Politics

“பகிரங்க மன்னிப்பு கேட்டால் எஸ்.வி.சேகரை கைது செய்ய மாட்டோம்” - உயர் நீதிமன்றத்தில் காவல்துறை தகவல்!

எம்.ஜி.ஆர். சிலைக்கு காவி போர்வை போர்த்தியது, பெரியார் சிலை மீது காவி சாயம் ஊற்றப்பட்ட சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, தலைவர்களின் சிலைகளை இவ்வாறு களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் இது வன்மையாக கண்டிக்கத்தக்கது எனவும் தெரிவித்திருந்தார்.

அதற்கு பதிலளித்த எஸ்.வி.சேகர், காவியை களங்கம் என குறிப்பிடும் தமிழக முதல்வர், களங்கமான தேசியக் கொடியைத்தான் ஆகஸ்ட் 15 ம் தேதி ஏற்றப்போகிறாரா எனவும், தேசியக் கொடியில் உள்ள காவியை வெட்டி விட்டு வெள்ளை மற்றும் பச்சை நிறம் கொண்ட கொடியை ஏற்கிறாரா என்கிற வகையில் வீடியோ வெளியிட்டார்.

தேசியக் கொடியை அவமதிக்கும் வகையிலும் பேசி சமூக வலைதளங்களில் வீடியோ வெளியிட்ட பா.ஜ.க நிர்வாகி எஸ்.வி சேகருக்கு எதிராக, சென்னை நுங்கம்பாக்கத்தைச் சேர்ந்த ராஜரத்தினம் என்பவர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்தார்.

இந்த புகாரின் அடிப்படையில், எஸ்.வி.சேகர் மீது மத்திய குற்ற பிரிவினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் காவல் துறையினர் தன்னை கைது செய்யக் கூடும் என பயந்து , முன் ஜாமீன் கோரி எஸ்.வி.சேகர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை சார்பில் ஆஜரான வழக்கறிஞர் முதலமைச்சர், தலைவர்களின் சிலைகளை களங்கம் செய்வோர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்த நிலையில், எஸ்.வி சேகர் சம்மந்தமின்றி காவி நிறம் இந்துத்துவத்தை குறிக்கும், வெள்ளை நிறம் கிறிஸ்துவத்தை குறிக்கும், பச்சை நிறம் இசுலாமியத்தை குறிக்கும் என அவர் சம்மந்தமின்றி ஒரு விளக்கம் கொடுப்பதாகவும், அரசியலமைப்பு சட்டப்படி தேசிய கொடியின் மூன்று நிறங்களுக்கு உரிய விளக்கம் கொடுக்கப்பட்டுள்ள போது எஸ்.வி சேகர் மதரீதியான கலவரத்தை உண்டாக்கும் நோக்கில் கருத்து தெரிவித்துள்ளதாக குற்றம்சாட்டினார்.

மேலும், தேசிய கொடியை அவமதித்ததால் ஜாமீனில் வெளிவர முடியாத சட்டப்ப்பிரிவின் கீழ் எஸ்.வி.சேகர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார் மீண்டும் இந்த வழக்கு இன்று நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது காவல் துறை சார்பாக ஆஜரான வழக்கறிஞர் மன்னிப்பு கோரி எஸ் வி சேகர் மனுத்தாக்கல் செய்தால் கைது செய்யப்பட மாட்டார் காவல்துறை உத்திரவாதம் அளிப்பதாகும் நீதிமன்றத்தில் தெரிவித்தார். இதனையடுத்து நீதிபதி மன்னிப்பு கோரி மனுத்தாக்கல் செய்வதற்கு எஸ்.வி.சேகருக்கு செப்டம்பர் 1 வரை அவகாசம் அளித்து நீதிபதி உத்தரவிட்டார்

Also Read: தமிழக மக்களின் வெறுப்புக்குள்ளான பாஜக, மாநில வளர்ச்சியை விமர்சிப்பதா? - நட்டாவுக்கு கே.எஸ்.அழகிரி கண்டனம்