காதது ஏன்?” : திமுக எம்.பி வில்சன் காட்டம் !
-
கஞ்சா போதையில் கும்பல் தாக்குதல்: நண்பனை காப்பாற்றச் சென்ற இளைஞர் படுகொலை - பதைபதைக்கும் தூத்துக்குடி!
-
அரசின் அனுமதி வாங்கி தருவதாக பண மோசடி.. தவெக பிரமுகர் அதிரடி கைது!
-
“லிஃப்ட்” தருவதாக கூறி 40 வயது பெண்ணுக்கு பாலியல் தொந்தரவு... திருவள்ளூரில் நடந்த பகீர் சம்பவம்!