Politics

நேற்று இலவச அறிவிப்பு... இன்று தட்டுப்பாடு... அம்மா உணவகத்தில் அரசியல் லாபம் பார்க்கும் அ.தி.மு.கவினர்!

கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள தமிழகத்தின் சென்னை கோவை உள்ளிட்ட 5 மாநகராட்சிகளில் இன்று முதல் வருகிற ஏப்ரல் 29ம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கட்டுப்பாடுகளுடன் இயங்கி வந்த எந்த கடைகளும் இந்த நான்கு நாட்களுக்கு செயல்படாது.

இதனால், சாலையோரத்தில் வசிப்பவர்கள், வறுமைக் கோட்டுக்கு கீழ் உள்ள மக்கள் உண்ண உணவு கிடைக்காமல் மிகுந்த சிரமத்துக்கு ஆளாவார்கள். ஆகையால், அரசின் அம்மா உணவகத்தின் மூலம் கொரோனா தாக்கம் முடியும் வரை ஏழை எளியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்திருந்தார்.

இது ஒருபுறம் ஏழை மக்களுக்கு வயிற்றில் பாலை வார்க்கும் அறிவிப்பாக இருந்தாலும் அதிலும் புளியை கரைக்கும் செயல் நடந்து வருகிறது. என்னவெனில், பொதுவாக அம்மா உணவகங்களில் வரும் மக்கள் கூட்டத்துக்கு ஏற்ப கணித்து உணவு தயாரித்து விநியோகம் செய்து வரப்பட்டது.

தற்போது, நிலைமையோ தலைகீழாகியுள்ளது.இலவசமாக உணவு வழங்கப்படும் என்பதால், அதன் அளவு குறைக்கப்பட்டதோடு, எண்ணிக்கையும் குறைக்கப்பட்டுள்ளது. திரு.வி.க. நகர் மண்டலத்திற்கு உட்பட்ட பெரம்பூர், கொளத்தூர். திரு.வி.க.நகர் ஆகிய பகுதிகளில் உள்ள அம்மா உணவகங்களில் வழங்கப்படும் உணவின் அளவுகள் குறைக்கப்பட்டு நேரமும் குறைக்கப்பட்டுள்ளது.

காலை 9 மணிக்குள் இட்லியும், நண்பகல் 12 மணிக்குள் சென்றால் மட்டுமே சாப்பாடும் கிடைக்கப்பெறுகிறது. கொஞ்சம் தாமதமாக வந்தாலும் உணவு கொடுக்க பணியாஅளர்கள் மறுக்கின்றனர். 700 இட்லிகள் வழங்கப்பட்டு வந்த உணவகங்களில் தற்போது 300 இட்லிகள் மட்டுமே வழங்குவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளது.

Also Read: “கொரோனா காலத்திலும் விவசாயிகளின் மானியத்திலிருந்து ரூ.700 கோடியை பறித்த மோடி அரசு” : முத்தரசன் ஆவேசம்!

அதேபோல, அம்மா உணவகங்களில் இரவு நேரங்களில் வழங்கப்பட்டு வந்த சப்பாத்தியும் தற்போது முற்றிலும் நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. சப்பாத்திக்கு பதிலாக கலவை சாதம் வழங்கப்படுகிறது. இதனால், நீரிழிவு நோயாளிகள் மிகுந்த இன்னலுக்கு ஆளாகின்றனர்.

இது தொடர்பாக அம்மா உணவக ஊழியர்கள் கூறும் போது, இலவசமாக உணவு வழங்குவதால் குறைந்த அளவிலேயே தயாரித்து விநியோகிக்க வேண்டும் என தங்களது உயரதிகாரிகள் கூறியதாக தெரிவித்துள்ளனர். ஊடகங்களிடம் ஏழை எளியோருக்கு இலவசமாக உணவு வழங்கப்படும் என பட்டவர்த்தனமாக தெரிவித்து தற்போது அதில் அளவையும், நேரத்தை குறைத்தால் முழு ஊரடங்கு சமயத்தில் மக்கள் சாப்பாட்டுக்கு எங்கேச் செல்வார்கள்? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கொரோனா தாக்கம் அதிகரித்து வரும் வேளையில் அதிமுகவினர் அரசியல் செய்வதை விடுத்து ஏழை மக்களின் பசியை போக்குவதற்கான வழியை பார்க்க வேண்டும் என்பதே அனைவரது கோரிக்கையாக உள்ளது.

Also Read: பயிற்சி மருத்துவர்கள் முடக்கம், செவிலியர்களுக்கு கொரோனா - அரசு பொது மருத்துவமனையில் என்ன நடக்கிறது?