Politics

“தமிழகத்திற்கு வெறும் ரூ.380 கோடி” : GST நிலுவை தொகையை முழுமையாக தராமல் ஓரவஞ்சனை காட்டும் மோடி அரசு!

இந்தியாவில் கொரோனா பாதிப்பால் நாளுக்கு நாள் தொற்று எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால், நாடுமுழுவதும் இந்தியாவின் பொருளாதாரமும் படு மோசமான நிலையை எட்டியுள்ளது. இதனால், ஜி.எஸ்.டி வரி வசூல் சரிவை சந்தித்தது. இதனைக்காரணம் காட்டி மாநிலங்களுக்கு தரவேண்டிய இழப்பீடு தொகையை மத்திய அரசு தராமல் இழுத்தடி வருகிறது.

அதாவது, ஜி.எஸ்.டி அமல்படுத்தும்போது மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பிடை சரிசெய்ய, 5 ஆண்டுகளுக்கு இழப்பீடு வழங்க மத்திய அரசு ஒப்புக்கொண்டது. ஆனால், மாநில அரசுக்கு ஜி.எஸ்.டி இழப்பீடு மூலம் பட்டை நாமம் போட்டுள்ளது மத்திய அரசு.

குறிப்பாக, கடந்த ஆண்டுக்கு தரவேண்டிய ஜி.எஸ்.டி வரி இழப்பீடு ரூபாய் 1லட்சம்.. 2 லட்சம் அல்ல 10,775 கோடி ரூபாய் வரி இழப்பீடு தொகையை தமிழகத்திற்கு தராமல் மத்திய அரசு இழுத்தடித்துக்கொண்டு இருக்கிறது

2017-ல் இருந்து இன்று வரை ஜி.எஸ்.டி இழப்பீடு வழங்கக் கோரி மத்திய நிதி அமைச்சருக்கு கடிதம் எழுதி வருகிறோம் என ஒவ்வொரு முறையும் தமிழக முதல்வர் சொல்லிக்கொண்டே இருந்தாரே தவிர, ஒரு பைசா கூட தமிழகத்திற்கு இன்று வரை வர வில்லை.

தற்போது கொரோனா ஊரடங்கால் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்தநிலை காரணமாக இந்த ஆண்டு மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையில் ரூ2.35 லட்சம் கோடி அளவுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், அனைத்து மாநில அரசுகளும் ரிசர்வ் வங்கி அல்லது வெளிசந்தையில் இருந்து கடன் வாங்குமாறு மத்திய அரசு கூறியது.

ஏற்கனவே, தமிழகத்தின் மொத்த கடன் 5 லட்சம் கோடி; நடப்பாண்டு நிதி பற்றாக்குறை மட்டும் 85,000 கோடி; கடந்த 10 ஆண்டுகளாக தமிழகம் அனைத்து துறைகளிலும், பொருளாதாரத்தில் அதலபாதாளத்திற்குச் சென்றுள்ள நிலையில், 10,775 கோடியை ஜி.எஸ்.டி இழப்பீட்டு தொகையை வாங்காமல், மத்திய அரசு முன்வைத்த கடன் வாங்கும் திட்டத்திற்கு தமிழக அரசு ஒப்புக்கொண்டுள்ளது.

இந்நிலையில், முதல் முறையாக கடந்த அக்டோபர் மாதத்துக்கான ஜி.எஸ்.டி வரி வசூல் ரூ.1,05,155 கோடியாக வசூலாகியுள்ளதாக நிதியமைச்கம் தெரிவித்துள்ளது. இதில், தமிழகத்துக்கு தர வேண்டிய 10 ஆயிரம் கோடியில் பாதியாவது கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், வசூலிக்கப்பட்ட தொகையில் இருந்து 6,400 கோடியை மத்திய அரசு மாநிலங்களுக்கு விடுவித்தது. இதில், தமிழகத்துக்கு வெறும் 380 கோடி மட்டுமே மத்திய அரசு விடுவித்துள்ளது. இது தமிழக மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: “ஜி.எஸ்.டி இழப்பீடு கிடையாது” : மாநிலங்களுக்கு பட்டை நாமம் போடும் மத்திய அரசு - கடனில் மூழ்கும் தமிழகம்!