Politics

போலிஸுக்கு பயந்து பிரபல ரவுடி கல்வெட்டு ரவி பாஜகவில் அடைக்கலம்.. 6 படுகொலை உள்ளிட்ட 35 வழக்குகள் நிலுவை!

2021ம் ஆண்டு தேர்தலை கருத்தில் கொண்டு யாராக இருந்தாலும் பராவாயில்லை என தனது கட்சி பக்கம் இழுத்து எப்படியாவது டெபாசிட்டையாவது பிடித்துவிட வேண்டும் என்ற நோக்கில் பாஜக சற்று தீவிரமான மனநிலையில் செயல்பட்டு வருகிறது.

ஆகையால், சினிமா உள்ளிட்ட துறை சார்ந்த பிரபலங்கள், ரவுடிகள் என அனைவரையும் கட்சிக்குள் சேர்த்து அவர்களுக்கு பதவிகளையும் வழங்கி வருகிறது பாரதிய ஜனதா கட்சி.

இது அக்கட்சியில் பல ஆண்டுகளாக இருந்து பணியாற்றி வந்தவர்களுக்கே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. அதன்படி தற்போது வட சென்னையைச் சேர்ந்த போலிஸாரால் வலைவீசி தேடப்பட்டு வந்த கல்வெட்டு ரவி என்ற பிரபல ரவுடி பாஜகவில் இணைந்துள்ளார்.

ரவியுடன் சேர்ந்து சத்யா என்ற சத்தியராஜ் என்ற மற்றொரு ரவுடியும் பாஜகவில் இணைந்திருக்கிறார். 6 முறை குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட கல்வெட்டு ரவி மீது 6 படுகொலைகள் உள்ளிட்ட 35 வழக்குகள் உள்ளது.

போலிசாரால் தேடப்பட்டு வரும் ரவுடிகளின் பட்டியலில் ஏ ப்ளஸ் பிரிவில் இருப்பவர்தான் பாஜகவில் இணைந்த கல்வெட்டு ரவி. ஆகையால் போலிஸிடம் இருந்து தப்பிப்பதற்காக பாஜகவில் அடைக்கலமாகியிருக்கிறார் ரவுடி ரவி.

அதேபோல, ரவுடி சத்யா மீது கொலை முயற்சி உள்ளிட்ட 10 வழக்குகள் உள்ளது. 2 முறை குண்டர் சட்டத்தில் கைதாக ஜாமினில் வெளி வந்திருக்கிறார். இவர்கள் இருவரும் தற்போது வட சென்னையைச் சேர்ந்த வழக்கறிஞரும் பாஜக பிரமுகர் மூலம் அக்கட்சியில் இணைந்துள்ளார்கள்.

இவ்வாறு தொடர்ந்து பாஜகவில் ரவுடிகள் இணையும் பட்டியல் கூடிக்கொண்டே போவது அக்கட்சியினரிடையே பெரும் புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது.

Also Read: 5 முறை குண்டர் சட்டத்தில் கைதானவருக்கு பா.ஜ.கவில் மாவட்ட இளைஞரணி பதவி!