Politics

“ஊடகங்கள் மீது வல்லாதிக்கம் செலுத்துவதை பாசிசவாதிகள் நிறுத்திக் கொள்ள வேண்டும்” : ஊடக கண்காணிப்புக் குழு!

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கடந்த 27.07.2020 ல் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் கருத்து சுதந்திரத்தை காக்கும் பொருட்டும் அச்சு மற்றும் காட்சி ஊடகங்களில் அரசியல் நடுநிலைமையை கண்காணித்திடவும், ஆண் பெண் இருபால் ஊடகவியலாளர்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும், தமிழகத்தின் பெரும்பாலான இளைஞர்களின் கருத்து பரிமாற்றக் கருவியான சமூக ஊடகத்தில் ஆக்கப்பூர்மாக கருத்து பதிவிடும் இளைஞர்ககளுக்கு ஏற்படும் மிரட்டல்களை, இன்னல்களைத் தவிர்க்கும் பொருட்டும் அமைக்கப்பட்ட ஊடக கண்காணிப்புக் குழுவின் முதல் காணொலி கலந்தாய்வுக் கூட்டம் ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமையில் நேற்றைய தினம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில், திருமதி.அருள்மொழி கோபண்ணா, மல்லை சத்யா, கனகராஜ், சி.மகேந்திரன், ரவிக்குமார் எம்.பி., அப்துல் ரஹ்மான்,அப்துல் சமது, சூர்யமூர்த்தி மற்றும் ஜெயசீலன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன: 

“1. பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீதான தனிநபர் தாக்குதலைத் தொடுக்கும் சமூக விரோதிகள் மீது கொடுக்கப்பட்டுள்ள புகார்களில் காவல்துறை நடவடிக்கை எடுப்பதில்லை மாறாக, பத்திரிக்கையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் மீது மத்திய, மாநில ஆளுங்கட்சிகளின் பின்புலத்தோடு யாரேனும் புகார் கொடுத்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.  இந்த பாரபட்சப் போக்கை கைவிட வேண்டும்.

2. பத்திரிக்கை மற்றும் ஊடகத்துறையில் பணிபுரியும் பெண்கள் மீதான தனிநபர் தாக்குதலும், தரம்கெட்ட, ஆபாசமான விமர்சனங்களையும் ஆளுங்கட்சிகளுக்கு வேண்டிய கூட்டம்  தொடர்ந்து செய்து கொண்டே இருப்பதை காவல்துறை கைகட்டி வேடிக்கை பார்க்காமல், உடனடியாக நடவடிக்கை எடுத்திடல் வேண்டும்.

3. தமிழகத்தில் அரசியல்மயப்படாத ஆனால் சமூகத்தின் மீது அக்கறை கொண்ட இளைஞர்கள், சமூக ஊடகங்கள் வழியாக நியாயமான தங்கள் உரிமைக்கான குரலைப் பதிவிடுகிறபோது அவர்கள் தனிநபர் தாக்குதல்களுக்கு உள்ளாகிறார்கள். குறிப்பாக, இளம்பெண்கள்  தரக்குறைவாக, ஆபாசமாக விமர்ச்சிக்கப்படுவதோடு மிரட்டலுக்கும் ஆளாகிறார்கள்.

இந்த மாதிரியான சமூகவிரோதிகளின் மீது புகார் கொடுத்தால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. இதைத் தவிர்த்து, துரிமாக நடவடிக்கை எடுக்க வேண்டும். பத்திரிக்கைகள், ஊடகங்கள்,  சமூக ஊடகங்களில் சமூக அக்கறையோடு செயல்படுகின்ற ஒவ்வொருவருக்கும் காவல்துறை பாதுகாப்பு அளித்திடல் வேண்டும்.

இந்த மூன்று முக்கிய காரணங்களுக்காக தமிழக காவல்துறைத் தலைமை இயக்குனரை நேரில் சந்தித்து 3.08.2020 அன்று மனுக் கொடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டது. அதோடு, ஜனநாயகத்தின் ஆணிவேரான கருத்துச் சுதந்திரத்தைப் பாதுகாத்திடும் வகையில் பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்களில்  வரும் செய்திகள் மற்றும் விவாதங்களில் நடுநிலைத்தன்மைக் கடைப்பிடிக்கப்படவேண்டும்.

குறிப்பாக செய்திகளில் எதிர்க்கட்சிகளின் செய்திகள் இருட்டடிப்பு செய்வது தவிர்க்கப் படவேண்டும்.  விவாதங்களில் சமஅளவிலான பங்கேற்பாளர்களை இடம்பெறச் செய்யவேண்டும். அனைவருக்கும் சமமான அளவில் வாய்ப்புகள் வழங்கப்படல் வேண்டும் மற்றும் விவாத தலைப்பிற்கு சம்பந்தமில்லாதவர்களை தவிர்க்க வேண்டும்.

வலதுசாரி சிந்தனையாளர் என்று ஒரு பட்டியல் இருப்பதுபோன்று திராவிட (அல்லது) இடதுசாரி சிந்தனையாளர் என்று பங்கேற்பாளர்கள் பட்டியல் உருவாக்கி, சமத்துவத்தை நிலைநிறுத்திட வேண்டும் என்பதையெல்லாம் வலியுறுத்தி ஒவ்வொரு தொலைக்காட்சி நிறுவனத்திற்கும் தனித்தனியாக கடிதங்களை நேரில் சந்தித்து கொடுக்க வேண்டும், என்றும் தீர்மானிக்கப்பட்டது.

இறுதியாக, தமிழகத்தில் பத்திரிக்கை மற்றும் தொலைக்காட்சி ஊடகத்தை சார்ந்தவர்களே பத்திரிக்கை ஜனநாயகத்தைக் காப்பதற்கென்று ஒரு இயக்கத்தை ஆரம்பிக்க வேண்டிய துர்ப்பாக்கிய நிலையை தமிழக பத்திரிக்கை மற்றும் ஊடகங்கள் மீது நேர்முகமாகவோ மறைமுகமாகவோ மத்திய, மாநில அரசுகள் மற்றும் அரசின் ஆதரவாளர்கள் வல்லாதிக்கம் செலுத்துவதன் மூலம் ஏற்படுத்தி இருப்பதை வன்மையாக கண்டிப்பதோடு எதிர்காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும், என்றும் ஒரு கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.” என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: “கருத்துச் சுதந்திரத்தின் கழுத்தை நெரிக்கும் பாஜக” : தமிழக ஊடகங்களை பாதுகாக்க தி.மு.க புதிய முன்னெடுப்பு!