Politics

“இப்படிப்பட்ட சுயமரியாதை இல்லாத ஆட்சி நமக்குத் தேவையா?" - கனிமொழி எம்.பி பேச்சு!

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தில் உள்ள பாரதியார் இல்லத்துக்குச் சென்ற தி.மு.க எம்.பி., கனிமொழி, பாரதியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.

பின்னர், கோவில்பட்டியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் சட்டப்பேரவை தொகுதி தி.மு.க பொறுப்பாளர்களுடனான ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார்.

அக்கூட்டத்தில் பேசிய கனிமொழி எம்.பி, “தமிழக அரசின் முடிவுகளை டெல்லியில் கேட்டுத்தான் முடிவெடுக்கிறார்கள். அ.தி.மு.க கட்சிக்குள் எடுக்கவேண்டிய முடிவுகளையும் டெல்லியில் அமித்ஷா, மோடியிடம் கேட்டுத்தான் எடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள்.

இப்படிப்பட்ட சுயமரியாதை இல்லாத ஆட்சி நமக்குத் தேவையா என நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எந்தத் திறமையும் கிடையாது. எந்தவொரு வளர்ச்சித் திட்டங்களையும் புரிந்துகொண்டு செயல்படுத்தக்கூடிய நிலை தமிழகத்தில் இல்லை.

இந்த ஆட்சி மறுபடியும் வந்துவிட்டால், தமிழ் மக்களை தமிழகத்தை யாராலும் காப்பாற்ற முடியாது. இதனை தமிழக மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர். மறுபடியும் இந்த ஆட்சியை சகித்துக்கொள்ள, மக்கள் தயாராக இல்லை. அதை செயல்படுத்திக் காட்டவேண்டிய கடமை உங்களுக்கு இருக்கிறது.

மக்கள் தேர்தலில் அ.தி.மு.கவுக்கு எதிராக வாக்களிக்கத் தயாராக உள்ளனர். அவர்களை வாக்குச்சாவடிக்கு கொண்டு வந்து சேர்க்கவேண்டிய கடமை உங்களுடையது.

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் செல்லக்கூடிய இடங்கள், நாங்கள் பிரச்சாரத்துக்கு செல்லும் இடங்களில் எல்லாம் மக்களின் எழுச்சியைப் பார்க்கும்போது, நிச்சயமாக தி.மு.க வெற்றி பெற்றுவிட்டது என்பது தெளிவாகத் தெரிகிறது.

நம்மை எதிர்த்து தேர்தல் பணியாற்றுவது அ.தி.மு.க மட்டுமல்ல. இந்தத் தேர்தல் களத்தில் தி.மு.கவை நேருக்கு நேராக எதிர்த்து போரிடக்கூடியவர்கள் மட்டுமே இல்லை. அவர்களுக்கு பின்னால் நிற்கக்கூடியவர்கள் எதையும் செய்து, மக்களைப் பிரித்து சாதி, மதம் போன்ற பொய் பிரச்சாரங்களையே தங்களது தேர்தல் வியூகங்களாக வகுத்து செயல்படக்கூடியவர்கள். அதை நாம் புரிந்துகொண்டு தேர்தல் பணியாற்ற வேண்டும்.

முக்கியமாக சமூக வலைதளங்களில் தொடர்ந்து பொய்ப் பிரச்சாரத்தை மேற்கொள்கின்றனர். இதற்கு நாம் பதிலளிக்க வேண்டியது நமது கடமை” எனத் தெரிவித்தார்.

அதன்பின்னர், வள்ளுவர் நகரில் உள்ள கடலைமிட்டாய் தயாரிக்கும் நிறுவனத்துக்குச் சென்ற கனிமொழி எம்.பி., தொழிலாளர்களைச் சந்தித்துப் பேசினார். பின்னர் மந்தித்தோப்பில் திருநங்கைகள் நிர்வகிக்கும் பால் பண்ணையை பார்வையிட்டு, அவர்களுடன் கலந்துரையாடினார்.

Also Read: “போராட்டத்திற்குத் தீர்வு காணாமல் மாணவர்களை வெளியேற்றும் அராஜக அ.தி.மு.க அரசு” - மு.க.ஸ்டாலின் கண்டனம்!