Politics
சட்டத்துக்கு மேலானவரா சூரப்பா? அவரை சஸ்பென்ட் செய்யாதது ஏன்? - அரசுக்கும் ஆளுநருக்கும் முத்தரசன் கேள்வி!
ஊழல் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அண்ணா பல்கலைக் கழகத் துணை வேந்தர் சூரப்பா மீது பல்வேறு புகார்கள் எழுந்துள்ளன. உயர்கல்வித் துறையின் விசாரணையில் ரூ.280 கோடி ஊழல் நடந்திருப்பதாகவும், இதில் ஆசிரியர் நியமனத்தில் மட்டும் ரூ.80 கோடி கையூட்டு கைமாறியிருப்பதாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
சூரப்பாவை துணை வேந்தர் பொறுப்பில் இருந்து நீக்க வேண்டும் என கல்வியாளர்களும், எதிர்கட்சிகளும், தொடர்ந்து வலியுறுத்தி வந்த நிலையில் ஆளும் தரப்பினர் மௌனம் காத்தும், அவரை ஆதரித்தும் வந்தனர்.
இப்போது நீதிபதி பி.கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையம் அமைத்து, சூரப்பா மீதான குற்றச்சாட்டுள் விசாரிக்கப்படும் என அறிவித்தப்பட்டுள்ளது. இது தாமதமான முடிவு என்றாலும் விசாரணை நேர்மையாக நடப்பதை அரசு உறுதிசெய்ய வேண்டும்.
குற்றச்சாட்டுக்கு ஆளான சூரப்பா நேர்மையிருந்தால் துணை வேந்தர் பொறுப்பிலிருந்து விலகி விசாரணையை சந்திக்க வேண்டும். அவரிடம் அதனை எதிர்பார்க்க முடியாத நிலையில் அவரை தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும்.
சூரப்பாவை தற்காலிக பணிநீக்கம் செய்யாமல், அவர் துணைவேந்தர் என்ற நிலையிலிருந்தே விசாரணையை சந்திக்க அனுமதித்தால் அது கேலிக்கூத்தாகவும், நடந்து போன ஊழல்களை மூடிமறைக்கும் முயற்சியாகவே முடியும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சுட்டிக்காட்டுகிறது.
எனவே நீதிபதி பி.கலையரசன் விசாரணை ஆணையத்தின் அறிக்கையும், அதன் மீதான அரசின் நடவடிக்கையும் முடிவாகும் காலம் வரையிலும் சூரப்பாவை தற்காலிக பணி நீக்கம் செய்ய வேண்டும் என தமிழ்நாடு அரசையும், ஆளுநரையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
“திராவிட இயக்கம் எப்போதும் எழுத்தாளர்களை கொண்டாடும்” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேச்சு!
-
தமிழினப் பெருமைகளை உலகெங்கும் பறைசாற்றும் வகையில் கொண்டாடப்பட்ட பொங்கல் விழா!
-
அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு தொகுப்பூதியம் உயர்வு!
-
கரூர் துயரம் : நாளை விஜய்யிடம் 2 ஆம் கட்ட விசாரணை நடத்தும் சி.பி.ஐ!
-
பிப்.7 ஆம் தேதி திமுக இளைஞர் அணி தென் மண்டல நிர்வாகிகள் சந்திப்பு : தலைமைக் கழகம் அறிவிப்பு!