Politics

உதயநிதி ஸ்டாலின் குறித்து அவதூறு பரப்பும் அதிமுக IT WING நிர்வாகிகள் மீது காவல்துறையில் புகார்!

கொரோனா பேரிடர் காலத்தில் மக்களை கண்டுகொள்ளாமல் அவர்களுக்கான நலத்திட்டங்களையும் வழங்காத எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அ.தி.மு.க அரசு, ஆட்சி முடிவடைவதற்குள் கமிஷனை ஈட்டுவதற்காக மக்கள் நலப்பணி எனக் கூறி பல்வேறு வகையான முறைகேடுகளில் ஈடுபட்டு வருகிறது.

ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகம், கொரோனா பரவல் காலமாக இருந்தாலும் களத்தில் இறங்கி மக்களுக்கு தேவையான அனைத்து நலத்திட்ட உதவிகளையும் திறம்படச் செய்து வருகிறது.

இவற்றையெல்லாம் கண்டு, தி.மு.க.விற்கு மக்கள் மத்தியில் இருக்கும் நற்பெயரை கெடுப்பதற்காகவே, அ.தி.மு.கவும் அதன் தொழில்நுட்பப் பிரிவும் பல்வேறு சதி வேலைகளில் ஈடுபட்டு வருகின்றன.

அதன்படி, தி.மு.க. இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் குறித்து அ.தி.மு.கவின் தகவல் தொடர்பு பிரிவு நிர்வாகியாக இருக்கும் ஆஸ்ப்யர் சுவாமிநாதன் மற்றும் சபரிஷ் மணிகண்டன் ஆகியோர் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் ஆபாசமாகவும், அவதூறைப் பரப்பும் வகையில் பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.

இதனையடுத்து, சமூக வலைதளங்களில் கீழ்த்தரமான பதிவுகளைப் பகிர்ந்துள்ள ஆஸ்ப்யர் சுவாமிநாதன், சபரிஷ் மணிகண்டன் ஆகியோர் மீது சென்னை பாடியை சேர்ந்த வழக்கறிஞர் சிவசுப்ரமணி என்பவர் சென்னை மாநகர காவல் ஆணையரிடத்தில் புகார் ஒன்றினை அளித்துள்ளார்.

அதில், சமூக வலைதளங்கள் மூலம் அவதூறு பரப்பும் மேற்குறிப்பிட்டுள்ளவர்கள் மீது சட்டரீதியாக உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

Also Read: கட்டப்பஞ்சாயத்து செய்வதுபோல 250 சவரன் நகை, 1 லட்சம் பணம், கார் கொள்ளை.. அதிமுக நிர்வாகி உட்பட 8 பேர் கைது